கத்தினான் தனசேகர். அந்தக் குரலில் உயிர்ப்பயம் தெரிந்தது.
தவழ்ந்து தவழந்து மேலே சமதளத்திற்குப் போய், அங்கிருந்து ஊருக்குள் ஓடிப் போய் யாரையாவது கூட்டிக் கொண்டு வரலாமென்றால், அதற்குள் தனசேகர் மொத்தமாய் உள்ளே போய் விடுவான், என்பதைப் புரிந்து கொண்ட முரளி, என்ன செய்வதென்றே தெரியாமல் பரிதவித்தான். இங்குமங்கும் ஓடினான்.
“அய்யோ...தனசேகர் என்னால் எதுவுமே செய்ய முடியலைடா” அழுதான்.
சட்டென்று தன் சட்டையைக் கழற்றி அதை இரண்டாய்க் கிழித்து, இரண்டு துண்டுகளையும் உருட்டி கயிறு போலாக்கி, ஒன்றோடொன்றை முடிச்சிட்டு கீழே விட்டான். ஆனால் அதன் உயரம் போதாது போக, சற்றும் யோசிக்காமல் தன் பேண்ட்டையும் கழற்றிக் கிழித்துக் கயிறாக்கினான்.
அக்கயிறு சேற்றில் நின்றிருந்த தனசேகரின் தலைக்கு மேல் தொங்கியதே தவிர, அவன் கைகளுக்கு எட்டவில்லை. இனி என்ன செய்யலாம்?..என்று யோசித்த முரளி, தான் அம்மணமாய் நின்றாலும் பரவாயில்லை, என்றெண்ணி இடுப்பிலிருந்த ஜட்டியையும், பனியனையும் கழற்றி, அவற்றையும் கயிறாக்கி இணைத்தான்.
இப்போது அந்தக் கயிற்றின் முனை தனசேகரின் கைக்குக் கிடைத்து விட, இறுகப் பற்றிக் கொண்டான்.
முரளி தன் மொத்த பலத்தையும் கொட்டி, அவனை மேலே தூக்கினான்.
ஆனால், அவனை விட தனசேகர் சற்றுப் பருமனானவன் என்றதால், முரளி “சர...சர”வென்று சறுக்கி உள்ளே விழப் போனான். ஆனால், அவன் கை கடைசி விநாடியில் அங்கிருந்த ஒரு பெரிய செடியைப் பற்றிக் கொள்ள, உள்ளே விழாமல் தப்பித்தான்.
அதே நேரம், கொஞ்சமாய் மேலே எழும்பியிருந்த தனசேகர் ”சர்”ரென்று கீழிறங்கி, சேற்றில் இன்னும் அதிகமாய் மூழ்கிப் போனான்.
“டேய்...முரளி...எப்படியாவது என்னைக் காப்பாற்றுடா...”அழுதே விட்டான் தனசேகர்.
நண்பனின் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியாத முரளி, மறுபடியும் முயற்சி செய்தான். இம்முறை தன்னுடைய நிர்வாண உடம்பை அந்தப் பெரிய செடிக்குப் பின்புறம் கொண்டு போய் அந்த செடியை தாங்கலாய் வைத்துக் கொண்டு தனசேகரை மேலே தூக்கினான்.
நிதானமாய்...கொஞ்சம் கொஞ்சமாய் மேலே வந்த தனசேகர், “டேய் விட்டுடாதடா...அப்படியே மெல்ல மெல்லத் தூக்குடா” கெஞ்சினான்.
ஒரு கட்டத்தில் கைகளிரண்டும் வலுவிழந்து விட, மூச்சு வாங்கினான் முரளி.
பாதியில் தொங்கிய தனசேகர், “இன்னும் கொஞ்சம்தான்...தூக்குடா...தூக்குடா...” பரபரத்தான்.
முரளியின் வயிற்றில் அந்தச் செடி உராய்ந்து உராய்ந்து பெரிய ரத்தக் காயத்தை ஏற்படுத்திக்