விருப்பப்பட்டது போல அன்றைய நாளை அம்மா வீட்டில் ஜாலியாக கழித்தவள், அடுத்த நாள் மாலையே மனோஜின் வீட்டிற்கு பெற்றோரின் துணையுடன் கிளம்பினாள்.
விநோதினியை நேராக சந்தித்து பேசி மனதை தெளிவாக்கி கொள்ளும் ஆவல் அவளுக்கு!
மஞ்சு, பத்மா, பிரேம்குமார் மூவரும் மனோஜின் வீட்டை அடைந்தப் போது அவர்களுக்காக கதவை திறந்தவள் வினோதினி தான்!
“மஞ்சு!” என்று மஞ்சுவை பார்த்த உடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று அணைத்துக் கொண்டாள் வினோதினி.
“வினோ, என்னைப் பார்க்க நீங்க ஏர்போர்ட் வரவே இல்லை! இதோ இந்த குட்டி பாப்பாக்காக உங்களை மன்னிச்சு விடுறேன்...” என்று வினோதினியின் கையில் இருந்த வேதாந்தை கையில் வாங்கிக் கொண்டாள் மஞ்சு!
“சாரி மஞ்சு. ரொம்ப டையர்டா இருந்தது அதான் வர முடியலை. வாங்க எல்லோரும் உள்ளே வந்து உட்காருங்க! அத்தை மாடில இருக்காங்க...” என்ற வினோதினி, மேலே எட்டிப் பார்த்தாள்!
அரவம் உணர்ந்து நிர்மலாவும் தன் அறையில் இருந்து வெளியே வந்திருந்தாள்!
“மஞ்சுவும், அவ அப்பா, அம்மாவும் வந்திருக்காங்க...” என்றாள் வினோதினி.
அத்தை என்று அழைக்காமல் மொட்டையாக வினோதினி சொன்ன விதம் மஞ்சுவின் கவனத்தை ஈர்த்தது!
மாடியில் இருந்த நிர்மலாவும் படிகளில் இறங்க தொடங்கி இருந்தாளே தவிர வினோதினிக்கு பதில் எதுவும் சொல்லவில்லை!
வினோதினியும் நிர்மலாவும் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் நடுவே என்னவோ பெரிய விஷயம் இருக்கிறது என்று மஞ்சுவின் உள்ளுணர்வு சொன்னது!
தொடரும்...