போன பர்ஸைத் தன் பாண்ட் பாக்கெட்டினுள் திணித்தார். “அப்ப நான் வர்றேன் அய்யா” சொல்லி விட்டுக் கிளம்பினான்.
அங்கிருந்து கிளம்பும் முன் அந்த மில்லை யோசனையுடன் பார்த்த தங்கவேலுவுக்கு, அங்குதான் தான் முரளியை முதன்முதலாய் சந்தித்த ஞாபகம் வர, புன்னகையை முகத்தில் சூடிக் கொண்டார்.
மில் கேட்டிற்கு வெளியே வந்து லாரியின் வேகத்தைக் கூட்டிய தங்கவேல்,
“பொருள் கொண்ட பேர்கள்...மனம் கொண்டதில்லை!...தரும் கைகள் தேடி...பொருள் வந்ததில்லை!...மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்...அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்” வாய் விட்டுப் பாடியபடியே டிரைவ் செய்தார்.
இரண்டு கிலோமீட்டர் கடந்து வந்ததும், சாலையோரம் ஒரு டீக்கடை தெரிய லாரியை இடதுபுறமாய்ச் செலுத்தி கடை முன் நிறுத்தினார்.
இவரைப் பார்த்ததும் டீக்கடைக்காரன், ஏதோ பல நாள் பழகியவன் போல், “வாங்கண்ணே...எப்படியிருக்கீங்க?” என்று சிரித்த முகத்துடன் கேட்க,
“ஒரு ஸ்ட்ராங் டீ போடப்பா” என்று சொல்லி விட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து தினத்தந்தியை எடுத்தார்.
“மாணவியிடம் சில்மிஷம் செய்த கல்லூரிப் பேராசிரியர் கைது”
“த்தூ....என்ன கருமம்டா இது?... “மாதா...பிதா...குரு...தெய்வம்!”னு தெய்வத்துக்கு முன்னாடி குருவை வச்சிருக்காங்க!...ஆனா இந்த நாதாரிப் பசங்க...இவ்வளவு கேவலமாய் இருக்கானுகளே?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
டீக்கடைக்காரன் டீயைக் கொண்டு வந்து முகத்துக்கருகில் நீட்ட, “ஏன் அப்படியே வாயைத் திறந்து உள்ளேயே ஊத்திடேன்”என்றார் தங்கவேலு எரிச்சலுடன்.
“ஹி...ஹி...”என்றபடி தள்ளிக் கொண்டான்.
அவனை முறைத்தபடியே அதை வாங்கிப் பருகிய தங்கவேலு, பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து டீக்கான தொகையைக் கொடுத்து விட்டு, பர்ஸை மீண்டும் பாக்கெட்டினுள் திணிக்கும் போது, அது முழுமையாய் உள்ளே செல்லாமல் பாதியிலேயே நின்று கொண்டது.
அதைக் கவனியாமல் வேக வேகமாய் வந்து டிரைவர் இருக்கைக்குக் குதித்தேறினார் தங்கவேலு. அந்தக் குதியலில் பாதி வெளியில் நீட்டிக் கொண்டிருந்த பர்ஸ் சத்தமில்லாமல் தரையில் விழுந்தது.