மீண்டும் லாரியை ஸ்டார்ட் செய்து சீரான வேகத்தில் பயணிக்கத் துவங்கினார் தங்கவேலு.
இரண்டு கிலோ மீட்டர்கள் தாண்டிய பின் ரியர் வியூ கண்ணாடியில் அந்த பைக் தெரிய, “இந்த பைக்காரன் ரொம்ப நேரமா நம்ம லாரிக்குப் பின்னாலேயே வந்திட்டிருக்கானே?...” தன்னைத் தானே கேட்டுக் கொண்டுக் கொண்டார்.
சிறிது தூரம் சென்ற பின் லாரியின் வேகத்தைக் குறைத்து இடது புறமாய் ஒதுக்கி லாரியை நிறுத்தினார்.
இப்போது அந்த பைக்காரன், லாரிக்கு முன்னால் வந்து தன்னுடைய பைக்கை நிறுத்தினான்.
“யாரிந்த இளைஞன்?” யோசித்தவாறே டிரைவர் இருக்கையிலிருந்து இறங்கி, நேரே அந்த இளைஞனிடம் வந்தார். அதற்குள் அவனும் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அவரை நோக்கி வந்தான்.
“என்னப்பா?...என்ன விஷயம்?” சற்றுக் கடுமையான குரலிலேயே கேட்டார்.
“சார்...என் பேர் தனசேகர்!...நீங்க அந்த டீக்கடையிலிருந்து கிளம்பும் போது உங்க பாண்ட் பாக்கெட்டிலிருந்து இந்த பர்ஸ் கீழே விழுந்து விட்டது” என்று சொல்லி “பம்”மென்று உப்பியிருந்த அந்த பர்ஸை நீட்டினான்.
சட்டென்று பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்த தங்கவேலு, “அட...ஆமாம்...என் பர்ஸ்தான்” என்றபடி அதை அவனிடமிருந்து வாங்கினார். வாங்கும் போதே “ரொம்ப நன்றி தம்பி” என்றார்.
“மொதல்ல உள்ளார அமௌண்ட் சரியா இருக்கா?ன்னு பாத்திடுங்க சார்” என்றான் அந்த இளைஞன்.
“ஏம்பா...பர்ஸை எடுத்து...இவ்வளவு தூரம் துரத்திட்டு வந்து குடுக்கறே?...இந்த அளவுக்கு நல்ல மனசு படைச்ச நீயாப்பா இதிலிருந்து பணத்தை எடுத்திருக்கப் போறே?...அடப் போப்பா” என்றார் தங்கவேலு.
“அதுக்காக சொல்லலை சார்!...ஒருவேளை பர்ஸ் விழுந்த போது அதிலிருந்து கொஞ்சமாய்ப் பணமும் வெளியில் விழுந்திருக்கலாமல்லவா?”
“ம்ம்ம்...அதுக்கு வாய்ப்பில்லை இருந்தாலும்...நீ சொன்னதுக்காக பார்த்திடறேன்” என்று சொல்லி அவர் பர்ஸைத் திறந்து பார்த்து விட்டு, “சரியாய் இருக்கு தம்பி”என்று சொல்லி விட்டு, “தம்பி...உன் பேர் என்ன