தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 23 - முகில் தினகரன்
அந்தத் தனியார் மருத்துவமனையில் கூட்டம் சற்றுக் குறைவாகவேயிருந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனசேகருக்கு தனது செல்வாக்கின் மூலம் உடனடியாக உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் பொன்னுரங்கம்.
விஷயம் கேள்விப்பட்டு புயலாய் வந்து சேர்ந்த ராமலிங்க பூபதி, அந்த இடம் ஒரு மருத்துவமனை என்று கூடப் பாராமல் தன் மனைவியைக் கரித்துக் கொட்டினார்.
“ஒரு தடவை...ரெண்டு தடவை இல்லை...நூறு தடவைக்கும் மேலே சொல்லியிருக்கேன்.. “அந்த சொக்குப் பயல் ஒரு தறுதலைப்பயல்...அவனையெல்லாம் வீட்டிற்குள் சேர்க்காதே”ன்னு...நீதான் “ஆயிரம் தான் இருந்தாலும் அவன் என் ஒரே தம்பி...”ன்னு சொல்லிச் சொல்லி என் வாயை அடக்கினே?...இப்ப அவன் செஞ்சிருக்கற காரியத்தைப் பார்த்தியா?”
அவரிடம் பதில் பேச முடியாதவளாய் தலை குனிந்து நின்றாள் சொர்ணம்.
அப்போது வேக வேகமாய் வந்த சீஃப் டாக்டர், “உடனடியா ஒரு ஆபரேஷன் பண்ணியாகணும்!“ என்றார்.
“பண்ணிடுங்க டாக்டர்!...என் மகன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பண்ணிடுங்க டாக்டர்” சுந்தரி டாக்டரைக் கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னாள்.
“ஆபரேஷனுக்கு ஏஒன் நெகடிவ் ரத்தம் வேணும்!...அந்த ரத்தம் ரேர் குரூப் ரத்தம் என்பதனால் அதை நாங்க ஸ்டாக் பண்ணி வைக்கறதில்லை!...அதனால அந்த குரூப் ரத்தம் குடுக்க....உடனடியா ஒரு ஆளை ஏற்பாடு பண்ணுங்க” அவசரமாய்ச் சொன்னார் டாக்டர்.
பொன்னுரங்கத்திடம் வந்த முரளி, “இந்த ஊர்ல அந்த குரூப் ரத்தம் உள்ள வேற ஆள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” கேட்டான்.
“இல்லையேப்பா?...அந்த அளவுக்கு எனக்குத் தெரியாதேப்பா” என்றார் அவர்.