முரளி ஆரம்பத்திலிருந்து நடந்த விஷயங்களை ரத்தினச் சுருக்கமாய் அந்த இன்ஸ்பெக்டருக்கு விவரித்து விட்டு,
“சார்...இப்ப அந்த தனசேகர் உயிர் பிழைப்பது...இதோ இந்த லாக்கப் ரூமிற்குள் இருக்கும் இந்தச் சொக்கு கையில்தான் இருக்கு சார்...அதனால....ப்ளீஸ் அவனைக் கொஞ்சம் எங்க கூட அனுப்பி வைங்க சார்” கெஞ்சினான் முரளி.
பொன்னுரங்கத்தைப் பற்றியும், ராமலிங்க பூபதியைப் பற்றியும், ஊருக்குள் அவர்களுக்கிருக்கும் செல்வாக்கு பற்றியும் இன்ஸ்பெக்டர் அறிந்திருந்தவராகையால், மெல்லப் புன்னகைத்து விட்டு, “இது ரொம்ப புதுசா இருக்குப்பா....குத்தியனையே ரத்தம் குடுக்க வைக்கறது...உண்மையிலேயே அதிசயம்தான்” என்றவர் எழுந்து லாக்கப் நோக்கிச் சென்றார்.
“என்ன சொக்கு...நாங்க பேசியதையெல்லாம் கேட்டியா?” லாக்கப் ரூமின் கம்பியை லத்தியால் தட்டியவாறே கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“சார்...நான் அங்க போனால் அங்கிருக்கற ஆளுங்க என்னை அடிச்சே கொன்னு போடுவாங்க சார்” சொக்கு பயந்தான்.
“நீ ரத்தம் குடுக்க சம்மதம்”னு சொல்லு...அந்தப் பாதுகாப்பை நான் கவனிச்சுக்கறேன்!...அது மட்டுமில்லை...உன் மேல் கேஸே வராம பார்த்துக்கறேன்” என்றார் இன்ஸ்பெக்டர்.
மகிழ்ந்து போன சொக்கு உடனே சம்மதித்தான். “அப்ப நாங்க கூட்டிட்டுப் போகலாமா சார்?” முரளி அவசரப்பட்டான்.
“நோ...அவனை நாங்க எங்க போலீஸ் ஜீப்லதான் கூட்டிட்டு வருவோம்!...” என்றார்.
மருத்துவமனையின் பெயரைச் சொல்லி விட்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான் முரளி.
சில நிமிடங்களிலேயே சொக்குவை ஏற்றிக் கொண்டு போலீஸ் ஜீப் கிளம்ப, தங்கவேலுவின் லாரி ஜீப்பைத் தொடர்ந்தது.
தொடரும்