“ஊர்ல பெரிய புள்ளி பொன்னுரங்கம்...அவரோட மகன் தனசேகர்!...அதே மாதிரி இன்னொரு பெரிய புள்ளி ராமலிங்க பூபதி...அவரோட மாப்பிள்ளை தனசேகர்!...இப்படி ரெண்டு திமிங்கலங்களுக்கு உறவாயிருக்கற பையனை நாம குத்திட்டோமே...அந்த ரெண்டு திமிங்கலங்களும் நம்மைத் தாக்க ஆளனுப்பினா நம்மால தப்ப முடியுமா?”ன்னு யோசிச்சிட்டு... “நமக்குப் பாதுகாப்பான ஒரே இடம் போலீஸ் ஸ்டேஷன்தான்”ன்னு முடிவு பண்ணி...சரண்டர் ஆகியிருக்கலாமல்ல?” தன் யூகத்தைச் சொன்னார் தங்கவேலு.
அதிலிருந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட முரளி, “அப்ப போலீஸ் ஸ்டேஷன் போய்ப் பார்க்கலாமா சார்?” கேட்டான்.
“செய்து பார்ப்போமே?...ஒரு முயற்சிதானே?”
போலீஸ் ஸ்டேஷன் நோக்கிப் பறந்தது லாரி.
அனுபவஸ்தர்களின் சிந்தனைகளும், யூகங்களும் நூற்றுக்கு நூறு சரியாக இல்லாவிடினும் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு சரியாகவே இருக்கும். தங்கவேலு யூகித்ததைப் போலவே அந்த சொக்கு போலீஸில் சரண்டர் ஆகி, லாக்கப் ரூமினுள் சத்தமில்லாமல் அமர்ந்திருந்தான்.
தங்கவேலுவும், முரளியும் அங்கு வருவதைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து கொண்டான்.
“இன்ஸ்பெக்டர் சார்...உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் தங்கவேலு.
“மொதல்ல நீங்க யாரு?ன்னு சொல்லுங்க அப்புறம் பேசலாம்” என்றார் இன்ஸ்பெக்டர் அந்த உத்தியோகத்திற்குரிய கம்பீரத்தோடு.
“சார்...நான் கோயமுத்தூரிலிருந்து வர்றேன்...இந்தப் பையன் இதே ஊர்தான்...”என்று சொல்லி தங்கவேலு முரளியைக் காட்ட, நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவனைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.