“போ அண்ணா...” என்று சிணுங்கினாள் ஜோதி...
மஞ்சு இதை எல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்... வினோதினியும், ஷண்முகமும் இன்னும் விழிக்கவில்லை போலும், அவர்களின் சத்தத்தையே காணோம்...
“அண்ணி, என்ன பேசாம அமைதியா இருக்கீங்க? அண்ணா தான் சொல்லலை, நீங்களாவது எங்களுக்கு ஒரு போன் போட்டு சொல்லி இருக்கலாமே...?”
“அவர் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும்னு ஆசைப் பட்டார் ஜோதி... அதான் நானும் எதுவும் சொல்லலை..” என்று ஜோதிக்கு பதில் சொன்ன மஞ்சு, மரியாதை நிமித்தம் நிர்மலாவிடம்,
“எப்படி இருக்கீங்க, அத்தை?” என்றும் விசாரித்தாள்.
“இருக்கேன் மஞ்சு...” என்பதற்கு மேலே நிர்மலா எதுவும் சொல்லவுமில்லை... மஞ்சுவிடம் நலம் விசாரிக்கவுமில்லை...!!!
ஒரு வினாடி என்ன செய்வது என்று புரியாமல் நின்ற மஞ்சு, உடனே சமாளித்துக் கொண்டு,
“வினோ இன்னும் எழுந்திருக்கலையா ஜோதி? குட்டி பாப்பாவும் தூங்குறான் போலருக்கு...” என்று ஜோதியிடம் கேட்டு பேச்சின் திசையை மாற்றினாள்.
“பெரிய அண்ணி அஞ்சரை மணி மாதிரி தான் எழுந்திருப்பாங்க... எனக்கு 6.10க்கு இங்கே பஸ் வரும், அதான் நான் சீக்கிரமே எழுந்து ரெடி ஆகுறேன்...”
“நீ இன்னும் லீவ் போடலையா??”
“கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம் மேலே இருக்கே அண்ணி... இன்னும் ஒரு பாத்து நாள் போகட்டும்...”