"ஹி ஹி ஹி... அப்படி இருந்தால் நல்லா தான் இருக்கும்...."
"அதெல்லாம் சரி, அது என்ன உனக்கு உங்க பாரதி மேடம் மேல இப்படி ஒரு ஈர்ப்பு? உங்க அண்ணன் கிட்ட அப்படி கறாரா பேசினதுக்காகவா?"
"தெரியலை அண்ணி... அண்ணன் கிட்ட நான் செஞ்சது தப்பு இல்லைன்னு அன்னைக்கு அவங்க அடிச்சு பேசினது மட்டும் இல்லை... அதற்கு அப்புறம் கூட அப்படி ஒன்னு நடக்காத மாதிரி நடந்துக்கிட்டாங்க பாருங்க அது தான் சூப்பர்... வேற யாராவதா இருந்தா ஒன்னு அண்ணா கிட்ட சரின்னு சொல்லிட்டு மனசுக்குள்ள இப்படி வீட்டில சொல்லி கூப்பிட்டுட்டு வந்துட்டாளேன்னு புழுங்குவாங்க... இல்லை, ஏதாவது விதத்தில என் மேல கோபத்தை காட்டுவாங்க... பாரதி மேடம் எதையுமே செய்யலை... அண்ணன் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் செய்ததை கூட அவங்க பெரிசா எடுத்துக்கலை..."
கண்கள் மின்ன சொன்ன மதுவை ஆச்சர்யமாக பார்த்தாள் உமா. இந்த இரண்டு ஆண்டுகளாக அவள் அறிந்திருந்த மதுமதிக்கும் இந்த மதுவிற்கும் சில வேறுபாடுகள் இருந்தன. நிரஞ்சன் மூலம் மது பற்றிய முழு விபரமும் அறிந்துக் கொண்ட போதும், அதை வெளிக் காட்டாமல் உமா மதுவிடம் பழகத் தொடங்கிய போது, மது நத்தை போல் தன்னை சுருக்கி கொண்டு இருந்தாள். அப்போதெல்லாம், பொதுவாக ஒன்றிரண்டு வார்த்தை தான் மது பேசுவாள். உமா அவளோடு தோழி போல் பழகவும், மெதுவாக மதுவும் உமாவுடன் நன்கு ஒட்டிக் கொண்டாள். அண்ணியுடன் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டாள். ஆனால் இப்படி உற்சாகம் கொப்பளிக்கும் மதுமதியை உமா இப்போது சில நாட்களாக தான் பார்க்கிறாள்.
**************
"ஹலோ விவேக்..."
நடந்து முடிந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை மனதில் எண்ணியபடி நடந்துக் கொண்டிருந்த விவேக், தன்னை யாரோ அழைப்பது உணர்ந்து திரும்பினான். சற்று தள்ளி அவன் நண்பன் பார்த்திபன் நிற்பதைக் கண்டான்.