“சரி சரி, நான் பேசுறேன்... ஆனால், அவங்க மொபைல் நம்பர் என் கிட்ட இல்லையே... உன்கிட்ட இருக்கா?”
“அது பிரச்சனை இல்லை, அண்ணி! என்னோட கிளாஸ்மேட் அபியைக் கேட்டால் வேற மேடம் கிட்ட பேசி வாங்கித் தருவாள்...” என்றாள் மது உற்சாகத்துடன்.
மதுவின் உற்சாகத்தை பார்த்து, ஸ்ருதியை தவிர மற்ற மூவருக்கும் சந்தோஷமாக இருந்தது. அவளின் உற்சாகத்தை குறைக்க விரும்பாமல்,
“சரி, நீ நம்பர் வாங்கிக் கொடு, நான் பேசுறேன்...” என்றாள் உமா.
***************
பவித்ராவும் பாரதியும் மதுவின் பங்களாவை அடைந்தப் போது, அங்கே ஒரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவர்கள் பயணம் செய்திருந்த டாக்சியை அனுப்பி விட்டு, இருவரும் செக்யூரிட்டி திறந்து விட்ட கேட் வழியாக உள்ளே சென்றார்கள்.
வண்ண விளக்குகளின் துணையுடன் மின்னிக் கொண்டிருந்த பங்களாவைப் பார்க்கவே அழகாக இருந்தது.
இருவரும் நடந்து வரும் போதே அவர்களை பார்த்து விட்ட உமா, அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றாள்.
“வாங்க... வாங்க... ரொம்ப தேங்க்ஸ் என்னுடைய இன்விடேஷனை மதித்து வந்ததற்கு...”
“என்ன நீங்க இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க... வேலை இருந்ததால் தான் மது கிட்ட வருவது சந்தேகம்னு சொன்னேன்... மற்றபடி, நீங்க போன் செய்து இன்வைட் செய்தது எங்க ரெண்டுப் பேருக்கும் தனி ஹானர்...” என்றாள் பாரதி.