“யோவ், சப் இன்ஸ்பெக்டர் ஐயாக்கு ஜோசியம் பார்த்து சொல்லு,” என்று சொல்லி விட்டு சென்றான்.
கிளி ஜோசியக்காரன் ஆர்வத்துடன் அபினவிடம், “உங்க பேரு சொல்லுங்க சார்!” என்றான்.
“எனக்கு ஜோசியம் எல்லாம் வேண்டாம்.” என மறுத்தான் அபினவ்.
“சும்மா பேரை சொல்லுங்க சார். கிளி என்ன தான் சொல்லுது பார்ப்போம்!” ஜோசியக்காரன் விடாமல் வற்புறுத்தினான்.
“இல்லப்பா, எனக்கு ஜோசியத்துல நம்பிக்கை இல்லை. வேண்டாம்.”
“என்ன சார் நம்பிக்கை இல்லைன்னு சொல்லிட்டீங்க? உங்களுக்கு வேண்டாம்னா விடுங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க பேரை சொல்லுங்க. கிளி சொல்றதைக் கேட்டு அசந்துப் போயிடுவீங்க.”
“இல்லப்பா.”
“என்ன சார்? சொல்லுங்க சார்.”
ஜோசியக்காரன் கட்டாயப்படுத்த, சட்டென,
“அஹல்யா!” என்றான் அபினவ்.
சொன்ன உடன் அவனுக்கே திக்கென்று இருந்தது.
ஜோசியக்காரன் கிளியின் கூண்டை திறந்து வெளியே விட்டு, ஒரு சீட்டை எடுக்க சொன்னான்.
இரண்டு மூன்று சீட்டுகளை எடுத்துக் கீழேப் போட்ட கிளி, ஒரு சீட்டை எடுத்து ஜோசியக்காரனின் கையில் கொடுத்தது.