”அப்படின்னா சொல்லுங்க என்ன பிரச்சனை”
”ஒண்ணுமில்லைம்மா எங்க ரெண்டு பேரோட நிலமும் பக்கத்து பக்கத்துலதான் இருக்கு நடுவில ஒரு வண்டி வழி பாதையிருக்கு, அந்த வழியில இப்ப யாரும் போறதும் இல்லை வர்றதும் இல்லை, ஒரு காலத்தில அந்த வழியை பயன்படுத்தினாங்க, இப்ப அது பயன்பாட்டில இல்லை அந்த பாதையை யார் எடுத்துக்கறதுன்னு பிரச்சனை, அப்ப பார்த்து இன்னொருத்தன் உள்ள நுழைஞ்சான், அந்த வண்டிவழி பாதை எனக்குன்னு சண்டை பிடிக்கிறான், அந்த பாதையால அவனுக்கு ஆகப்போறது ஒண்ணுமில்லை வேணும்னே வம்பு பண்றான், அவனை மிரட்டிப்பார்த்தோம் பணியலை, அந்த வண்டிவழி பாதையில கூட்டாளிகளை கூட்டிக்கிட்டு ராவான்னா தண்ணியடிக்கறதும் கறி சாப்பிடறதும் தப்பு தண்டா செய்றதுமா இருக்கான், சாப்பிட்ட கறி துண்டை நிலத்தில வீசி எறியறான் இதுக்காக நாய்ங்க எலிங்க எல்லாம் சுத்தி வந்து பயிரை நாசம் செய்யுது அவனுங்களை ஏதாவது செய்யனும்மா அதுக்காகதான் கொம்பன்கிட்ட உதவி கேட்டு வந்தோம்”
”எல்லாம் சரி எனக்கு ஒரு சந்தேகம் இந்த விசயத்தில கொம்பனால என்ன உதவி செய்ய முடியும், தகராறு செய்றவங்க கிட்ட பேச்சுவார்த்தை செய்து இந்த பிரச்சனையை சரிகட்டப்போறாரா என்ன”
”இல்லைம்மா கொம்பன்னா ஒரு மரியாதை இருக்கு, அவர் பேச்சுக்கு அந்த பசங்க கட்டுப்படுவாங்கன்னு நினைக்கிறோம்“
”ஒருவேளை கட்டுப்படலைன்னா”
”கட்டுப்படலைன்னா வழக்கம் போல அடிதடியில இறங்கிதான் அவங்களை விரட்டனும்”
”அடிதடியா கொம்பன் என்ன கூலிப்படைக்காரனா அடிதடியில இறங்கறதுக்கு, ஆக அவர் சண்டை போட்டு கெட்டவங்களை விரட்டனும், நீங்க நோகாம எட்ட இருந்து பார்த்து பிரச்சனை முடிஞ்சதும் கொம்பனுக்கு நன்றி சொல்லிட்டு உங்க வேலையை செய்யனும் அதானே”