அவர்கள் மூவரை தவிர அங்கு வேறு சிலரும் இருப்பதை அவர்கள் இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை! மற்றவர்களின் முகத்தில் இருந்த ஆர்வத்தை கவனித்த அர்ச்சனா, நந்தினியின் பேச்சுக்கு இந்து கோபத்துடன் பதில் சொல்லும் முன், குறுக்கிட்டு,
"இந்து! தேவை இல்லாத பேச்சு எல்லாம் இப்போ வேண்டாம்... நீ என்ன சின்ன குழந்தையா? வந்த விஷயத்தை கவனிப்போம்..." என்றார் அழுத்தமான குரலில்!
ஏற்கனவே நந்தினியின் பேச்சினால் கோபத்தில் இருந்த இந்து, அர்ச்சனா நந்தினியை ஒன்றும் சொல்லாமல், அவளை மட்டும் கண்டிக்கவும், இருக்கும் இடத்தை மறந்தாள்!
"சாரி ம்மா... இந்த மாதிரி இருக்குறவங்க கூட எல்லாம் என்னால பேச முடியாது... நீங்க வேண்டியதை பேசிட்டு வாங்க... நாம ரெண்டு பேரும் அப்புறம் பேசலாம்..." என்றவள், அதற்கு மேல் அங்கு இருக்காது எழுந்து சென்று விட்டாள்!
இந்து சென்ற திசையை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் முகத்தில் சிந்தனை இருந்தது. ஆனால், உடனேயே தன்னை சமாளித்துக் கொண்டு, மற்றவர்களை பார்த்து பொதுவாக புன்னகை புரிந்த அர்ச்சனா,
"சின்ன குழந்தையை தூக்கி எம்.டி பதவியிலே உட்கார வச்சிட்டோம் போல இருக்கு... சரி, சரி நாம வேலையை பார்ப்போம்..." என்றார்.
🌼🌸❀✿🌷
ஆண்டு விழாவிற்காக செய்ய வேண்டியவற்றை குறித்து மற்றவர்களுடன் பேசி, திட்டமிட்டு முடித்த உடனே அர்ச்சனா நேராக இந்துவின் அறைக்கு தான் சென்றார். ஆனால் இந்து அங்கே இல்லை. நிலாவை அழைத்துக் கேட்டப் போது இந்து அரை மணி நேரம் முன்பே ஆஃபீஸில் இருந்து கிளம்பி சென்றுவிட்டாள் என்ற தகவல் கிடைத்தது. இந்துவின் குணத்தையும், கோபத்தையும் பற்றி அறிந்து இருந்ததால் அர்ச்சனா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.