தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 56 - பிந்து வினோத்
56. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மறுநாள் காலை, டிஃபன் தயாராகும் முன்பே வேலை இருப்பதாக உமாவிடம் சொல்லி விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் பாரதி. அன்று முதல் அதுவே வாடிக்கையாகிப் போனது. பாரதியிடம் காலை உணவை சாப்பிட்டு கிளம்ப சொல்லி பார்த்தாள் உமா. ஆனால் பாரதிக்கு உணவு உண்ணாமல் சீக்கிரம் கிளம்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் இருந்தது! பாரதி ஏதேனும் உணவு உண்கிறாளா என்றே தெரியவில்லை... விவேக்கிடம் பேசி பார்க்கலாம் என்றால் அவனை பார்ப்பதே குதிரை கொம்பாக இருந்தது!
ஒரு சில நாட்கள் பார்த்து விட்டு, பவித்ராவிடம் பேசினாள் உமா. அதிசயத்திலும் அதிசயமாக பவித்ராவிற்கு வீட்டில் நடந்த விஷயங்கள் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பாரதி பவித்ராவிடம் எதையும் சொல்லாமல் இருப்பதற்கான காரணம் புரியாவிட்டாலும், உண்மையை பவித்ராவிடம் சொல்வது தான் சரி என யோசித்து தனக்கு தெரிந்த அளவில், பாரதி விவேக் நடுவே இருக்கும் சண்டைப் பற்றி சொன்னாள் உமா!
பவித்ராவிற்கும் நடந்த விஷயங்களை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. பாரதி அவளிடம் எதையுமே சொல்லவில்லையே என்று வருத்தப் பட்டாள் அவள்.
“எனக்கும் பாரதி எதையும் உங்க கிட்ட சொல்லாமல் இருக்குறது ஆச்சர்யமா தான் இருக்கு பவித்ரா... பாரதியை நினைச்சு எனக்கு கவலையாவும் இருக்கு... நீங்க அவக் கிட்டப் பேசி பாருங்களேன்...” என உமா சொல்லவும், யோசனையுடன்
“ம்ம்ம்... சரி உமா....” என்றாள் பவித்ரா!
🌼🌸❀✿🌷
தன்னுடைய கிளாஸை முடித்து விட்டு வந்த பவித்ரா, பாரதியின் அருகில் இருந்த தன் நாற்காலியில் அமர்ந்தாள். கையில் இருந்த பேப்பர்களின் மீது தன் முழு கவனத்தை செலுத்தி இருந்தாள் பாரதி. அவளை உற்றுக் கவனித்துக் கொண்டே,
“பாரு, உனக்கு இன்னைக்கு வேற க்ளாஸ் இருக்கா?” என விசாரித்தாள் பவித்ரா.