சங்கமேஸ்வரன் பயப்படவும் சரியாக இருந்தது, ஒரு நொடியில் அந்த அறையில் இருந்த ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டது, அறைக்கதவு படார் என சாத்தப்பட்டது, அறையில் இருந்த விளக்குகள் பட்டென அணைந்துவிட்டது. அந்த அறையே கும்மிருட்டாக அதில் நாச்சியாவின் முகமும் சங்கமேஸ்வரனின் முகம் மட்டும் பளிச்சென தெரிந்தது.
”ஆண்டாள்”
”ம் நானேதான்”
”ஏன் வந்த”
”உங்களுக்காகதான் வந்தேன், நீங்க என் மேல வைச்சிருந்த அன்புதான் என்னை இங்க கூட்டிட்டு வந்தது, நீங்க என் நினைப்பிலயே காலத்தை தள்ளிட்டீங்க போல இனி நீங்க வாழற காலத்திலயாவது என்னை பார்த்துக்கிட்டே நிம்மதியா வாழலாம்னு வந்துட்டேன்” என்றாள்
”வேணாம் வேணாம் நீ பொய், நீ உண்மையில்லை, நீ என்னோட கற்பனை, நான் கனவு காணறேன் போல ஆமா இது எல்லாமே கனவுதான் கனவுதான்” என சொல்லிக் கொண்டே சங்கமேஸ்வரன் கண்களை மூடித் திறந்தார்.
ஆண்டாள் நாச்சியாவோ கலகலவென சிரித்தாள். அதே சிரிப்பு, அதே முகம், அதே பார்வை அதைக்காண காண சங்கமேஸ்வரனின் கைகால் நடுங்கியது
”ச்சு ச்சு ச்சு அய்யோ பாவம், ஒரு காலத்தில உங்க மேல நான் இரக்கப்பட்டேன், உங்களால எல்லா பிரச்சனையும் தீரும் இந்த ஊரே ஒண்ணாகும்னு ஆசைப்பட்டேன் ஆனா, அப்படி எதுவும் நடக்கலை, உங்களுக்கு ஏத்த மாதிரியே எல்லாத்தையும் மாத்திட்டீங்க போல என்ன இருந்தாலும் சில விசயங்களை உங்களால மாத்தவே முடியலை பார்த்தீங்களா இன்னுமா புரியலை நான் அகத்தியனை பத்தி சொல்றேன்”
”வேணாம் அவன் பாவம் நல்லவன், அவனை விட்டுடு”