அதனால் இந்த பக்கம் அதிக மக்கள் நடமாட்டம் எப்போதுமே இருக்காது. விடிகாலை நேரத்தில் கேட்கவே வேண்டாம்!
மற்றவர்கள் இந்த பக்கம் இந்த நேரத்தில் வர பயப்படலாம். ஆனால் சக்திக்கு பயம் என்ற ஒன்று தெரியாது என்பதால் எதைப் பற்றியும் யோசிக்காமல் வந்திருந்தாள்.
நகராட்சி அமைப்பு வளர்க்கும் சாலையோர ரோஜா செடியில், பனி மூடிய மஞ்சள் நிற ரோஜா ஒன்று அவளின் கண்ணில் பட்டது. ஒடுவதை நிறுத்தி அதன் அழகை ரசித்தாள். ரோஜாப்பூவே அழகு. பனியில் நனைந்திருந்த அந்த ரோஜாப்பூ அதிக அழகாக இருந்தது! அவளையும் அறியாமல் அதை விரலால் மெல்ல தொட்டாள்.
அடுத்த வினாடி எதுவோ ஒன்று, ரோஜா செடியின் பின்னால் இருந்த புதரில் இருந்து சக்தியை நோக்கி பாய்ந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து, தலையையும் உடலையும் வலது பக்கமாக வளைத்தாள் சக்தி.
அவள் மேலே பாய் வந்த ‘அது’ குறி தவறி சக்தியின் பின்னால் போய் விழுந்தது.
பக்கத்தில் இருக்கும் மலை பிரதேசத்தில் இருந்த காட்டு விலங்கு ஏதாவது வதிருக்கிறதா என்ற சந்தேகத்துடன் ‘அதை’ப் பார்த்த சக்தி கடுப்பாகிப் போனாள்.
சக்தியின் கோபத்தை கண்டுக்கொள்ளாமல் ‘அது’ மீண்டும் எழுந்து நின்று ‘ர்ர்ரர்ர்ர்ர்’ என்றது.
அந்த ‘அது’ ஒரு எலக்ட்ரானிக் நாய் குட்டி போல இருந்தது! குழந்தைகளின் விளையாட்டு பொம்மையா இது?! இல்லையே, இது போல ஒன்றை அவள் முன்பே பார்த்திருக்கிறாளே. இது இங்கே எப்படி? சக்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
சக்தி கேள்வியும், யோசனையுமாக நிற்க, ‘அது’ திரும்பவும் அவள் பக்கமாக வந்தது. ஆனால் அவளை தாக்க முயற்சி செய்யாமல், தாண்டிப் போய் ரோஜா செடியின் முன்னால் நின்றது.
சக்தி கைகளை கட்டிக் கொண்டு அதையே பார்த்தாள். அதுவும் நின்றுக் கொண்டு அவளையே கேமரா கண்களால் பார்த்தது.