பாதியில் நிறுத்தும் விதத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
வினாயக் பெயருக்கு சாத்தி வைத்திருந்த வாசல் கதவை திறந்தான். அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டர் நின்றிருந்தான்!
“ஹலோ, நான் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன். இங்கே வினாயக்ன்றது யாரு?”
“நான் தான் இன்ஸ்பெக்டர் வினாயக். என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என விசாரித்தான் வினாயக்.
ப்ரியம்வதா குழப்பம் அப்பிய மனதுடன் வினாயக்கை ஒட்டி வந்து நின்றாள்.
🌼🌸❀✿🌷
தென்றல்வாணன் தான் கேள்விப்பட்ட மொத்த விபரங்களையும் சொல்லி விட்டு வினாயக்கை கூர்ந்து கவனித்தான்.
"ஷூட்டிங் ட்ரோன்!" வினாயக் யோசனையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
"எதுக்கு வினாயக் கிட்ட இதைப் பத்தி கேட்குறீங்க இன்ஸ்பெக்டர்?" ப்ரியம்வதாவின் அந்த கேள்வியில், ஆர்வத்தை விட கோபம் அதிகமாக இருந்தது.
வினாயக் யோசிப்பதை விட்டு விட்டு ப்ரியம்வதாவை ஆவலுடன் கவனித்தான். எப்போதுமே அவனுக்கு சப்போர்ட் செய்ய ஒருத்தரும் இருந்ததில்லை. ப்ரியம்வதா அவன் மேலே காட்டும் அக்கறையும், அன்பும் அவனை ஸ்பெஷலாக உணர வைத்தது. அவனுக்காக பேச ஒரே ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறதே! அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது!
"எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க இவரை பத்தி சொன்னாங்க. இவர் சைன்ட்டிஸ்ட், இவருக்கு இதைப் பத்தி விபரங்கள் தெரிஞ்சிருக்கலாம்னு சஜஸ்ட் செய்தாங்க!" தென்றல்வாணனுக்கு விளக்கம் கொடுக்க பிடிக்கவில்லை. ஆனாலும், வேண்டா வெறுப்பாக ப்ரியம்வதாவிற்கு விளக்கம் கொடுத்தான்.