ஸ்ரீனிவாஸ் பதில் சொல்ல காத்திருக்காமல் அங்கிருந்து நடந்தாள்.
🌼🌸❀✿🌷
காடு போல அடர்த்தியான மரங்கள் சூழப் பட்டிருந்த சாலையில் இலக்கில்லாமல் நடந்தாள் ப்ரியம்வதா.
என்னவோ சரியில்லை என்ற உணர்வு அவளுக்கு இருந்துக் கொண்டே இருந்தது.
வினாயக் ஏன் இப்படி மர்மமாக நடந்துக் கொள்கிறான்? மற்றவர்கள் சொல்வதுப் போல அவனுக்கு மன வியாதி என்று அவளுக்கு தோன்றவில்லை. ஏதாவது காரணத்திற்காக இப்படி நடிக்கிறானா? வினாயக் அப்படி அவளிடம் உண்மையை சொல்லாமல் மறைக்க கூடியவனா?
அவளுடைய காதலை எப்போதாவது புரிந்துக் கொள்வானா??
ப்ரியம்வதா கலைவாணி மேலே தான் பெரிய நம்பிக்கை வைத்திருந்தாள். கலைவாணி வினாயக் பற்றி கடைசியாக பேசிய விதம் சரியாக இல்லை. ஸ்ரீனிவாஸுடன் அவள் பேசுவதை வேறு அம்மா ஏன் அப்படி திருப்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள்?
வினாயக்கிடம் நேரடியாக அவளுடைய காதலை பேச இப்போதும் ப்ரியம்வதாவுக்கு தயக்கமாக இருந்தது. அவளுக்கு வினாயக்கின் குணம் தெரியும். அவனுக்கு குடும்பம், காதல் எதிலேயும் ஆர்வம் இல்லை. அவள் காதலை சொல்லி அவன் எனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டால்?? அவளுடன் பேசுவதையே நிறுத்தி விட்டால்???
நினைக்கும் போதே அவளுக்கு வலித்தது. வினாயக் அவளுக்கு பக்கத்தில் இருந்தாலே போதும்!
எப்படி, எப்போது இந்த குழப்பங்கள் தீரும்?
பக்கத்தில் கேட்ட பேச்சு சத்தம் ப்ரியம்வதாவின் யோசனையை தடுத்தது.