தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
69. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சஞ்சீவின் வீட்டிற்கு அவனின் துணையுடன், அவர்கள் இருவரின் உறவினர் புடை சூழ வந்த பிறகும், அவளை சுற்றி இருந்த கலகலப்பு எதுவும் இந்துவின் கருத்தில் பதியவே இல்லை. கடந்த சில நாட்களாக அவளுக்குப் பழக்கமாகி போய் விட்டிருந்த பொய் புன்னகை அவளின் உதட்டில் இப்போதும் மற்றவர்களுக்காக இருந்தது. ஆனால், அவளின் மனம் மற்ற குழப்பங்களில் தான் உழன்றுக் கொண்டிருந்தது. அன்று காலை வரை சரவணன் அர்ச்சனா தம்பதியினரின் மகளாக இருந்தவள், இப்போது சஞ்சீவின் மனைவி என்னும் புது பதவியை பெற்றிருக்கிறாள். அதன் கூடவே வரும் கடமைகளையும், சஞ்சீவின் நிபந்தனைகளை அவள் பின்பற்றுவதால் ஏற்படக் கூடும் மன வருத்தங்களையும் நினைத்து இப்போதும் அவளின் மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்தது.
"ஹலோ இந்து! என்ன பேசவே மாட்டேங்குற? இப்படி தலையை குனிஞ்சு உட்கார்ந்திருந்தா அதுக்கு பேர் வெட்கமா?" என்றாள் கீதா.
"அட போங்க கீதா அக்கா நீங்க வேற!!! அவளே எப்போடா இவங்க ரெண்டுப் பேரும் இங்கே இருந்து கிளம்புவாங்க சஞ்சுசுசுசு வருவாருன்னு வெயிட் செய்துட்டு இருக்கா," என்ற வீணாவை நிமிர்ந்துப் பார்த்து, சூடாக ஒரு முறை முறைத்தாள் இந்து!
"அட பரவாயில்லையே, புது பொண்ணுக்கு இன்னமும் கூட முறைக்க எல்லாம் தெரியுதே!!! ஆனா இப்போ எதுக்கு இந்த பார்வை?"
வீணா கேட்ட கேள்விக்கு இந்து பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாது, கீதா, "வேற என்ன வீணா, இந்துவோட சஞ்சீவை நீ இப்படி செல்லமா கூப்பிட்டா எப்படி? அது தான் அவளுக்கு கோபம்," என்றாள்!
இந்து இப்போதும் பதில் ஒன்றும் சொல்லாது அமைதியாகவே இருந்தாள்!
"அடடா இந்து, இதுக்கா கோபம்??? நியாயப்படி பார்த்தா சஞ்சீவ் மேல தான் உனக்கு கோபம் வரணும்! மண்டபத்துல இருந்து வீட்டுக்கு வந்தப்புறம் உன்னை இப்படி எங்க கூட தனியா விட்டுட்டு அவர் பாட்டுக்கு மாடிக்குப் போயிட்டார்!"