"உன் வீட்டுல இருந்து எடுத்து வந்த பெட்டி எல்லாம் உன் ரூம்லேயே வச்சிருக்கேன்."
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் சரி என்று தலை அசைத்தாள் இந்து. தொடர்ந்து, எதுவும் பேசாமல், சஞ்சீவ் முன்பு சுட்டிக் காட்டிய பக்கம் இருந்த கதவை திறந்து அங்கிருந்த அறைக்குள் சென்றாள். அறையின் உள்ளே வந்ததும் சஞ்சீவ் நின்றிருந்த பக்கமே பார்க்காமல் கதவை சாத்தியவள், என்னவோ தோன்றவும் கதவில் இருந்த ஆட்டோ லாக்கை உபயோகித்து கதவைப் பூட்டினாள்.
சஞ்சீவ் சொன்னதுப் போல அந்த அறை நன்றாக தான் இருந்தது. கொஞ்சம் சிறியது என்றாலும், ஒருவர் தங்குவதற்கு வசதியாக கட்டமைக்கப் பட்டிருந்தது. அங்கேயே டிவி, க்ளாக், டேபிள், சேர், வார்ட்ரோப் என எல்லாமும் இருந்தது! ஓரத்தில் தெரிந்த சிறிய கதவு அட்டாச்ட் பாத்ரூம் இருப்பதையும் சொன்னது!
இந்த அளவிற்கு திட்டம் தீட்டி அறையை கட்டி இருக்கிறானே, நிஜமாகவே வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறானா? இந்த கேள்வியின் தாக்கத்தில் அவளுக்கு மனதில் வலித்தது.
ஆனால் மனதில் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்ததால், அவளால் யோசிக்கவும் முடிந்தது!
ஒன்றும் இல்லாத சிறிய விஷயத்தை சஞ்சீவ் ஏன் இப்படி பூதாகரமாக்குகிறான் என்று அவளுக்கு புரியவில்லை. உண்மையில் அவனுடைய கோபம் அவனுடைய அம்மா அவளிடம் சொன்னதை பற்றி இல்லை, அதை அவள் அவனிடம் சொல்லாமல் வீணாவிடம் சொல்லியதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பது தான் என்று அவளுக்கு தோன்றியது. எதுவாக இருந்தாலும் பேசினால் தானே தெரியும்! அதை விட்டு விட்டு நீ அங்கே இரு, நான் இங்கே இருக்கிறேன் என்றால் எப்படி???
அவளுக்கு பிடித்த பழைய ஸ்மைலிங் சஞ்சீவ் சீக்கிரமே இந்த உம்மணாம்மூஞ்சி சஞ்சீவை தள்ளி விட்டு வந்துவிடுவான். அதன் பின் எல்லாம் சரி ஆகி விடும். சஞ்சீவ் கட்டாயம்