சஞ்சீவ் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லையே!!! என்ன செய்வது என்று புரியாது நின்ற இடத்திலேயே நின்றவள், பக்கத்தில் ஏதோ அரவம் கேட்கவும், சதம் வந்த பக்கமாக திரும்பினாள். சஞ்சீவ் அவள் கண்டுப்பிடித்திருக்காத ஷோஃபாவின் பின் இருந்த மூன்றாவது கதவை திறந்து உள்ளே வந்துக் கொண்டிருந்தான்! அந்த அறை சுவரைப் போலவே வடிவமைக்கப் பட்டிருந்த அந்த கதவு பாலகனிக்கு சென்று வர இருக்கும் வழி என்பது சஞ்சீவின் பின்னால் தெரிந்த காட்சியை வைத்து அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
இந்து அசையாமல் நின்ற இடத்திலேயே நிற்க, நேராக அவளருகில் வந்த சஞ்சீவ்,
"நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு தானே?" என்றான்.
அவன் பேச்சில் கோபமும் இல்லை, குழைவும் இல்லை!
உண்மையில் எந்த விதமான உணர்ச்சியுமே இல்லாமல் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு சஞ்சீவை நேராகப் பார்த்து ஆமெனும் அர்த்தத்தில் தலை அசைத்தாள் இந்து.
ஒன்றிரண்டு வினாடிகள் அவன் பேசாமல் அவளையே பார்க்கவும், அவள் ஏதாவது சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறானா என்ற கேள்வி இந்துவிற்குள் வந்தது! அதைப் பற்றி அவள் முழுவதும் யோசிக்கும் முன்பு சஞ்சீவே பேசினான்!
"குட்! அந்த பக்கம் இருக்க ரூம் உன்னுடையது. நாம ஒரே ரூம்ல தங்கி இருந்தா எனக்கு ப்ரைவசி இருக்காதுல, அதுக்காக தான் உனக்காக அந்த தனி ரூம் அரேன்ஜ் செஞ்சு வச்சிருக்கேன். அங்கேயே எல்லா வசதிகளும் இருக்கு. ஏதாவது பேசனும்னா, ரெண்டு ரூமுக்கு பொதுவா இருக்க இந்த இடத்துல இருந்து பேசலாம். எந்த காரணத்துக்காகவும் நீ என் ரூம் உள்ளே வர கூடாது."
ஏதோ புதிதாக ஹாஸ்டலில் தங்க வந்திருக்கும் பெண்ணிடம் விளக்கம் சொல்லும் வார்டன் போல் சஞ்சீவ் பேசவும் இந்துவின் மனதில் இருந்த இறுக்கம் சற்றே குறைந்து கோபம் எட்டிப் பார்த்தது! அவனுக்கு மட்டும் கோபம் இல்லையே, அவளுக்கும் கூட தான் அவனிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள விஷயங்கள் இருக்கிறது!