அவளுக்கு ஐந்து நிமிட பால்கோவா செய்கிறேன் என சொல்லிக் கொண்டே, “கண்ணு, இந்த கண்டென்ஸ்ட் மில்க்கை ஓபன் பண்ணிக் கொடு” என்று அந்த டப்பாவை அவளிடம் கொடுத்து அதை திறக்கும் தகரவேட்டியை தேடினான். கிடைக்கவில்லை. அவள் புறம் இருந்த டிராயரை திறந்து அதில் பார்க்க சொன்னான். அவள் சற்று எக்கி அந்த ட்ராயர் கதவை திறந்து தேடும் பொழுது அவள் தாவணி லேசாக விலகியது. அப்போது அவள் புறம் திரும்பிய கார்த்திக், பளிச்சென்று தெரிந்த அவள் இடையில் பார்வையை பதித்தான். அவன் மூளை ஒரு மூலையில் குய்யோ முறைய்யோ என கத்திக் கொண்டிருக்க, அவன் பார்வையோ அபாய வளைவில் எச்சரிக்கையை மீறி பயணித்துக் கொண்டிருந்தது. படக்கென்று திரையிட்டது போல, அவள் ஒரு கையால் தாவணியை சரி செய்ய தன்னிலைக்கு வந்தவன், “நம்மை பார்த்து விட்டாலோ” என்ற பயத்தில் அவளை பார்த்தான். அவளோ தேடுவதில் கவனமாக இருந்தாள்.
அவள் அவனை பார்க்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சுடன், “தேட வேண்டாம் விடு, கத்தியை வைச்சு திறந்திடுறேன்.“ முழுகவனத்தையும் அந்த டப்பாவில் திருப்பினான். அவன் அருகில் வந்த சந்தியா, சாய்ந்து பார்த்த படி, விரல்களால் அவள் கேசத்தை சரி செய்தவாறு அதை பார்க்க, அதற்கு மேல் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. “இது சரி வராது. நீ வீட்டுக்கு கிளம்பு “ என்று அவன் சொல்லிக் கொண்டே டப்பாவை திறக்க முயல்கையில் “சதக்”கென கத்தி அவன் ஆள்காட்டி விரலை கிழித்தது.
“அய்யோ ரத்தம்…” பதறிய சந்தியா அடுத்த வினாடி, அவள் விரலில் அடிபட்டது போல விரலை வாயில் வைக்க போனவள்…(ரத்தம் வீணாகக் கூடாதாம்!!!) பின் அருகில் இருந்த குழாயில் அவன் கையை கழுவினாள். அவனை ஒரு ஐந்து வயது குழந்தை போல ஒரு கையில் பிடித்தவாறு, “மஞ்சள் ஆன்டிசெப்டிக்…போட்டா இன்பெக்ஷன் வராம இருக்கும் என்று சொல்லிக் கொண்டே “மஞ்சள் எங்க கார்த்திக்” அவன் பதில் வருவதற்கு முன் பட படவென்று ஒரு கையால் தேடி எடுத்து, அதே கையாலே திறந்து, காயத்தின் மீது போட்டு விட்டு, அடுப்பு மேட்டின் ஓரத்தில் இருந்த அவளது கைக் குட்டையை எடுத்து தண்ணீரில் நனைத்து இறுக கட்டினாள். அதுவரை தனக்கு அடிபட்டது போல அவனது கையை பிடித்துக் கொண்டே பரபரப்பாக இயங்கியவள் சற்று தளர்ந்து “கார்த்திக், முடிஞ்ச அளவிற்கு டைட்டா கட்டு போட்டேன். இன்னும் ப்ளட் வந்தா சூர்யாவை” என்று மூச்சிரைக்க சொல்லும் போதே அவன் சூடான மூச்சுக் காற்று அவள் பின்கழுத்தில் மோதுவதை உணர்ந்தாள்.
பின்னாலிருந்து அவளை அணைத்த படி, கண்களை மூடி அவள் கூந்தல் புதையலுக்குள் சிக்கிக் கிடந்தான் கார்த்திக். சந்தியாவிற்கு, என்ன தான் அவன் உள்ளம் கவர் கள்வனாக இருந்தாலும், எதிர்பாராத அணைப்பில் உண்டான அதிர்ச்சி, கூச்சம், பயம் அதற்கும் மேலாக ஒரு கோடி மின்னல் உடம்பிற்குள் பாய்ந்த உணர்வு எல்லாம் சேர்ந்து எதோ செய்தது. அவளின் அத்தனை நாள நரம்புகளிலும் சட்டென ரத்தம் தடை பட, இதயமோ எகிறி குதிப்பது போல அடித்துக் கொண்டது. அவன் உணர்ச்சிகளின் தாக்கத்தில் இருப்பதை பெண்மைக்கே உரிய தற்காப்பு உணர்வு அறிவிக்க அவனை விட்டு மெதுவாக விலக முயற்சித்தாள். அவள் இடையை மென்மையாக பிடித்திருந்த அவன் விரல்கள், சற்று அழுத்தி பிடித்து “போகாதே” என்று அறிவிப்பை குறிப்பாக காட்டி விட்டு, கூந்தலில் புதைந்த முகத்தை சற்று நகற்றி அவள் கன்னத்தை உரசியவாறு அணைப்பை பலப்படுத்த அவனோடு சேர்ந்து அவளும் சொக்கிப் போனாள்.
சிறிது நொடிகள் அவன் அணைப்பில் இருந்தவளை ஜன்னல் வழியே வந்த மின்னல் ஒளி கலைக்க சுதாரித்துக் கொண்டவள், இந்த முறை வில்லில் இருந்த புறப்பட்ட அம்பாய் அதிவேகமாக அவனிடம் இருந்து விலகி ஓடினாள். அதுவரை அவள் மேனி வாசத்தில் கட்டுண்டு கிடந்தவன் சட்டென்று அவள் விலகவும் நிலை குலைந்து போய் அவளை பிடிக்க எத்தனிக்க அவன் கையில் சிக்கியதோ அவள் தாவணி.
அவன் இழுத்த வேகத்தில், தாவணியோடு ஊக்கால் இணைக்கப் பட்ட சட்டை கிழிந்து, உள்ளாடை வெளியில் தெரிய, தாவணியோ அவன் கையோடு வந்து விட்டது. இதை எதிர்ப்பாக்காத அவன் கையில் இருந்த தாவணி நழுவ விட்டு என்ன செய்வதென தெரியாமல் திடுக்கிட்டான்.மேலாடை இல்லாமல், அவள் கைகள் தன்னிச்சை செயலாக நெஞ்சின் குறுக்காக வந்து மறைக்க முயன்றது. அப்போது வெளியில் இடி முழக்கம். அது அடங்கும் முன், இடியென முழங்கினாள் சந்தியா. “சீ...கார்த்திக்.....யு ஆர் சோ சீப். இதை செய்ய வெக்கமா இல்ல?”, வார்த்தைகளை கடித்து துப்பி, பார்வையால் அவனை துட்ச்சமாக துளைத்தெடுத்தாள்.
அடுத்தடுத்த நிகழ்வுகள் அவனையும் மீறி நடப்பது போல உணர்ந்த கார்த்திக், அவள் பார்வையிலும் பேச்சிலும் சுக்கு நுகுராக உடைந்தான். அவமானத்தில் அவனை ஏசி விட்டு, குறுக்கிட்ட கைகளால் நெஞ்சை முடிந்தவரை மறைத்த படியே பின்னோக்கி நடந்தவளை வேகமாக நெருங்கி தனது டி-ஷார்டை கழட்டி (ஹீரோ ன்னா இதை செய்தே ஆக வேண்டும் அன்றோ!) அவள் மேல் போர்த்தி விட்டு விறு விறுவென அங்கிருந்து அகன்றான். மதுவை அழைத்து, உடனடியாக சந்தியாவிற்கு அழைத்து பேசச் சொன்னான். பின், பரமசிவம் வீட்டிற்கு சென்று மீராவை அழைத்து வந்தான்.
“அண்ணி உள்ள போய் சந்தியாவை கூட்டிட்டு வாங்க. அவளை வீட்டில ட்ராப் பண்ணிடலாம். நான் கார்ல வையிட் பண்றேன்” என அவன் சொன்னதை கேட்டு மீராவிற்கு ஒன்னும் புரியவில்லை. அவன் முகம் கவலையில் தோய்ந்திருந்தது. “என்னாச்சு காதி” பயத்துடன் கேட்டாள். ‘அண்ணி...ப்ளீஸ்” என்று மட்டும் தேய்ந்த குரலில் சொல்லி விட்டு கண்களை மூடி, கைகள் இரண்டையும் பிடரியில் வைத்து காரின் சீட்டில் சாய்ந்து கொண்டான்.
யோசனையோடு மீரா உள்ளே சொல்ல, சந்தியா மதுவின் உடையணிந்து தயாராக கிளம்பியிருந்தாள். மீராவிடம் ஒரு பை வாங்கி ஈர ஆடைகளை போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அவள் முகத்திலும் கவலையும் குழப்பமும் அப்பிக் கிடந்தது. காரில் சென்று சந்தியாவின் வீட்டை அடையும் வரை யாரும் எதுவுமே பேச வில்லை. இறங்குவதற்கு முன் அவனை பார்த்தாள். அவனோ வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். மீரா சந்தியாவை அழைத்து செல்ல, அவள் வீட்டிற்குள் செல்லும் வரை அவளையே வெறித்து பார்த்த வண்ணம் இருந்தான்.
வீட்டிற்க்குள் நுழைந்ததும் “வாடி என் ராசாத்தி” என்று சந்தியாவை கட்டி அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள் வடிவுக்கரசி. “என் மருமக எம்முட்டு அழகு” என்று சொடக்கிட்டு திருஷ்டி கழித்தாள். அந்த அதிரடி தாக்குதலை பார்த்து அதிர்ந்த மீரா “யார் இது” பார்வையிலே கேட்டாள். “அத்தை” என்று சொல்லி விட்டு, மீராவை வீட்டிற்குள் அழைத்தாள். அவர்கள் வீடு நிறைய உறவினர்கள். தண்டட்டி பாட்டிக்கு வரவேற்பறையிலே கட்டில் போடப் பட்டு அதில் உட்கார்ந்திருந்து டிவியை பார்த்த படி இருந்தார். “பெரியாத்தா இங்க பாரு யாரு வந்திருக்கான்னு ” என்று வடிவுக்கரசி அவரை அழைத்தாள். அவர் திரும்பவில்லை. அருகில் சென்று கைத்தட்டி அழைத்தாள். அப்பொழுது அவருக்கு அழைப்பது கேட்டு விட்டது. அவர் திரும்பி பார்க்கும் போது சந்தியாவை பார்த்து விட்டார். காது சரியாக கேட்கவில்லை என்றாலும் பார்வை தெளிவு தன்டட்டி பாட்டி என்றழைக்கப்படும் முத்துப் பேச்சிக்கு. அவளை பார்த்தவுடன், “இவ்ளோ நேரம் எங்க சுத்திட்டு வருது இந்த பொட்டைக் கழுதை...விளக்கு வைச்சி எவ்வளோ நேரமாச்சு” வாயில் இருந்து வார்த்தைகளால் குத்தி கிழித்தார்.
“வீட்டுக்கு வந்ததும் வராததுமா சின்ன புள்ளகிட்ட என்ன பேச்சு பேசுத. நாளைக்கு பரிசம் போட்ட பின்ன அந்த புள்ள இந்த நேரத்தில வெளிய போயிட்டு வர முடியமா...வீட்டிக்குள்ள தேன் அடஞ்சு கிடக்க போவுது” என்று கையை ஆட்டி அவரை திட்டுவது போல நாளையில் இருந்து, பொழுது சாயும் வேளையில் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தினாள் வடிவுக்கரசி.
சந்தியா அருகில் வந்து, “அது கிடக்குது கெழம்...பேத்தியாகிட்ட நாக்குல நரம்பில்லாம பேசிகிட்டு...நீ சாப்பிட்டியா தாயி...இது யாரு?” என மீராவை காட்டி கேட்க, அவருக்கு பதில் சொல்லாமல், “மீரா..நீங்க கிளம்புங்க” என்று குறிப்பு காட்டினாள் சந்தியா. அவள் சொல்வதை புரிந்து வெளியேறிய மீரா முன் எதிர்பட்டனர் லக்ஷ்மி, ஸ்ரீமா, விந்தியா மூவரும் குழந்தைகளோடு. “மீரா...சந்தியாவுக்கு நாளைக்கு திடுதிப்புன்னு நிச்சயம் பண்றோம்…அதான் புடவை கடை வரை போக வேண்டியிருந்தது. வீடு நிறைய கெஸ்ட். நீ உள்ள வாப்பா ...ஏதாவது சாப்பிட்டு போ.” என்றழைத்த லக்ஷ்மியிடம் குழந்தைகளை காரணம் காட்டி கிளம்பினாள்.
காரில் ஏறியதும் கார்த்திக்கிடம், “காதி, சந்தியா வீட்டில” என்று ஆரம்பித்த மீராவை இடைமறித்து, “அண்ணி அவள பத்தியே பேசாதீங்க” என்று தடுத்து காரை கிளப்பினான்.
வீட்டிற்கு வந்த சந்தியா யாரிடமும் பேசாமல், தன் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் சரிந்தாள். ஒரு மணி நேரமாக அவள் வெளியே வராததால், ஸ்ரீமா அவளிடம் “என்னடி..என்னாச்சு? ஏன் இப்படி இருக்க? ஏதாவது பேசுடி” என கேட்க, “ப்ச்..” சோர்ந்த குரலில் சொல்லிவிட்டு கட்டிலில் படுத்தாள். அவள் அப்படி பேசுவது ஸ்ரீமாவிற்கு கவலையளிக்க, “ஏன்டி...இப்படி டல்லா இருக்க. மாமாகிட்ட கூட பேசலை. மாமா கேட்டாருடி உன்னை. வா வந்து என்னன்னு ஒரு வார்த்தை கேட்டுப் போ” என்று அழைக்க, மறுத்து விட்டு, குப்புற படுத்துக் கொண்டாள்.
ஸ்ரீமா லக்ஷ்மியிடம் சென்று விவரத்தை கூற, லக்ஷ்மியும் விந்தியாவும் வந்து அவளுடன் பேசி பார்த்தனர். “ரெஸ்ட் எடுக்கணும்”, “அலுப்பா இருக்கு”, “தூக்கம் வருது” இந்த மூன்று பதில்கள் தவிர வேறு எதுவும் அவள் வாயில் இருந்து வரவில்லை. ஒரு அரை மணி நேரம் அவளை பேச வைக்க முயன்று தோற்றனர். இத்தனை முயற்சியும் வீட்டிற்கு வந்திருக்கும் வடிவுக்கரசி குழுவினருக்கு தெரியாமல் நடந்தது. தெரிந்து அதற்கும் ஏதாவது வம்பு செய்தால் என்ன செய்வது. ஸ்ரீமா, பூமாவிற்கு அழைத்து நடந்ததை சொல்லிவிட்டு சந்தியாவிடம் பேசக் கொடுத்தாள்.
பூமா அவளிடம் முதல் கேள்வியாய், “சந்து, அக்காவுக்கு விரதம் இருந்தியா டா? கோவிலுக்கு போனியா? என்னை நினச்சா வருத்தப் பட்டுகிட்டு இருக்க?” அவளின் அக்கறை கலந்த ஏக்க கேள்வியில் மன இறுக்கம் களைந்து, “பூ ...உனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும்டி...சிக்கல் சிங்கார வேலன் பிரசாதம் உனக்கு அனுப்பி வைச்சிருக்கேன்” என குரல் தழு தழுக்க சொல்லி முடிக்கும் போது கார்த்திக் நினைவு வந்து மீண்டும் கலங்கினாள்.
“சரி. அப்புறம் எதுக்கு கவலைப் படுற. நீ நிம்மதியா சஷ்டி கவசத்தை படிச்சிட்டு சாமி கும்மிட்டு தூங்குடி. மத்ததை எல்லாம் நான் பாத்துக்கிறேன்.“ என்று ஆறுதல் சொன்ன பூமாவின் வார்த்தைகள் இதமாக இருந்தது. போனை ஸ்ரீயிடம் கொடுத்து விட்டு, ஓடிப் போய் கந்த சஷ்டி கவசத்தை படிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு தனிமை அளித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினர் அவளது அன்னையும், சகோதரிகளும்.
சந்தியா இருந்த அறையின் சுவரில் காதை வைத்து ஒட்டு கேட்ட வடிவுக்கரசி, வெளியில் வந்த ஸ்ரீமாவிடம் தனது அலைபேசியை கொடுத்து, “பாண்டி நம்பருக்கு போன் போட்டு கொடுக்குதியாடா ராசாத்தி ” என்று ஒரு துண்டு சீட்டையும் குடுத்தாள். அவள் கேட்ட படி செய்து கொடுத்து சென்றாள் ஸ்ரீமா. “எம்முட்டு விவரமா போட்டு கொடுக்குது என் தங்கம்” என்று அவளுக்கு நன்றி சொல்லி விட்டு அலைபேசியை வாங்கிக் கொண்டு “ஏ பாண்டி...ராசா தூங்கிட்டியாயா?” என்று கேட்டு கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தனிமையில் பேச யாரும் இல்லாத இடமாக மொட்டை மாடியை தேர்ந்தெடுத்து வேகமாக படியேறினாள்.
“இல்லை. சொல்லு ஆத்தா. ஏன் இப்படி மூச்சிரைக்க பேசுற” கேட்டான் பாண்டியன். “ஹம்...கும்…” என சலித்துக் கொண்டு,
“இந்த சிறிக்கிங்க கூடி கூடி குசு குசுன்னு பேசுறாளுவ. உன் மாமன்கிட்ட என்னத்தையாவது மூட்டிவுட்டு காரியத்தை கெடுத்துவுட்டுடுவாளுங்கலூங்களோன்னு பயமா இருக்கு ராசா” என்று அங்கலாய்த்தாள். அதை கேட்டு “இத சொல்றதுக்கு தான் போன் போட்டியா? அப்படி எதுவும் நடக்கக் கூடாதுன்னு தானே உன்னை அங்க அனுப்பி வைச்சேன். நல்லா மூக்கு முட்ட துன்னுபுட்டு குறட்டைவுடுறதுக்கா அங்க அனுப்பி வைச்சேன்... என்ன தான் படிச்சுபுட்டு பட்டனத்தில பெரிய உத்தியோகத்தில இருந்தாலும் அன்னைக்கு அந்தாளு ஊரு முன்னாடி பெல்ட்டால அடிச்ச அடி இன்னும் நெஞ்சுல வலிக்குது ஆத்தா. அந்த சந்தியாவை நாம படுத்துற பாட்டை பாத்து அந்தாளு ரத்த கண்ணீர் வடிக்கணும் ஆத்தா. அதுக்கு தானே இத்தனை நாளும் காத்துகிட்டு இருக்கேன். நாளைக்கு கால பஸ்ல நேரா அங்க வந்துடுவேன். நான் வர்ற வரைக்கும் எந்த கொழப்பமும் வராம பாத்துக்கோ” என்று சொல்ல,
“என் ராசா….ஹும்….எம்புள்ளைக்காக தான் இத்தனை அசிங்கத்தையும் தாங்கிகிட்டு இருக்க வேண்டியிருக்கு. அவ ஒரு அடங்கா பிடாரி….வீட்டுக்கு வந்தவளை வான்னு ஒரு வார்த்தை கூட கேக்க மாட்டிங்குதா….பொடிக் கழுதை வாயை தொறந்தா முத்து உதிந்துடுமாக்கும் ...நீ இப்போ வீராப்பா பேசிபுட்டு அவள கட்டுகிட்டதும் வெள்ளை தோளை பாத்து மயன்கிபுடாத ராசா” என்று எச்சரித்தாள் வடிவுக்கரசி.
“ஆத்தா...இன்னும் நிச்சயமே பண்ணலை அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சிட்டியா? அதல்லாம் ஒன்னும் நடக்காது. நீ சொன்ன மாறி பச்சை கலர்ல நிச்சய புடவை எடுத்துட்டேன். ஆத்தா...உனக்கும் அதைவிட உசத்தி விலையில பட்டு எடுத்துட்டேன். இப்போ நிம்மதியா உனக்கு?” என கேட்க வடிவின் பேச்சு புடவையில் திரும்பியது.
சந்தியாவிற்கு தைரியம் சொல்லி விட்டு போனை வைத்த பூமாவிற்கு அழுகை வந்தது. அவளுக்கே இந்த திடீர் திருமண நிச்சயம் அதிர்ச்சியாக இருந்தது. சந்தியா பேச்சால் உலகையே விலை பேசுபவள் அன்று பேச்சற்று இருப்பதை கண்டு மனம் வருந்தினாள். அதற்கு காரணம் பாண்டியன் என்று எண்ணிக் கொண்டு தன்ராஜிடன் சண்டை போட்டாவது இந்த நிச்சயத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவுடன் அவரை அழைத்தாள்.
ஆட்டம் தொடரும் ...
{kunena_discuss:610}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.