போறேனே சார்” என ஆசையாகச் சொல்ல அதற்கு சிதம்பரமும் ஒப்புக் கொண்டான்
”ஆமாம் எனக்கும் அதை கேட்க ஆர்வமாதான் இருக்கு ஆனா, கதை கேட்டு முடிச்சதும் நான் கேட்கற தகவல்களை நீ கொண்டாரனும் சரியா“
”சரிங்க சார் செய்யறேன்” என சொல்லியவன் சம்யுக்தாவிடம்
”மேடம் நீங்க சொல்லுங்க, தில்லை எப்படி கருணாவை கொன்னான், உங்களுக்கு அங்க பிரச்சனை வராமயா இருந்திச்சி“
”ஏன் வராம நான் அங்க வசமா மாட்டிக்கிட்டேன்” என்றாள் சம்யுக்தா
”அய்யோ அப்புறம் என்னாச்சி” என பதறினான் சிதம்பரம் அவளோ சிரித்தபடியே அந்த நாளின் நினைவுகளை சொல்லத் தொடங்கினாள்.
கடலூர் கடற்கரையில் இருந்த குடிசை பகுதிக்குள் சென்ற தில்லை கவனமாகவே இருந்தான். ஆனால் சம்யுக்தாவிற்கோ மெல்ல தலை சுற்றுவது போல இருந்தது, சாப்பிடாத காரணத்தால் அவளால் நிற்க கூட முடியவில்லை, கைகள் உதறல் எடுத்தது உடனே தில்லையிடம்
”பசிக்குது” என்றாள் ஈனமாக தில்லையோ கருணாகரனை கொல்லும் வேலையில் இருந்த போதும் சம்யுக்தாவின் பேச்சைக் கேட்டு வியந்தான்
”பசிக்குதா ஷ் இதுக்குத்தான் சாப்பாடு எடுத்து வைச்சேன், சாப்பிடாம அடம்பிடிச்சிட்டு இப்ப கேட்டா எப்படி”
“எனக்கு தலை சுத்துது, பசிக்குது” என்றாள் பாவமாக
”இந்த இடத்தில என்ன இருக்கும்னு தெரியலை, ஒண்ணும் பிரச்சனையில்லை சம்யுக்தா, எப்படியும் கருணாகரன் இங்க தங்கியிருக்கான்னா கண்டிப்பா சாப்பாடு எல்லாம் வைச்சிருப்பான், அவனை கொன்னுட்டு அங்கிருக்கற சாப்பாட்டை நாம எடுத்துக்கலாம் சரியா”