இதை சற்றும் எதிர்பார்க்காத ஆரு, அவமானத்தில் முகம் சிவக்க, பொங்கி எழுந்த கோபத்தை வின்சென்டின் கன்னத்தில் காட்டினாள். அறைந்த அடுத்த நொடி அவனை புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினாள்.
ஓடியவள் தன் வீட்டிற்கு சென்று அழுத அழுகையில் எல்லோரும் பயந்து என்னவென்று கேட்க, எதுவும் கூறாமல், இனிமேல் வின்சென்ட் இந்த வீட்டிற்குள் வர கூடாது.. மீறினால் தன்னை உயிருடன் பார்க்க முடியாது என்று கூற, அவள் அப்பா குரலை உயர்த்தியும், அவள் பிடிவாதத்துடன் சத்தியம் பெற்றுக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
பிறகு அனுவை விட்டு வின்சென்டிடம் நடந்ததை கேட்டுவரச் சொன்னாதோ, அனு கேட்டதை, பெரியவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றி கூறி, கொஞ்ச நாள் ஆரப்போட்டால் சரியாகிவிடும் என்றாதோ ஆருவிற்கு தெரியாது. ஆருவின் தந்தை, சின்ன பிள்ளைகள் சண்டைக்காக பெரியவர்கள் மனதை கஷ்டப்படுத்த கூடாது என்று அவளை கண்டித்ததும், ஆருவைத் தவிர அனைவரும் வின்சென்ட் வீட்டிற்கும் வின்சென்ட்டை தவிர அனைவரும் ஆருவின் வீட்டிற்கு வருவதும் வாடிக்கையாயிற்று...
எல்லாம் சொல்லி முடித்தவள் நந்துவைப் பார்த்து,
"இப்பவும் அவனை பார்த்தாலே உடம்பெல்லாம் தீப்பிடித்தது மாதிரி எறியுது. எனக்கே என்ன பார்த்தா அருவெறுப்பா இருக்கு... ஒருத்தன் அத்தன நாளா தப்பான கண்ணோட்டத்திலேயே பார்த்திருக்கான்.. அது தெரியாம.. அவன் கூடயே இருந்து.. சே...." என்றாள்.
"ஒருத்தன் என்ன intention-ல உன்ன பாக்கிறான்னு கூட தெரியல.."
கர்ஜித்த குரல் சட்டென்று ஞாபகம் வர, சம்மந்தமே இல்லாமல் உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தாள். உடல் சிலிர்த்ததும் சட்டென்று பயந்து, கைகளை மூடிக்கொண்டு தலையைக் குலுக்கிக் கொண்டு அனுவைப் பார்த்தவள், அனு ஆருவிடம் ஏதோ சமாதானமாக சொல்ல வர
"வேண்டாம் அனு.. இதுக்கு மேல அவனோட பேச்சே இங்க வேண்டாம். நந்து, நாளைக்கு அத்தை வராங்கள்ளடா.. போய் தூங்கு..காலையில் எல்லோரும் போய் பாக்கலாம்." என்று அவளை அனுப்பி வைத்தாள்.
ஆருவிடம் இது ஒன்று, ஒரு விஷயம் முடிந்துவிட்டது என்று அவள் முடிவு செய்துவிட்டால், அவளை யாராலும் கன்வின்ஸ் பண்ண முடியாது. அதனால் வேறெதுவும் கூறாமல் உடை மாற்றி கொண்டு படுக்கையில் விழுந்த அனுவிற்கு, வின்சென்ட் தன்னிடம் கூறியது ஞாபகம் வந்தது.
அன்று birthday party-யில், கொஞ்ச நாட்களாக தன் உள்ளத்தில் உள்ளவளை காட்டப்போவதாக தன் நண்பர்களை அழைத்து வந்திருந்தவன், அவள் வரும் வரை சேர்ந்து அரட்டை அடித்து போரடிக்கவே, ஏதேனும் game விளையாடலாம் என்று சீட்டில் எழுதி குலுக்கி போட்டு அதில் என்ன வருகிறதோ அதை செய்ய வேண்டும் என முடிவுசெய்தார்கள். அதில்தனக்கு தன் நண்பனை லிப் டு லிப் அடிக்க வேண்டும் என்று வர, முடியாது என்று அலறிய இருவரையும் 'just for fun' என்று ஒரு வழியாக சமாதானம் செய்து ஒற்றுக்கொள்ளவைத்தார்கள். ஆனால், அவன் பக்கத்தில் போனதுமே வின்சென்ட்
"இவன் மூஞ்ச பார்த்தா எப்படிடா கிஸ் அடிக்க முடியும்.. வாந்தி தான் வரும்" என்று கூற,
“ம்...உனக்காக நான் காத்ரீனா கயீஃப் ஆகவா முடியும்......”ன்று சண்டை போட்டவற்களை சமாளித்து, அப்படியானால் லைட்டை ஆப் செய்து விடலாம் என்று லைட்டை ஆப் செய்ய, வந்தது வினை.
வேண்டாவெறுப்பாக செய்தவன், இதழொற்றலின் போது தான் அது பெண்ணென்று புரிய, பதறி விலகியவன், ஆருவைப் பார்த்ததும் மத்ததையெல்லம் மறந்து இதயம் சிறகு முளைத்துப் பறக்க.. அதை அடக்கி அவளை பார்த்த பொழுதுதான், அவள் கைகள் 'பளார்' என அறைந்தது. என்னவென்று தெளிவதற்குள் அவள் சென்றுவிட, அவனுக்கு அந்த செயலின் வீரியம் புரிந்தது.
சின்னப் பெண்ணல்லவா, பயந்துவிட்டாள்.. என்ன நடந்ததென்று கூறினால் புரிந்து கொள்வாள் என்று அவன் நினைக்க, அனு கூறியதும் தான் அவள் எவ்வளவு தீவிரமாக தன்னை வெறுக்கிறாள் என்று புரிந்தது. அனுவும் அன்றிலிருந்து உண்மையை சொல்ல முயற்சிக்கிறாள். ஆரு இடம் கொடுத்தால் தானே.
இதை இப்படியே விட்டால் சரிவராது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபடி உறங்கிப்போனாள் அனு.
கண்களை மூடினாலே அவன் முகம்தான் கண்ணுக்குள் வந்தது. அதிர்ந்து எழுந்து அமர்ந்த நந்துவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. (நீ எப்போ செல்லம் தெளிவா இருந்திருக்க..)
அனு, ஆரு வரும் வரை ஒருவித கனவுலகில் இருந்தவள், இப்போது அந்த எண்ணம் பயத்தை கொடுத்தது. சந்துருவும் அவளை ராகிங்தான் செய்திருப்பானோ.... ஆனால் அந்தக் கண்கள், அதில் கொஞ்சம் கூட பொய் இல்லயே. உள்ளங்கையை பிரித்துப் பார்த்தாள். இப்பொழுதும் அதில் அவன் கன்னத்தின் ஸ்பரிசம் குறுகுறுக்கவும், அவள் கன்னங்கள் தானாக சிவந்தது. அந்த அழுத்தத்தில் எத்தனை ஏக்கம் தெரிந்தது என்று அவனுக்காக உருகிய மனதை அடக்கியவள், தன் எண்ணம் போகும் போக்கை கண்டு பயந்து போனாள். ஒரு அன்னியனிடம், அதுவும் தன்னை முழுமனதாக வெறுப்பவனிடம் தான் இப்படி மயங்குவது தவறு என்று நினைத்தவள்,அவனை அன்னியமாக தன் மனது நினைக்க மறுப்பதைக் எண்ணி குழம்பிப்போனாள்..தனக்கு ஏதோ ஆகிவிட்டது, தன் மனது தறான வழியில் யோசிக்கிறது என்று சஞ்சலப்பட்டவள், வேகமாக எழுந்து சென்று தான் சிறு வயது முதல் தன்னுடன் வைத்திருக்கும் முருகன் படத்தின் முன் நின்று, தன்னை சரியாக வழி நடத்துமாறு மனமுருக வேண்டிக்கொண்டாள். பின்பு கந்த ஷஷ்டியை மனமொன்றி வாசித்த பிறகே அவள் மனம் சிறிது தெளிவானது.
சந்துரு வீட்டில்,
“ என்ன இவன் இன்னும் சாப்பிட வரல........என்ன பண்ணிட்டு இருக்கான்...?” என்று சிறிது நேரம் சந்துருக்காக காத்திருந்த நளினி, அவன் வராமல் போகவே அவன் அறைக்குச் சென்றார். கதவைத் திறந்ததும், உள்ளே சந்துரு பெட்டில் தலையை இரு கைகளால் தாங்கியபடி அமர்திருக்கவும், வேகமாக அவன் அருகில் சென்றவர்,
“ பிரபு....ஏன் இப்படி உட்காந்திருக்கே..? தலைவலிக்குதா..?” என்று பதற,
அவரை நிமிர்ந்து பார்த்தவனின் முகம் குழம்பி போயிருந்தது. நளினியின் கையைப் பற்றி தன் அருகில் அமர வைத்தவன், அவர் மடியில் படுத்துக்கொண்டான். அவர் கை அனிச்சையாக தலையை வருடிக் கொடுக்க, சந்துரு,
“அம்மு, நான் இன்னிக்கு ஒரு பொண்ணோட கையை.....” என்று அவன் முடிப்பதற்குள்,
“ ஐய்....கையை பிடிச்சு இழுத்திட்டியா..?, அதான் இன்னிக்கு கரண்ட்டே கட் ஆகலியா..?” என்று பேசிக்கொண்டே போனவரை, எழுந்து அமர்ந்து முறைத்தவனைப் பார்த்து,
“ பின்ன என்னடா.... பொண்ணப் பாத்தாலே முகத்த சுழிப்ப...இனிக்கு என்ன பண்ண?” கேட்டுக்கொண்டே அவனைப் பார்த்தவர், அவன் கனவுக்குள் மூழ்கிப் போனவனைப் போல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தவர், அவன் தோளில் ஒரு அடி போட்டு,
“டேய்......என்னன்னு சொல்லுடா...?” என்று பொறுமை இழக்கவும்,
“எப்படி சொல்றதுன்னு தெரியலமா.....இன்னிக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கில்ல, ரோஸ் டே, இன்னிக்கு தான் குணா.....” என்று தொண்டையில் அடைத்ததை விழுங்கிவிட்டு, அனைத்தையும் தன் அம்மாவிடம் கொட்டிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் மேலே தொடர்ந்தான்,
“மனசு ரொம்ப பாரமா இருந்துச்சும்மா,’ இப்படி நடக்காம இருந்திருந்தான்னு’ ரொம்ப ஏக்கமா இருந்துச்சு...அதனால அந்த இடத்த விட்டு தனியா போய் நின்னுட்டேன்.. அப்போ, அங்க தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்தாம்மா...மாதிரி என்ன தேவதையேதான். பொண்ணாயிருந்தா உன் கஷ்டத்தையெல்லாம் எங்கிட்ட கொடுத்திடுன்னு சொல்லுவாளா?.. அவள பார்த்துட்டு இருந்தாளே மனசு லேசான மாதிரி இருந்துச்சுமா...அவளோட கையை எடுத்து கன்னத்தில வசிக்கிட்டப்போ.....” என்று எங்கொ பார்த்து சொல்லிக்கொண்டே போனவனால், அந்த உணர்வை தன் அம்மாவிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பி நளினியைப் பார்த்தவன்,
“ ஆனா இதெல்லாம் கனவாதானம்மா இருக்க முடியும்....இது நிஜமா இருக்கும்னு நம்பவேமுடியல...கண்ண மூடினாலே அவளோட முகம்தான் கண்ணுக்குள்ள வருது....இது...இதெல்லாம் கனவுன்னு சொல்லும்மா... நானா இப்படி ஒரு பெண்ணால இந்தளவுக்கு வசியப்படுரேன்... இது குணாக்கு நான் செய்ற துரோகமில்லையா....ச்சே.....என்ன உணர்வுமா இது?”