“இந்தா இந்த தண்ணியைக் குடி” என்று அவனுக்கு கொடுத்து விட்டு, “அவன் எங்க அதுக்கு வழியை விடறான். அவன் அக்காவும் தான் சலிச்சி சலிச்சி பொண்ணு பார்த்துட்டு இருக்கா. பொண்ணை பார்த்துட்டு வேண்டாம்ன்னு சொன்னா கூட பரவால்ல, துரை பார்க்காமலே வேண்டாம்ன்னு சொல்லுவார். அவனுக்குன்னு யாரை எழுதி இருக்கோ, நேரம் வந்தா அந்த மகராசி வராமலா போய்டுவா. நேரம் வந்தா இவன் கல்யாணம் நடக்காமலா போய்ட போகுது. அந்த நம்பிக்கைல தான் நான் இருக்கேன்”
“அம்மா. அந்த நேரம் வந்துடுச்சின்னு நினைச்சுக்கோங்க. நீங்க வேணும்னா பாருங்க. கூடிய சீக்கிரம் அந்த நேரம் வரப் போகுது” என்றாள் ஜமுனா.
“உன் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்”
அன்று இரவு உறக்கம் வரவில்லை ஸ்ரீ ராமிற்கு. கண்ணை மூடினால் அவள் கண்கள் நினைவில் வந்து போகிறது. அவள் கண்களுக்கு சக்தி அதிகம் என்று தோன்றியது அவனுக்கு.
ஆம் நிஜம் தான். கனிவுப் பார்வையாக இருந்தாலும், பிரன்ட்லியாக இருந்தாலும், நீ யாரோ தொலைவாகவே இரு என்று எல்லாவற்றையும் அவள் கண்கள் சொல்லி விடும்.
ஜமுனா கேட்ட போது ஆமா லவ் பண்றேன் என்று சொல்லாத தான் இப்போது அவளை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக தான் இருந்தது அவனுக்கு.
அவன் தேன்மொழியிடம் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னால் அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
எப்படியும் உடனே அப்படியா என்று உச்சிக் குளிர்ந்து போக மாட்டாள். பின்பு எப்படி அவளை சம்மதிக்க வைப்பது?
எதற்கும் அவனிடம் பதிலில்லை. காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில் கண்ணயர்ந்தான் அவன்.
தேன்மொழிக்கு திடீரென்று விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் பார்த்தால் தங்கை அங்கு இல்லை.
எங்கே சென்றாள் இவள் என்று எழுந்து சென்று பார்த்தால் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
அவளருகே சென்று அமர்ந்து “என்னடா” என்று கேட்டால் தூக்கி போட்டது அவளுக்கு.
இவள் வருவதையே அவள் கவனிக்கவில்லை போலும்.
“மலர். நான் தான் டா. என்னாச்சி உனக்கு. இங்க ஏன் உட்கார்ந்திருக்க. நான் வரர்து கூட தெரியாம அப்படி என்ன யோசனை உனக்கு”
“ஒன்னும் இல்லக்கா. தூக்கம் வரலை”
“உனக்கா அதிசயமா இருக்கே”
“அக்கா”
“சரி சரி. தூங்க ட்ரை பண்ண வேண்டியது தானே. அதை விட்டுட்டு இப்படி உட்கார்ந்திட்டிருந்தா எப்படி. நாளைக்கு வேலைக்கு போக வேண்டாமா”
“ம்ம். சரி வா” என்றவாறு இருவரும் அவர்களின் அறைக்கு சென்றனர்.
படுத்தும் சிறிது நேரம் புரண்டு கொண்டே இருந்தாள் மலர்.
“என்ன மலர்”
“தூக்கம் வரலைக்கா”
“ம்ம்ம்”
“அக்கா. நான் இந்த வேலையை விட்டுடவா”
“ஏன் மலர் என்னாச்சி” என்று எழுந்து அமர்ந்து விட்டாள் தேன்மொழி.
“ஒன்னும் இல்லைக்கா. எனக்கு ஏதோ கம்பர்டா இல்லாத மாதிரி ஒரு பீலிங். அதான்”
“ஏன் யாரும் ஏதாச்சும் சொல்றாங்களா”
“அப்படி எல்லாம் இல்லைக்கா”
“வேற என்ன”
“எனக்கு தெரியலைக்கா. தோணுச்சி, சொன்னேன்”
“சரி விடு டா. முன்னாடி சென்னைல உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் உன் கூட அதே கம்பனில வொர்க் பண்ணாங்க. இங்க அப்படி யாரும் இல்லைல்ல அதான் உனக்கு ஒரு மாதிரி இருக்கு. போக போக எல்லாம் சரி ஆகிடும். இப்ப எனக்கு இங்க வந்து எல்லாரும் பழகிடலையா. அதே மாதிரி”
“ம்ம்ம். சரிக்கா”
“ஹேய் சொல்ல மறந்துட்டேன். இந்த புரட்டாசி மாசம் முடிஞ்ச உடனே உன்னை தௌலத் அக்கா கூட்டிட்டு வர சொன்னாங்க. உனக்கு ஸ்பெஷலா பிரியாணி செஞ்சி தர போறாங்களாம்”
“ம்ம்ம். போகலாம்”
அன்று மலர் கூறிய போதே அந்த வேலை வேண்டாம் என்று சொல்லாமல் போய் விட்டோமே என்று பின் அதை நினைத்து வருந்தப் போகிறோம் என்று தெரியாதவளாக உறங்கினாள் தேன்மொழி.
தொடரும்!
{kunena_discuss:727}