“என்னம்மா சொல்லுற… மிஸ் பண்ணிட்டானா?... எப்படி?... எங்க?...” என அவர் பதட்டத்துடன் கேட்க…
“ஆன்ட்டி… நீங்க பயப்படாதீங்க… போன் பத்திரமா எங்கிட்ட தான் இருக்கு… நான் இங்க எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு டாக்டரை பார்க்க வந்திருக்கேன்.. வர்ற வழியில தான் ஒருத்தர் கார் பக்கத்துல இருந்து பேசிட்டு போனை பாக்கெட்டுல வைக்குறேன்னு கீழே போட்டுட்டு போயிட்டார்… நான் கூப்பிட்டு பார்த்தேன்… ஆனா, அவர் காரை எடுத்துட்டு போயிட்டார்… சரி ஹாஸ்பிட்டல் போயிட்டு அவர் வீட்டுக்கு போன் பண்ணலாம்னு பண்ணினேன்… ஆன்ட்டி… நீங்க கொஞ்சம் இங்க வர்றீங்களா?... நான் நல்லா இருந்தா நானே வந்திருப்பேன்… என்னால வர முடியலை அதான்… சாரி ஆன்ட்டி… தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்க…” என்றாள் அவளும்…
“ஓ… சரிம்மா… நான் தான் உனக்கு தொந்தரவு குடுத்துட்டேன்… இரும்மா நானே வரேன்… எந்த ஹாஸ்பிட்டல்…???..” என அவர் கேட்டதும், அவள் பெயரை சொல்ல… அடுத்த அரை மணி நேரத்தில் அவனின் தாயார் அங்கே வந்தார்…
நேரே அவள் சொன்ன மருத்துவமனையின் பகுதிக்கு வந்தவரை இனம் கண்டு கொண்டவள்,
“நீங்க… துணா……..…”
“ஆமாம்மா… துணா என் பையன் தான்…”
“நீ தான் போன் பண்ணியாம்மா?... ரொம்ப தேங்க்ஸ்...” என்றவர் அவள் பெயர் என்னவென்று யோசிக்க…
“வள்ளி…” என்றாள் அவள்…
“வள்ளி… யாருக்கென்னு இருக்குற இந்த காலத்துல இவ்வளவு தூரம் போன் பண்ணி தகவல் சொன்னியே… ரொம்ப சந்தோஷம்மா…” என்று அவர் சொல்லிக்கொண்டிருந்த போது,
“நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருக்கு… உங்க அண்ணனோட ப்ளட் குரூப் கொஞ்சம் ரேர்… அதுனால அரேஞ்ச் பண்ண முடியுதான்னு சீக்கிரம் பாருங்க…” என நர்ஸ் இடையில் வந்து சொல்லிவிட்டு சென்றுவிட,
“என்னம்மா… யாருக்கு ப்ளட்?... உன் அண்ணன்னு சொல்லிட்டு போறாங்க… உன் அண்ணனுக்கு அடிபட்டுடுச்சாம்மா?... இப்போ எப்படி இருக்கும்மா?... பரவாயில்லையா?...” என அவர் கேட்க… அவளுக்கோ உள்ளம் வலித்தது…
“என் அண்ணன்னு அவங்க சொல்லிட்டு போனது உங்க மகன் தான்னு எப்படிம்மா உங்ககிட்ட நான் சொல்ல?... கடவுளே… காப்பாத்துப்பா அவரை… அண்ணன்னு அவசரத்துல சொல்லலை… அவரைப் பார்த்த உடனே எனக்கு அப்படித்தான் தோணுச்சு… ஏனோ என் அண்ணன் அப்படின்னு தான் மனசு சொல்லுச்சு… எனக்கு ஒரு அண்ணன் இருந்தா இப்படி தானே நான் காப்பாத்தியிருப்பேன்… எப்படியாவது அவர் உயிரை மீட்டு கொடுத்திருப்பா…” என தனக்குள் வேண்டிக்கொண்டவள்,
“இருங்க ஆன்ட்டி வரேன்… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுறீங்களா?... நான் டாக்டரைப் பாத்துட்டு வரேன்…” என்று கூற,
“சரிம்மா… நீ போயிட்டு வா… நான் வெயிட் பண்ணுறேன்…” என அவர் சொல்ல…
அவள் சென்று தனது அப்பா, சின்னப்பா, ஃப்ரெண்ட்ஸ் என அனைவருக்கும் தகவல் சொல்லி ப்ளட்டிற்கு ஏற்பாடு செய்தாள்…
அரை மணி நேரத்தில் அவனுக்கு இரத்தம் ஏற்றப்பட, அவன் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டான் என மருத்துவர் வந்து சொன்ன பிறகே அவள் மூச்சு திரும்பி வந்தது…
“கரெக்டான டைமுக்கு கொண்டு வந்து அட்மிட் பண்ணதும் இல்லாம, ப்ள்ட்-ம் அரேஞ்ச் பண்ணி கொடுத்ததுனால தான் உங்க அண்ணனை காப்பாத்த முடிஞ்சது… ஹீ இஸ் ஃபைன் நௌ… நீங்க போய் பார்க்கலாம்… பட் அவரை ட்ஸ்டர்ப் செய்யாம பாருங்க… சரியா… அவர் கண் திறக்க இன்னும் பல மணி நேரம் ஆகும்… தலையில தான் பலமான அடி… வலது காலில் கொஞ்சம் எலும்பு முறிஞ்சிருக்கு… ஆப்பரேஷன் பண்ணியிருக்கோம்… சரி ஆகிடும்… சீக்கிரமே எழுந்து நடந்துடுவார்… டோன்ட் வொர்ரி வள்ளி…” என பெரிய மருத்துவர் வந்து சொல்லிவிட்டு போனதும்,
அவள், “கடவுளே… ரொம்ப நன்றிப்பா…” என்றபடி சந்தோஷத்துடன் அமர,
“ஒன்னும் ஆகாதும்மா… அதான் டாக்டரே சொல்லிட்டாரே… சரியாகிடுவார்ன்னு….” என்று அவனின் அன்னையும் சொல்ல.
அவளுக்கு அப்போதுதான் உண்மையை சொல்ல இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தோன்றிவிட,
“ஆன்ட்டி… நான் சொல்லுறதை கேட்டு அதிர்ச்சி ஆகாதீங்க ப்ளீஸ்… இங்க அண்ணன்னு சொல்லி நான் சேர்த்தது வேற யாருமில்லை… உங்க பையனைத்………………” என்று அவள் சொல்லிமுடிக்கும் முன், அவர் தரையில் சரிந்தார்…
அவர் ஊசி போட்ட வலியில் கண் திறக்க, “ஒன்னுமில்லம்மா… ஜஸ்ட் மயக்கம் தான்… அதிர்ச்சியில தான்… வேற எதும் இல்லை… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க… சரி ஆகிடும்…” என்ற டாக்டர், வள்ளியிடம், “பயப்படவேண்டாம்… பார்த்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட,
அவர் தனது மகனைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தார்…
“சரி ஆன்ட்டி… ஆனா ப்ளீஸ் அழாதீங்க… அவருக்கு எதுவும் இல்லை… உங்கமகன் சீக்கிரம் சரியாகிடுவார்….” என்று கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றாள் வள்ளி…
பெட்டில் தலையில் காயத்துடனும், காலில் கட்டுடணும் படுத்திருந்த மகனைப் பார்த்தவருக்கு, நிற்க கூட முடியவில்லை…
“துணா… என்னாச்சுப்பா… அம்மாவ பாரு கண்ணா…” என அவன் கையைப் பிடித்து அவர் அழ,
வள்ளிதான் அவரை உடனிருந்து தேற்றினாள்…
போனில் அவர் தன் கணவருக்கு தகவல் சொல்ல, அவர் விரைந்து வந்தார்…
இரு பெரியவர்கள் வருவதைக் கண்டவள், ஜாடையில் அவர்கள் ஒரே மாதிரி இருப்பதை பார்ப்பதும் அண்ணன் தம்பி போலும் என்றெண்ணிக்கொண்டாள்… அவள் எண்ணமும் சரிதான் என்பதை போல,
வந்திருந்த ஒருவரைப் பார்த்ததும், ஓடிச்சென்று தோள் சாய்ந்து கொண்டார் அவனின் அன்னை…
“அழாதே அம்பிகா… அவனுக்கு ஒன்னும் ஆகாது… அழாத…” என்று அவரின் கணவர் தேற்ற,
பக்கத்தில் உடனிருந்தவரோ, “அண்ணி அழாதீங்க… நம்ம துணாவிற்கு எதுவும் ஆகாது… அவன் குணமாகிடுவான் சீக்கிரம்…” என்று நல்வார்த்தைகளை கூற,
அவனின் அன்னை நிமிர்ந்து இருவரையும் பார்த்துவிட்டு, “துர்காவிற்கு விஷயம் தெரியுமா?...” எனக் கேட்க…
இருவரும் இல்லை என்று தலை அசைத்தனர்…
“அவ கிட்ட சொல்லிடுங்க… எனக்கு சொல்லத் தெம்பு இல்லை… நீங்களே சொல்லிடுங்க தம்பி…” என்று கூற,
“இல்ல அம்பிகா… வில்வம் சொல்ல வேண்டாம்… நானே சொல்லிடுறேன்…” என்றவர் அவசரமாக தனது செல்போனை எடுத்து தகவல் சொல்ல அங்கிருந்து அகன்றார்…
“அழாதீங்க அண்ணி… சரி ஆகிடுவான்… துணா…” என வந்திருந்தவர் தன் அண்ணியிடம் ஆறுதல் சொல்ல…
“அழாதீங்க ஆன்ட்டி… ப்ளீஸ்… உங்க உடம்புக்கு எதுவும் ஆகிடப்போகுது… அப்புறம் உங்க பையன் எழுந்து வந்து பேசும் போது நீங்க முடியாம இருந்தா அவர் கஷ்டப்படமாட்டாரா?...” என வள்ளி சொல்லுவதை அங்கே வந்த அம்பிகாவின் கணவர் விஸ்வமூர்த்தியும் கவனிக்க…
அவரைத் தொடர்ந்து வில்வமூர்த்தியின் பார்வையும் வள்ளியின் பக்கம் திரும்ப…
“வள்ளி… இவர் என் கணவர்… இது அவரோட தம்பி,..” என அவளிடம் கூறிய அம்பிகா, “இந்த பொண்ணு மட்டும் இல்லன்னா இன்னைக்கு நம்ம துணா இல்லங்க…” என்ற அம்பிகா மீண்டும் அழ ஆரம்பிக்க…
“ஆன்ட்டி… இப்படி நீங்க அழுதுட்டே இருந்தா நான் கிளம்பி போயிடுவேன்… சொல்லிட்டேன்… ப்ளீஸ்… ஆன்ட்டி… அழாதீங்க… பாருங்க… நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது…” என அவள் சொல்ல…
அவர் கண்ணீரைத்துடைத்துக்கொண்டு அவளைப் பார்த்தார்…
பின்னர் அவன் கண் திறக்க, நேரம் ஆகும் சென்று சொல்ல, வள்ளியோ, “இப்பவே லேட் ஆயிட்டு ஆன்ட்டி… நான் நாளைக்கு வரேன்… அவர் முழிச்சதும் எனக்கு தகவல் சொல்லுங்க…” என தன் செல் நம்பரை கொடுத்துவிட்டு சென்றுவிட்ட இரண்டு மணி நேரத்தில் துணா என்றழைக்கப்பட்ட அவர்களின் புதல்வன் வ்ருதுணன் கண்விழித்தான்…
அவன் கண் விழித்ததும், அம்பிகா அவனைப் பார்த்து அழுதுவிட்டு, வள்ளியைப் பற்றி சொல்ல….
அவனுக்கும், மயக்கத்தில் முட்புதரின் ஓரம் கிடந்த போது நடந்த நிகழ்வுகள் ஓரளவு நினைவு இருந்தது… ஒரு பெண் தன்னைக் காப்பாற்றப் போராடினாள் என அவனும் உணர்ந்துதான் இருந்தான்….