(Reading time: 46 - 91 minutes)

துர்கா வந்தபோது, ஏனோ ஒரு நாள் கூட, வள்ளியும் அவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை…

அவள் வரும் நேரம், அவர் வீட்டிலிருப்பார்… அவர் வரும் வேளை இவள் வீட்டிற்கு சென்றிடுவாள்… இப்படியே தட்டிப் போனது ஒவ்வொரு சந்திப்பும்…

துணா ஓரளவு குணமான வேளையில், தேவி மீண்டும் வெளிநாடு சென்றுவிட, அவரின் மகன் விழியனும், வேலனும் நாள் தவறாமல் தங்களது சகோதரனிடம் போனில், ஸ்கைப்பில் நலம் விசாரித்து வந்தனர்…

அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின்பு, அம்பிகா பலமுறை அழைத்தும், வள்ளி ஏனோ அவர்களின் வீட்டிற்கு செல்லவில்லை… கோவிலில் பார்த்து பேசிக்கொண்டார்கள்… ஆன்ட்டி, என்பது போய் அத்தை என்றழைக்க பழகியிருந்தாள் வள்ளி… அப்படி பேசும்போது துணாவைப் பற்றி தான் அவளுடைய பெரும்பாலான விசாரிப்பு இருக்கும்…  அப்போது தான் அவள் படித்து முடித்து வீட்டில் தான் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார் அம்பிகா…

அதுபற்றி அவர் மகனிடம் சொன்னபோது, நம்ம கம்பெனியில ஜாயின் பண்ண சொல்லுங்கம்மா… என்றான் அவனும்…

அம்பிகாவும் விசயத்தை அவளிடம் கூற அவள் முதலில் மறுத்தாள்… பின்னர் “இதை ஏன் நீ மறுக்குற?... போயி இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ணு… உனக்கு பிடிச்சிருந்தா ஜாயின் பண்ணிக்கோ… சரியா?...”  என்று கேட்க…

அவள் மௌனமாய் இருந்தாள்…

“என்னடி நான் சொல்லிட்டே இருக்கேன்… அமைதியா இருக்குற?... என் பையனை காப்பாத்தினதுக்கு இது ஒன்னும் நான் செய்யுற கைம்மாறு இல்லை சரியா?...” என்று அவரும் வெடுக்கென்று சொல்லிவிட,

“அத்தை…” என்றாள் அவளும் அழுத்தமாக…

‘ஆமா.. இந்த அத்தை, சொத்தைக்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை… நாளைக்கு ஒழுங்கா இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ணு… புரிஞ்சதா?...” என மிரட்டி விட்டு அம்பிகா சென்றுவிட, அவளும் யோசித்து, பின்  சரி போகலாம் என முடிவெடுத்தாள்…

இன்டெர்வியூவில் அவள் செலக்ட் ஆகி, வ்ருதுணனின் அறைக்குள் இறுதி முடிவுக்காக காத்திருந்தாள்…

கம்பீரமான நடையுடன், அவள் முன் வந்தமர்ந்தவனை பார்த்தவள், எதுவும் அவனிடத்தில் பேசிக்கொள்ளவில்லை…

“அக்ஷிதவள்ளி….சரியா கூப்பிட்டனா பேரை?...” என அவன் கேட்க…

அவள் “ஹ்ம்ம்…” என்றாள்…

‘எல்லா டெஸ்டிலயும் நல்ல மார்க் வாங்கியிருக்குற… நீ உடனே ஜாயின் பண்ணலாம் உனக்கு விருப்பம் இருந்தா…” என்று அவன் சகஜமாக பேச, அவள் அவனை விநோதமாக பார்த்தாள்…

“என்னடா… நாம இவன் கிட்ட ஒரு வார்த்தை தான இதுவரைக்கும் பேசியிருக்கோம்… ஆனா, இவன் என்னடான்னா, இப்படி பழகினவன் போல வா, போன்னு பேசுறேன்னு பார்க்குறியா வள்ளி?... என் தங்கச்சி கிட்ட நான் பேச யாருகிட்ட பெர்மிஷன் வாங்கணும் சொல்லு?..” என அவன் இலகுவாக கேட்க…

அவள் அமைதியாய் புன்னகைத்தாள்…

“அம்மாகிட்ட மட்டும் தான் நல்லா பேசுவியா?... எங்கிட்ட எல்லாம் பேசமாட்டியா?...” என அவன் உரிமையோடு கேட்க…. அவள் அப்போதும் அமைதியாய் இருந்தாள்…

“உனக்கு வேலைப் பார்க்க விருப்பமில்லையா வள்ளி?... எதுவா இருந்தாலும் சொல்லு…” என அவன் கேட்க…

“இருக்கு… ஆனா, இப்போ வேண்டாம்…” என்றாள் அவள் மெதுவாக…

“ஏன்?...” என்று அவன் கேட்டதற்கு, “இந்திரபாலா….” என்று பதில் சொன்னாள் வள்ளி…

“இந்திரபாலா?....” என அவன் கேள்வியாய் கேட்க…

“அவள் என் தங்கை…” என்று பதில் தந்தாள் வள்ளி…

“சரி அதற்கும் நீ வேலையில் ஜாயின் செய்வதற்கும் என்ன சம்மந்தம்???...” என அவன் கேட்க…

“எதுவுமே என் தங்கைக்கு, என் இந்துவுக்கு முதலில் கிடைக்கணும்… அது வேலை, கல்யாணம், குடும்பம், சந்தோஷம், உறவு… இப்படி எதுன்னாலும், அவளுக்கு தான் கிடைக்கணும் முதலில்… அதுதான் என் விருப்பமும், ஆசையும் கூட….” என்றாள் வள்ளி…

அவள் அந்த வார்த்தைகளை சொல்லும்போது அவள் முகத்தில் தெரிந்த வலியும் , வேதனையும் அவன் கண்களுக்கு தப்பாமல் இல்லை…

“சரி உன் தங்கையையும் வர சொல்லு, வந்து ஜாயின் பண்ணிக்க சொல்லு….” என அவன் கூறவும்,

அவள் அமைதியாய் இருந்தாள்…

“என்னாச்சு வள்ளி?...” என அவன் கேட்க…

“இல்ல அவ இப்போ படிச்சிட்டிருக்கா… இன்னும் ஒரு வருஷம் ஆகும் அவ படிப்பை முடிக்க…” என்றாள் அவள்…

“ஓ… அப்போ சரி… ஒரு வருஷம் கழிச்சு அவங்களையும் ஜாயின் பண்ணிக்க சொல்லு…. இப்ப சந்தோஷமா?...”

“இல்ல… அவளுக்கு சிபாரிசு பிடிக்காது…” என வள்ளி சொல்லி முடித்ததும்…

அவனுக்கு எதுவோ சரியில்லை என்று புரிந்தது… “சரிடா நீ வீட்டுக்குப் போ… ஒருவருஷம் கழிச்சு நீயும் உன் தங்கையும் இங்க ஜாயின் பண்ணுறதுக்கு நான் வேற ஒரு ஏற்பாடு செய்யுறேன்… சரியா?...” என அவன் கனிவாய் கேட்க….

அவள் அவனின் அழைப்பில் பாசத்துடன் கட்டுண்டாள்…

அறை வாயில் வரை சென்றவள், அவனை நின்று மீண்டும் திரும்பி பார்க்க, அவன் சிநேகத்துடன் புன்னகைத்தான்… அவனின் புன்னகை அவளுக்கும் தொற்ற, அழகாய் அவளும் புன்னகைத்து வருகிறேன் என்ற பாவனையில் தலை அசைத்து விடைபெற்றாள்…

அந்த வார கடைசியில் அம்பிகாவை கோவிலில் வைத்து பார்த்த போது, அவர் மெல்ல அவளிடம் விசாரித்தார்… “உனக்கும் பாலாக்கும் எதாவது பிரச்சினையா?...” என்று…

அவள் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்கவே, “கேட்குறேன்ல சொல்லேண்டி….” என அவர் மீண்டும் அழுத்தி கேட்க

“இல்ல….” என்றாள் அவள்…

“அப்படி பிரச்சினை இல்லைன்னா, நீயும் அவளும் ஏன் பேசிக்கிறது இல்ல?... அவளுக்குத்தான் எல்லாம் முதலில் கிடைக்கணும்னு துணாகிட்ட ஏன் சொல்லணும்?... சொல்லுடி…”

“கடவுள் நாங்க பேசுறதை கொஞ்ச நாள் தள்ளிப் போட்டிருக்கார்… அவ்வளவுதான்… சீக்கிரமே நாங்க பேசிப்போம்… ஹ்ம்ம்… இப்போ நாம கிளம்பலாமா?...” என்று அவள் கேட்ட போது,

“சரியான அழுத்தக்காரிடி நீ….” என்று சொல்லிவிட்டு கோபமாக சென்றுவிட்ட அம்பிகா, கஸ்தூரியும் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சினை பற்றி எதார்த்தமாக கேட்க, அவரும் அனைத்தையும் சொன்னார்…

வ்ருதுணனிடம் மேலோட்டமாக சொன்ன அம்பிகா, “பாவம்டா வள்ளி… அவ மேல எந்த தப்பும் இல்லை… அதே நேரத்துல பாலாவையும் நான் குறை சொல்ல்லை… கடவுள் ஏன் தான் இப்படி இந்த இரண்டு பிள்ளைகளையும் பிரித்து வைத்து பார்க்கறாரோ தெரியலை….” என்று சொல்லிவிட்டு சென்றுவிட..

அவன் யோசனையில் ஆழ்ந்தான்… அன்று வள்ளி சொன்னதின் அர்த்தம் அவனுக்கு இன்று விளங்கிற்று முழுமையாய்… எதற்காக அவள் அன்று எல்லாம் தன் தங்கைக்கு முதலில் கிடைக்கணும் என்று விரும்புகிறாள் என்றும் அவன் புரிந்து கொண்டான் அவளின் மனதை…

ஒரு வருட முடிவில், பாலா வீட்டிற்கு கம்பெனியிலிருந்து இன்டெர்வியூ அட்டெண்ட் செய்ய சொல்லி லெட்டர் வர, அவளும் சென்றாள்… அவளின் மதிப்பெண்களும், அவள் கேள்விகளுக்கு பதில் சொன்ன விதமும், அங்கிருந்தோரை கவர, அவளை செலக்ட் செய்தார்கள்… அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரும், கொடுத்துவிட, அவள் முகத்தில் சந்தோஷம் கூத்தாடியது…

வீட்டிற்கு சென்று உமாவிடம் நேராக விஷயத்தை சொல்லி, சந்தோஷப்பட்டு, எனக்கு வேலை கிடைச்சிட்டு…. என சிவநாதனிடமும் சொல்லி மகிழ, அதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வள்ளிக்கு கண்கள் கலங்கிவிட்டது… புன்னகை மட்டும் அப்படியே உதட்டில் நிலைத்து இருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.