" எங்க போற ஜெனி ? நீயும் இங்க இரு "
" இது பாரு "
" ஷ்ஷ்ஷ் ..ஓவரா பேசிட்டே போற நீ .. கொஞ்சம் பக்கத்துல இருக்குறவங்களையும் பேசவிடு தெய்வமே " என்றான் கிண்டலும் கெஞ்சலுமாய் .. இப்போதைக்கு தனக்கு கொடுக்கப்பட்ட ஒரே கடமை இவர்களை பார்த்து முறைப்பது தான் என்பது போல , முறைத்து கொண்டு நின்றாள் தீப்தி ..
" முதல்ல நான் உன்னை அறைஞ்சதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன் தீப்தி .. " என்றான் கவீன் .. அவளை பேச விடாமல் அவனே தொடர்ந்து பேசினேன் ..
" நான் அறைஞ்சதுக்கு காரணம் கோபம் இல்லை ..ஏமாந்துகிட்டு இருக்குற உன்னை தடுக்க முடியலையேன்னு இயலாமை " என்றான் அவன் ..
" என்ன புது புது கதையா சொல்லிட்டு இருக்க ? என்ன பேசுற நீ ?"
" நான் நடந்ததை தான் பேசுறேன் .. பிரகாஷ் பத்தி " என்றான் .. பிரகாஷின் பெயர் சொன்னதுமே தீப்தியின் கண்களில் கள்ளத்தனம் குடியேறியது .. சட்டென அமைதியாகி இருந்தாள் அவள் .. யார் பிரகாஷ் ? என்ன ஏமாற்றம் ? இவனுக்கென்ன இயலாமை ? ஒன்றும் புரியாமல் விழித்தாள் ஜெனி .. இருவருக்குமே விளக்குவது போல நடந்ததை கூற ஆரம்பித்தான் கவீன் ..
" தீப்தி if I not wrong, உனக்கு பிரகாஷை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் .. நீ அவனை காதலிக்கிறியா ?"
" லுக் நீ எதுக்கு என் பெர்சனல் விஷயத்துல தலையிடுற ?"
" நீ கூட என் பெர்சனல் விஷயத்துல தலையிட்ட ஞாபகம் இல்லையா தீப்தி ? ஜெனி அப்பாகிட்ட எங்களை பத்தி சொன்னியே .. அப்போ இருந்து இப்போ வரைக்கும் அவளுக்கும் அவ அப்பாவுக்கும் ஒரு விரிசல் வந்ததே அதை உன்னால சரி பண்ணிட முடியுமா ? பெத்தவங்களுக்கு தான் பிள்ளை காதல் பண்ணுறான்னு தெரியறதே அதிர்ச்சி அதையும் யாரோ ஒருத்தர் மூலமா தெரிய வரும்போது அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு நீ நினைச்சியா ? ஜெனி அவங்க அப்பா முகத்தை பார்க்கும்போது எல்லாம் எவ்வளவு கஷ்டபடுவான்னு நினைச்சியா ? அதுவும் நாங்க என்ன லவர்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு இங்கயும் அங்கயும் சுத்தினோமா ? எவ்வளவு கற்பனைகளும் கனவுகளும் இலட்சியங்களும் சுமந்தோம் , அதை எல்லாத்தையும் உன்னால் சரி பண்ணி தர முடியுமா ?" வேதனை நிறைந்த அவன் குரலில் ஒருத்தி ஆடி போய் நிற்க அருகில் இருந்த ஜெனியோ கண்ணில் திரண்ட கண்ணீரை மறைக்க முயற்சித்தாள் ..
" சோ , பழி வாங்குறியா ? "
" நீ எதையும் சரியாவே யோசிக்க மாட்டியா ? எதுக்கு எடுத்தாலும் அவசர புத்தி .. கண்டிக்க வேண்டியவங்க கண்டிச்சு இருந்தா நீ இப்படி இருந்திருக்க மாட்ட!" இப்போது கண் கலங்குவது அவளது முறையானது .. " உன்னை காயப்படுத்துறது என் நோக்கம் இல்லைத்தான் ..ஆனா அதே நேரம் மனசுல பட்டதை மறைச்சு வைக்கவும் என்னால முடியாது .. "
" .."
" இந்த ஒரு வாரமாய் க்ளாஸ் முடிஞ்சு ஹாஸ்டலுக்கு உடனே போகாமல் எங்க போன நீ ?"
".."
" நீ எக்கேடு கேட்டு போனால் எங்களுக்கு என்னன்னு இருக்க முடியாது தீப்தி ..நமக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நீயும் என் ப்ரண்ட் தான் .. நமக்குள்ள நடக்குற சண்டைய எப்போதுமே நான் பெரிது படுத்தி பார்த்தது இல்ல .. உன் வழில வந்து விட்டு புடிச்சு உன்னை திருத்தனும்னு தான் நினைச்சேன் .. உன் கூட பழகின சில நாளுலேயே நீ ஏன் இப்படி இருக்கன்னு புரிஞ்சது ... நீ அன்புக்கு ஏங்குறதை என்னால உணர முடிஞ்சது .. ஆசைக்காக எதையும் செய்ய துணிஞ்சவ தீப்தின்னு எண்ணம் போய் , அன்புக்காக நீ என்ன வேணும்னாலும் செய்வன்னு நான் உணர்ந்தேன் .. அப்போவே நான் உனக்கு உண்மையான நண்பனாய் இருக்கணும்னு ஆசைபட்டேன் .. இது எல்லாம் ஜெனிக்கு தெரியும் ..அதனால்தான் இதுவரை அவ என்னிடம் சண்டை போடவே இல்லை !"
" ..."
" ஆனா , நீ என்னை உன் ப்ரண்டா நினைக்கவே இல்லைல தீப்தி ?"
" .."
" நான் என்ன நடந்துச்சுன்னு சொல்லுறேன் கேட்டுக்க . இந்த ஒரு வாரமாய் நீ லேட்டா ஹாஸ்டல் வரன்னு தெரிஞ்சு நானே உன்கிட்ட போன்ல கேட்டேன் .. ஆனா நீ எனக்கு உண்மையை சொல்லாம ஏதேதோ காரணம் சொன்ன .. அதுக்கு பிறகு நானே உன்னை follow பண்ணப்போதான் பிரகாஷை பார்த்தேன் .. அவனை பத்தி கேட்டப்போ நீ என்ன சொன்ன ? ஜஸ்ட் ப்ரண்ட் என் விஷயத்துல நீ தலையிடாதேன்னு கோபப்பட்ட .. "
"..."
" அவன் யாருன்னு உனக்கு தெரியுமா ?"
" .."
" அந்த பெரிய வீட்டோட டிரைவர் இல்ல .. அந்த வீட்டுக்கே சொந்தக்காரன் அவன்தான் "