ஆனாலும் இதுவே இறுதி தீர்ப்பு….. இதுக்கு மேல இதைப் பத்தி நீ நினைச்சா கூட நல்லதுக்கில்ல என்ற உணர்வு உண்டாகும் வகையில் வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு கட கடவென கிளம்பிப் போனான் அவன். எப்படிப் பட்டவள் இவள்….???? ஒவ்வொரு நிமிடமும் இவனை இப்படியும் அப்படியுமாம் கொதிக்க வைக்கும் கொள்ளைக்காரி…..
அனுவோ அவனது வார்த்தைகளில் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டதை அவன் காணவும் இல்லை….கவனிக்கவும் இல்லை…..
ஆனாலும் அடுத்த நாள் இவன் வீட்டில் இல்லாத நேரத்தில் “நான் ஊருக்குப் போய்ட்டு கனி ஆன்டிய கூட்டிட்டு வரேன்” என சொல்லித்தான் எனினும் அனு கிளம்பிப் போய்விட்டாள் என கேள்விப் பட்ட போது ஒரு புறம் ‘ப்ளான் வேலை செய்யாதுன்னு தெரிஞ்சதும் கோழி பறந்துட்டு’ என அவன் நினைத்தாலும்……உள் மனதிற்குள் ஏனோ அவனுக்கு எதோ வகையில் ஏமாற்றமாகவும் வேதனையாகவும் உறுத்தலாகவும் இருந்தது.
‘சே… இது என்ன இவ என்ன செய்தாலும் இவனுக்கு கஷ்டமா இருக்குது?’
பவிஷ்யாவிற்கோ காதில் விழுந்த வார்த்தைகளில் கண நேரம் உலகம் கிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங் என்ற சத்தத்துடன் ஸ்தம்பித்துப் போனது….
ஜிவ்வென மேலெழுந்து முகத்தை சிவக்க செய்யும் ரத்த ஓட்டம் துள்ளி எழுந்தாலும்…..இதய இடுக்கெல்லாம் இவன் வார்த்தைகள் சிலீர் சிலீர் என துளாவி துளாவி ஓடினாலும்….. அதுவாக விழிகள் விரிந்து கொண்டு போனாலும்….அதையெல்லாம் அப்படியே காட்டக் கூடாதென்ற அறிவின் அதட்டலில்…….. கண்ணுக்குள் தெரிந்த அப்பாவின் முகம் பார்த்த பார்வையில்….. வலுக்கட்டாயமாக கோபத்தை எடுத்து முகத்தின் மீது குடியேற்றிக் கொண்டாள்….. முறைத்தாள்…..
“என்ன….ரொம்ப ஓவரா பேசுறீங்க?” இவள் முகம் சுண்ட கேட்க
அபயனோ “எது? என்னது ரொம்ப ஓவர்? என்ன தப்பா சொல்லிட்டேன்….? யவி என் அண்ணன்னு சொல்றது தப்பா ? “ என்றான் சீரியஸாக ஒன்றும் புரியாத பாவத்தில்…..
“அத சொல்லலை….அடுத்து சொன்னதை…..?” இவள் விளக்க
“அடுத்தா…? அடுத்து என்ன சொன்னேன்…?” அவன் இன்னும் புரியாத பாவத்திலேயே குழப்பத்தோடு கேட்க… அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள் இவள். இவன் எதுவும் நிஜமா சொல்லவே இல்லைபோலவே….அவன் முக பாவம் அப்படித்தான் இருந்தது.
‘ஐயையோ பவி முன்னால உனக்கு அவன் எப்ப பாரு மனசுக்குள்ள அப்பப்ப வந்துட்டு போற அளவுல இருந்தான்….இப்ப எதிர்ல நிக்றான்னதும்…..மனசுல அவன் பேசுற மாதிரி சீனெல்லாம் சத்தத்தோடு வருது போலயே…. அதை அவன்ட்டயே வேற நீ உளறி வைக்கியே….. பவிஷ்யா உள்ளுக்குள் பதறி இப்போது ஒரு ‘நே’ பார்வையுடன் அவன் முகம் பார்க்க…..
அவனோ இயல்பாய் அடுத்து பக்கவாட்டில் பேசும் யாரையோ திரும்பிப் பார்ப்பது போல் முகத்தை அவளிடமிருந்து திருப்பி…..வாய்க்குள் சிரித்துக் கொண்டான்.
‘பவி என்னை விரும்புறது நிஜம்தான்…....ஆனா அதை ஒத்துக்க அவ ரெடியா இல்ல…. அதுக்கு அவளுக்கு கொஞ்சம் டைம் வேணும்……நம்ம வீட்லயும் அதி கல்யாணம் முடியுற வரை நான் வெயிட் பண்ணித்தான் ஆகனும்…..அதுவரைக்கும் பவிப் பொண்ண கண்ணுக்குள்ள வச்சுகிட என்ன வழின்னு பார்க்கனும்…..’ அவன் தனக்குள் அதற்கு திட்டம் தீட்ட தொடங்கியிருந்தான்.
அதே நேரம் அங்கே வந்து சேர்ந்தாள் நம்ம பைக் பைங்கிளி ரெஜினா….. வேஷ்டி சட்டை இல்லாமல் ஒழுங்காய் சல்வாரில் முழு பெண்ணாய் வந்தாள் அவள்…… இவளைப் பார்க்கவும் நேராக இவளிடம் தான் வந்தாள்…..
“எங்கடி அவ…… ? ” ரெஜி வரும் போது அவளது எனர்ஜி லெவல் இப்படித்தான் இருந்தது…… டாப் கியரில் எகிறியது… “தலைல தட்டி தலப்பாகைய கழற்றி….நாய்க்கு பயந்து தலைதெறிக்க ஓட வச்சது மட்டுமில்லாம…..இப்ப தலை மறைவா வேற இருக்காளா?”
‘ஐயோ இவ பாட்டுக்கு அபயன் யவி அண்ணாவோட தம்பின்னு தெரியாம….. அவன் முன்னாடியே நிலு இங்க வந்திருக்கத உளறி வைக்காளே….’ பதறினாள் பவிஷ்யா…..யவ்வனுக்கு நிலவினி பத்தி சொல்ல வேண்டும்தான்…. ஆனால் நிலு நாளை திருமணம் ஆகி வர இருக்கும் வீட்டில் உள்ளோர்க்கு நிலு இங்க வந்தது தெரிய வருவது நல்லதுக்கு இல்லையே….. கிரமாமாச்சே….. என்னன்னு நினைப்பாங்க? என்னல்லாம் சொல்லுவாங்களோ?’
“அவ….. இங்கதான்…..வா வா நாம போய் பார்ப்போம்……” ரெஜியிடம் சொல்லிய பவிஷ்யா “நாங்க கிளம்புறோம் அபயன் “ என அவசர அவசரமாக விடைபெற்றாள். ரெஜியை இழுத்துக் கொண்டு நடக்கவும் தொடங்கினாள்….
“என்னடி ஆச்சு? நம்ம நிலு இன்னும் வரலையா…..நானாவது நாய்க்கு வேஷ்டி சட்டைய இனாம் கொடுத்து தப்பிச்சு வந்துட்டேன்…..அவ நாய பார்த்தா அவ்ளவு கூட யோசிக்க மாட்டாளே…..பயங்கரமா பயப்படுவாளே… இந்த இவர் தான் என்னை நீ இங்க இருக்கன்னு சொல்லி வர சொன்னார்….இவர்ட்ட சொன்னா நிலுவ கண்டுபிடிக்கவும் ஹெல்ப் பண்ணுவார்….” பவிஷ்யாவின் ஷ் ஷ் ஐ கொஞ்சம் கூட சட்டை செய்யாமல்…. இப்படி அக்கறையாய் அருகில் இருந்த அபயனைக் காட்டி ஐடியா கொடுத்துக் கொண்டே, இழுத்து வந்தவள் கூட நடந்தாள் ரெஜினா.