“உங்க அப்பாட்ட பேசுறது என் பொறுப்பு….. ஜாப் ஆஃபர் கொடுக்கிறது இந்த அண்ணா பொறுப்பு…..வந்து வேலையில சேர்றது தான் உன் பொறுப்பு…. சரிதான அண்ணா….” வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற வகையில் பேசி, தயங்கிய தன் தோழியை தலையாட்ட வைத்த ரெஜி,
அடுத்து அபயனை நோக்கி “நான் போய் அங்க விட்டுட்டு வந்த புல்லட்டை எடுக்க போறேன்…. அங்க இருந்து யவி அண்ணா ஃபார்ம்க்கு போய்டுறேன்….. பவிய அங்க வர சொல்லிடுங்க…..” என மறைமுகமாக நீங்க ரெண்டு பேரும் தனியா பேசுங்க, நான் குறுக்க வரலை என தெரியபடுத்தியவள் கிளம்ப எத்தனிக்க…
“ஒரு நிமிஷம் நான் யவிட்ட பேசிடுறேன்……அண்ணி அங்க தான் இருக்காங்களான்னு கன்ஃபார்மா தெரிஞ்சுகிட்டு அங்க போங்க……இல்லனா மத்த இடத்துல தேடிப் பார்க்கனுமே அவங்களை….” என சொல்லி தடுத்தான் அபயன். அவன் சொல்வதில் உள்ள சூழ்நிலை புரிய இப்போது ரெஜியும் பவியும் நிலு பற்றி தெரிய காத்து நின்றனர்.
அப்பொழுதுதான் யவ்வனை அழைத்தான் அபயன். அதே நேரம் அங்கு நிலு நாயாட்டு படலம் முடிந்து உடைமாற்ற போயிருந்தாள். நிலு அங்கு இருக்கிறாள் என தெரிந்ததும் ரெஜி கிளம்ப எத்தனிக்க “…..இது லஞ்ச் டைம்….. வீட்ல இருந்து உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொண்டு வர சொல்லிருக்கேன்…..சாப்டுட்டு போகலாம்……அங்க அண்ணிக்கும் யவிக்கும் கூட சாப்பாடு போயிருக்கும்…. “ என அபயன் அந்த நேரத்திலும் விருந்தோம்பலை பக்காவாக கவனிக்க…..
பவி மனதில் முன்பு அவனை சந்தித்த அந்த நாளின் தாக்கம் இப்பொழுதும்……எந்த சூழலிலும் இவன் இவள் விழி அசைவை கூட கவனித்து அவள் தேவைகளை புரிந்து….அத்தனையாய் பார்த்துக் கொள்வான்தானே…. பவியின் கண்கள் இவர்கள் இருவரையும் உள்ளிருந்த அலுவலக அறைக்கு அழைத்துப் போய் …..அங்கு வந்திருந்த உணவை இவர்களுக்கும் தனக்குமாய் பரிமாறிக் கொண்டிருந்த அவன் கண்களிலேயே இப்பொழுதும் நிற்கிறது….
அவனோ பாத்திரங்களை திறப்பதும், பார்த்து கவனித்து மூன்று தட்டிலும் ஒன்றொன்றாய் எடுத்து வைப்பதும், இடை இடையில் இவன் கண்களை பார்வையால் விழுங்கிக் கொண்டிருப்பவள் மீது விழி நிறுத்துவதுமாய் இருந்தான்….
அவன் முகத்தில் விரவிக் கிடந்தது சுக ரசனை….சிறு புன்னகை….குட்டிக் குறும்பு…..உன் ஃப்ரெண்ட் பக்கத்தில இருக்கிறப்பவே இப்டி சைட் அடிக்கியே…..உனக்கும் சேர்த்து நான்தான் வெட்கப்படனும் போலயே என்ற எண்ணமும்..…..
ரெஜினாவிற்கோ உரிமையாய் நான் பரிமாறுறேன் என அபயனிடமிருந்து பாத்திரத்தை பிடுங்கவும் தயக்கம்….. என்னதான் ஃப்ரெண்டோட வருங்காலம்னாலும்….அவளுக்கு இன்னைக்குத்தானே அறிமுகம் அவன்….. அதற்காக அபயனை பரிமாறவிட்டு ஜாலியாய் சாப்பிடவும் கடும் சங்கடம்…. அதுவும் நிலுவோட மாப்பிள்ளை வீட்ல வந்து சட்டமா சாப்ட வேற உட்கார்ந்திருக்காங்க இவங்க…. வீட்ல தெரிஞ்சிதோ ….இப்படி பலவித எண்ணத்தில் தர்மசங்கடப் பட்டு கொண்டிருந்தவள்….. கொஞ்சம் லேட்டாத்தான் பவி பொண்னு நிலைமையை கவனித்தாள்…..
‘கடவுளே இன்ஸ்டெண்டா கரடியா மாறுறது எப்டின்னு எனக்கு இப்டி ப்ராக்டிகலா நீங்க காமிச்சிருக்க வேண்டாம்…..’ மனதிற்குள் புலம்பியவள்……
இங்க இருந்து இப்பவே காணாம போறதுக்கு என்ன வழி என்ற ரேஞ்சில் முழிக்க….. அபயன்தான் “புல்லட்ல வந்திருக்கீங்களே உங்கள்ள யாரு புல்லட் ஓட்டுவீங்க” என பேச்சை ஆரம்பித்து சூழலை சுமுகமாக்க முயன்றான்….
புல்லட் என்றதும் ரெஜினா சற்று இயல்பாய் பேச தொடங்க….பவிஷ்யாவோ இன்னும் மௌனத்தில். ஒரு நாள் தேவதூதன் போல தேடி வந்து உதவி செய்துவிட்டு….மறு நாள் முகவரி இன்றி மறைந்து போக இவனால் முடியும்…..அத்தனை அக்கறையாய் அவளை அன்று பார்த்துக் கொண்டவன்….ஒரு வார்த்தை சொல்லாமல்…..ஓடி மறைந்துவிட்டான்…..அதன் பின் இத்தனை நாளில் அவன் ஞாபகம் வராத ஒரு நாள் இவள் வாழ்வில் வந்திருக்கிறதாமா? ஆனால் அவன் இவளை சட்டை செய்யவே இல்லையே…..
இன்றும் இவள் முன் இத்தனை அக்கறையாய் நிற்கிறான்தான்…..ஆனால் நாளை காற்றில் மறைய மாட்டான் என என்ன நிச்சயம்….. இவள் மனம் இப்படிப் பட்டவன் பின் ஏன் செல்கிறதாம்….? என்று ஓடிக் கொண்டிருந்தது அவள் மனது.
அத்தனை நாளாய் ஏதோ ஒருவகையில் உள்ளுக்குள் அவனுக்காய் ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு இன்று திடுதிப் என அவன் எதிரில் வந்து நின்ற நேரத்திலிருந்து இயல்பாய் இருக்க முடியவில்லை…. …..அவனைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியும்… மனம் முழுவதும் அதனோடு சார்ந்த கிளர்ச்சியும் மட்டுமே….. ஆனால் இப்பொழுதோ மனம் அறிவின் ஆளுகைக்கு போக போக அவன் மீது ஒரு கோபம்….கூடவே எதிர்காலம் இல்லாதது இந்த உணர்வு என்ற புரிதல்…..
சாப்பாட்டைப் பார்த்து தலையை குனிந்து கொண்டவள் அதன் பின் நிமிரவே இல்லை….யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை….. அபயன் நெற்றியில் விழுகிறது குழப்ப முடிச்சு…. என்னாச்சு இவளுக்கு??? அன்று அங்கிருந்து தூத்துக்குடி கிளம்பும் வரையுமே அடுத்து பவிஷ்யா அவனை நேரோடு நேர் பார்க்கவும் இல்லை….ஒரு வார்த்தை பேசவும் இல்லை….