“அவர் பிசினஸ் பண்றேன்னு சொன்ன உடன உங்களுக்கு பயம் வரலையா?”
“உடனே எனக்கு பயம்தான் வந்தது. அதெல்லாம் வேண்டாம். கண்டிப்பா வேலை கிடைக்கும். அதையே தேடுங்க. நமக்கு பிசினஸ் எல்லாம் பண்ணிப் பழக்கம் இல்லைன்னு எவ்வளவோ சொன்னேன். ஆனா அவர் கேக்கலை. அவர் நண்பர் பெரிய பிசினஸ் புள்ளின்னும் அவருக்கு அதுல இருக்கற நெளிவு, சுளிவு எல்லாம் தெரியும்ன்னும் எதுவும் தப்பாகாதுன்னு சொல்லி என் வாயை அடைச்சுட்டார். அவர் என்கிட்டே இத்தனை சொன்னதே பெரிய விஷயம். பட்டுத் திருந்தட்டும்ன்ன்னு நானும் விட்டுட்டேன். ஆனா அவர் என்ன பிசினஸ் பண்ணிட்டு இருந்தார்ன்னு எனக்கு ஸ்ரீதர் தம்பி வீட்டுல இருந்து வந்து சொன்ன உடனதான் தெரியும்”
“இது நம்பறா மாதிரி இல்லையேம்மா. விமலா காலேஜ் சேர்ந்த புதுசுலன்னா அவ நிச்சயம் வரைக்கும் கிட்டத்தட்ட ஆறு வருஷம் பிசினஸ் பண்ணி இருக்காரு. அத்தனை நாள் உங்களால கண்டு பிடிக்க முடியலையா”
“கண்டுபிடிக்கவே முடியலை சார். அவர் என்கிட்டே சொன்னது fancy ஸ்டோர் கடை வச்சிருக்கறதா. அங்க என்னையும் கூட்டிட்டுப் போய் காமிச்சார். அவரோட நண்பரையும் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அறிமுகப் படுத்தி வச்சார். ரெண்டாவது அது ரொம்பப் பெரிய கடை எல்லாம் இல்லை. சின்ன கடைதான். ரொம்ப ஆடம்பரம் எல்லாம் இல்லை. அதனாலயும் நான் நம்பினேன். ஆனா அவர் கடைல வச்சு வித்தது fancy பொருள் இல்லைன்னு எனக்குத் தெரியாமப் போச்சு”, என்று கூறியபடியே அழ ஆரம்பித்தார். ரூபா கண்கலங்கியபடியே தன் அன்னையை சமாதானப்படுத்த அப்படி என்ன பொருள் விற்றிருப்பார் என்று தேவி சாவித்ரியைப் பார்த்தாள்.
தன்னைத் தேற்றிக் கொண்டு மீண்டும் அவர்களின் கதையை சொல்ல ஆரம்பித்தார் சாவித்திரி.
“தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம கணவரும், குழந்தைகளும் எதை சொன்னாலும் நம்பிக்கிட்டு வீடே உலகம்ன்னு இருக்கற பெண்களும் இந்த காலத்துல இருக்கத்தான் செய்யறாங்க வக்கீல் சார். ஒரு தடவை தப்பு செய்து மாட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை போய் வந்ததால என் கணவர் மறுபடி எந்தத் தப்பும் பண்ண மாட்டார்ன்னு நம்பினேன். அதே மாதிரி விமலா கண்டிப்பா அவங்க அப்பா பண்ற தப்புக்குத் துணை போவான்னு சத்தியமா ஒரு சதவிகிதம் கூட நான் எதிர்பார்க்கலை”
“நீங்க சொல்றது உண்மைதான்ம்மா. உங்களை மாதிரி பெண்களும் இருக்காங்க. அப்போ ஸ்ரீதர் வீட்டுல உங்க கணவர் மேலயும் பெண் மேலயும் சொன்ன குற்றச்சாட்டு உணமைதானா”
“நூறு சதவிகிதம் உண்மைதான் வக்கீல் சார். என் கணவர் வேலை இல்லாம இருந்த நாட்கள்ல அவரோட பழைய நண்பர்களை எல்லாம் சந்திச்சு வேலைக்கு முயற்சி செஞ்சுட்டு இருந்தார். அப்போதான் அவரோட ஸ்கூல்ல படிச்ச நண்பர் ஒருத்தரை சந்திச்சு இருக்கார். எப்பவுமே ஒருத்தரை நல்ல வழில கூட்டிட்டு போகத்தான் ஆள் கிடைக்கறது கஷ்டம். ஆனால் தீய வழில போக உடனே துணை கிடைச்சுடும். இவர் நண்பர் பத்தாவது ஃபெயில். ஆனா சொந்த வீடு, கார்ன்னு பணக்கார வாழ்க்கை. இவர் அவர்க்கிட்ட எப்படி இதெல்லாம் சாத்தியம்ன்னு கேட்க, அவர் வழியை சொல்லி இருக்கார். இவர்தான் எப்படிடா பணத்தை சேக்கறதுன்னு இருந்தாரே. கப்புன்னு பிடிச்சுக்கிட்டார். விமலா காலேஜ் சேர்ந்து ரெண்டு மாசம் கழிச்சுத்தான் அவங்களுக்கு கடை வைக்க தோதான இடம் மாட்டி இருக்கு. அதுக்கப்புறமும் ஒரு ரெண்டு மாசத்துக்கு ரொம்ப நல்லவங்களா பொருள்களை வித்து இருக்காங்க. அந்த நண்பருக்கு இந்த மாதிரி கிட்டத்தட்ட பத்து இடத்துல கடை இருக்கு. இந்தக் கடை முழுக்க முழுக்க விமலா அப்பா பேருல ஆரம்பிச்சது. கடை இருந்த இடம் வாடைகைதான். கடை அட்வான்ஸ், பொருள் முதலீடு எல்லாம் இவர்க்கிட்ட இருந்த பாக்கி பணம் அப்பறம் கொஞ்சம் கடன் வாங்கின்னு சமாளிச்சுட்டார். அப்போத்தான் விமலா கத்தி வீட்டுல கலாட்டா ஆச்சு. அப்பறம் இவர் அவக்கிட்ட பேசி அவளையும் கூட்டு சேர்த்துட்டு இருக்கார் போல”
“ஏம்மா இதுவரை நீங்க சொன்னதுல உங்க கணவர் பெரிசா தப்பு எதுவும் செஞ்சா மாதிரி தெரியலையே. பணம் வட்டிக்கு வாங்கினதுக்கு பதிலா எங்கயானும் கொள்ளை அடிச்சுட்டாரா”, தேவி கேட்டாள்.
“இல்லைமா, நான்தான் சொன்னேனே, என் கணவர் மாட்டிக்கறா மாதிரி தப்பு பண்ண மாட்டார்ன்னு. அவர் கடை வச்சிருந்தார்ன்னு சொன்னேன் இல்லையா, அங்க மத்தப் பொருள்களோட சேர்த்து அவர் வித்தது போதைப் பொருள்”, என்று கூற அதிர்ச்சியுடன் ரூபாவும், தேவியும் சாவித்ரியைப் பார்த்தார்கள்.
தொடரும்
{kunena_discuss:857}