12. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி
விஜிலாவுக்கு ஒரு வகையில் உறவுகள் மீது இருந்த அத்தனை நம்பிக்கையும் செத்துப் போயிருந்தது. உணர்வு ரீதியாக மனித இனத்தின் எந்த ப்ரஜையுடனும் இனி தன்னால் மனம் பிணைய முடியாதென்றே அவள் நினைத்திருந்தாள். அப்படி ஒரு விரக்தி மனதை மரத்துப் போக செய்திருந்தது அவளுக்கு.
அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அவள் இடத்தில் இருந்திருந்தால் அனேகருக்கு அப்படித்தான் தோன்றி இருக்குமாயிருக்கும். ஆனால் அப்படி என்னதான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாலும்……அவளது குழந்தை மீது வந்து பாயும் இந்த உயிர்பிடிப்பை என்னவென்று புரிவாள் அவள்?
அடுத்ததாக மனோகரியின் குடும்பம். எங்கு போக….. என்ன செய்ய…… ஏன் இருக்கிறேன் என்றே யோசிக்க கூட முடியாத நிலையில் நின்றிருந்தவளை தேடி வந்து உதவியது மனோதான்.
அந்த நேரத்துப் பசியாலா…சோர்வாலா…..குழந்தை மீது இருக்கும் உயிர்பிடிப்பு ஆட்டி வைத்த நிலையாலா இல்லை இவை அனைத்தினாலோ…..மனோ கூப்பிட்டதும் அவள் பின் வந்துவிட்டாளே தவிர….. இங்கு வந்து இப்படி மறுபடியும் அவள் மரத்துப் போன மனம் உயிர்பிக்கும் என்று அவள் நினைத்திருக்கவில்லை….எதிர்பார்த்திருக்கவில்லை….
கல்லூரி நாட்களிலேயே விஜிலாவிற்கு மனோவிடம் கவர்ந்த ஒரு விஷயம்…எத்தனை நெருக்கமான நட்பாயிருந்தாலும் அவர்கள் மீது உரிமை என்ற பெயரில் எந்த ஒரு விஷயத்தையும் திணிக்கமாட்டாள்….கண்டிப்பாய் இதை நீ செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாய் நிற்கவும் மாட்டாள்….தான் எதிர்பார்த்த மாதிரி நடந்து கொள்ளவில்லை என்பதற்காக தனது அன்பையோ அக்கறையையோ குறைத்துக் கொள்ளவும் மாட்டாள்…..
அதே மாதிரி தனக்கு சரி என்று படாத ஒன்றை யாருக்காவும் எதற்காவும் செய்துவிடவும் மாட்டாள்…..
இன்றும் மனோ இவள் விஷயம் வரை அப்படித்தான் இருக்கிறாள். இவளை கிண்டாமல் கிளறாமல் இவள் ரணம் கூட்டாமல் பார்த்து பார்த்து பரிவாய் நடந்து கொள்வதில்….கண்டிப்பாய் தாயாய் சகோதரியாய் அவள்…
மனோ தன் வீட்டுக்கு அழைத்த வந்த பின்புதான் மனோவின் அம்மாவை இவள் பார்த்தே இருக்கிறாள்…..ஆனால் விஜிலாவின் விபரம் தெரியாத வயதில் இறந்து போன அம்மா இன்று இருந்திருந்தால் நிச்சயம் இப்படித்தான் இவளிடம் நடந்து கொள்வார் என இவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ….அவரிடம் அப்படி ஒரு தாய்மையை அனுபவித்தாள் இப்பொழுதுதான் தாயாகி இருக்கும் விஜிலா….
மனோவின் அப்பாவிடமும் அண்ணனிடமும் ஏறத்தாழ அவள் பேசவே இல்லை இதுவரையும் என்று சொல்லிவிடலாம்….ஆனாலும் மனோ வீட்டில் இவள் உணர்ந்த நன்னிலை உணர்வுக்கு அவர்களின் பங்கும் மிக முக்கியமானது…..
மனோவையும் அவளது அம்மாவையும் அவர்கள் நடத்தும் விதமே இவளுக்கு ஏதோ நல்ல இடத்தில் வந்து சேர்ந்திருப்பதாய்….. பாதுகாப்பாய் இருப்பதாய் உணரவைக்கிறது…. தன் வீட்டு பெண்களை ஒழுங்காய் நடத்தும் நபர் எந்த பெண்ணையும் ஒழுங்காய்தான் நடத்துவர்……வீட்லயே ஒழுங்கா நடந்துகாத ஒருத்தன் எங்கயும் ஒழுங்கா நடந்துக்க போறதில்லை…
இப்படி பட்ட குடும்பத்திற்குள் மித்ரனா? மனோவை அவன் நாசம் செய்வதை இவள் பார்த்துக் கொண்டிருப்பதா? மனோவை இவள் கண் முன்பாக மிரட்டி கடத்திக் கொண்டு போகிறான்…. அவனைப் பத்தி இவள் இதுவரை கேள்விப் பட்ட எல்லாத்தையும் விடவே அவன் மோசம் போலும்……
இந்த வீடும் இந்த குடும்பமும் எப்படி தாங்கப் போகிறது இந்த புயலை…..இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்…..???? மனோவை எப்படி காப்பாத்த??? எதுவும் எப்படியும் போகிறது என நினைத்துக் கொண்டு சும்மா இருக்க இவளால் முடியாது….. ஆனால் என்ன செய்ய முடியும்??
யாரிடம் இதை சொல்லி உதவி கேட்க….?? நினைத்த உடன் முதலில் அனிச்சையாக மனதில் வருவது அவளது கணவனின் முகம் தான்…. அடுத்த நொடி அந்த நினைவுக்காக அவளுக்கு தன் மீதே வெறுப்பாய் வருகிறது……
இத்தனைக்கும் பிறகும் இந்த மனம் ஏன் இப்படி போகிறது…. தன் மனைவியை ஒழுங்கா நடத்தாத அவனா மனோவைப் பத்தி கவலைப் பட்டு…. அதுவும் மித்ரனுக்கு எதிரா எதாவது செய்துடப் போறான்????
எப்ப மித்ரன் பத்தி பேச்சு வந்தாலும்….”நமக்கு அவனைப் பத்தி எதுவும் தெரியாது விஜு ….அம்மாட்ட இருந்திருந்தா இப்டிலாம் ஆகி இருக்க மாட்டானா இருக்கும்….இதுல அவனைப் போய் எப்டி குறை சொல்ல ?” என சப்பை கட்டு கட்டுவான் ரொம்ப உத்தம அண்ணன் மாதிரி…. இப்பவும் அதே பதிலை சொன்னாலும் சொல்வானாய் இருக்கும்….
இல்லை அந்த அளவுக்கு இவட்ட பேச கூட அவனுக்கு நேரம் இருக்கா என்ன?
விஜுவா….இனி அவன் ஏன் இவளை அப்டிலாம் கூப்ட போறான்? ஒரு வேளை…….சே இப்ப ஏன் இந்த அறிவு கெட்ட மனசு இப்டி கிடந்து இவன் பின்னால போய்ட்டு இருக்கு……
இப்ப ப்ரச்சனை மனோவை காப்பாத்றது…..என்ன செய்யனும்????? என்ன செய்யலாம்….???