(Reading time: 30 - 60 minutes)

'பொய்... இந்த வீடியோலே இருக்கிறது எல்லாமே பொய். என்னை அவமான படுத்தணும்னு இதை தயார் பண்ணி இருக்கான் அவன். நான் இல்லை அது. சந்திரிக்கா குடிச்ச தண்ணியிலே நான் எதையும் கலக்கலை. நான் எதையோ கலக்குற மாதிரி வீடியோ எப்படி தயார் பண்ணான்னு எனக்கு தெரியவே இல்லை. நம்பாதீங்க. யாரும் இதை நம்பாதீங்க...'  

மைக்கில் அலறியது மேகலாவின் உச்சக்கட்ட குரல். இதழ்களில் வெற்றி புன்னகை ஓட ஒரு பெருமூச்சுடன் ரிஷி மேகலாவையே பார்த்திருக்க........ அரங்கம் அதிர்ச்சி கலந்த அமைதியில் விழுந்து கிடக்க..... திரையில் ஓடிக்கொண்டிருந்தன மேகலா நடித்த திரைப்படங்களிலிருந்து எடுக்க பட்ட  காட்சிகள்!!!!

சில நொடிகள் கழித்து மேகலாவின் பார்வை திரையில் விழ விக்கித்து போனார் அவர்.. என்ன நடந்தது என்று புரியவே சில நிமிடங்கள் பிடித்தது மேகலாவுக்கு. ரிஷியிடம் மொத்தமாக தோற்றிருந்தார் அவர் அரங்கத்தில் இருந்த அனைவரது பார்வையும் மேகலாவையே மொயித்து எடுத்தன. பல வருடங்களுக்கு முன் நடந்தவைகள் எல்லாருக்கும் கிட்டத்தட்ட புரிந்திருந்தன.  உடல் கூசிப்போய் தலைகுனிந்து  நின்றிருந்தார் மேகலா.

ஜெயித்திருந்தான் ரிஷி.!!!! மேகலா செய்ததை அவர் வாயிலிருந்தே வரவழைத்திருந்தான் அவன்!!!! அவனிடம் அப்படி ஒரு வீடியோ பதிவே இல்லை என்பது தான் உண்மை. அப்படி ஒன்று தன்னிடம் இருக்கிறது என்றே மேகலாவை நம்பவைத்து அந்த பயத்தை வைத்தே காரியம் சாதித்திருந்தான் அவன்.

இந்த விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக புரிய சஞ்சாவே கொஞ்சம் திகைத்து தான் போயிருந்தான். அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார் இந்திரஜித். சந்திரிக்காவுக்கு இப்படி ஒரு அநியாயத்தை மேகலா செய்திருப்பது இப்போதுதான் தெரிய வந்தது அவருக்கு. மேகலா இதையெல்லாம் செய்தபோது அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லையே!!!!

சந்திரிக்காவும் ராமனுமே கூட இதை எதிர்பார்க்கவில்லை தான்.

'என்னங்க இதெல்லாம்.????' என்றபடி சந்திரிக்கா கொஞ்சம் பதற்றத்துடன் எழுந்தார். ஆரம்பத்திலேயே மேகலாவோட எந்த பிரச்சனையும் வேண்டாம்னு தானே நாம அவன் கிட்டே சொல்லி  அனுப்பினோம்???'. அவரை கைப்பிடித்து அமர்த்தினார் ராமன். 

'அவன் ஆரம்பிச்சிட்டான். நாம இப்போ. ஒண்ணும் செய்ய முடியாது. நடுவிலே போனா அவனுக்குத்தான் அவமானம் கொஞ்சம் பொறுமையா இரு.'

அசைவற்று போய் அமர்ந்திருந்தாள் அருந்ததி. அரங்கத்தில் பரவிக்கிடந்த சின்ன சின்ன சலசலப்புகளையும் நிறுத்தியது அந்த நொடியில் ஒலித்த ரிஷியின் குரல்.

'நான் உங்க எல்லார்கிட்டேயும் கொஞ்சம் பேசணும்...'

அங்கே நிற்க முடியவில்லை மேகலாவால். மேடையை விட்டு அவர் கீழே இறங்கிவிட அவர் எத்தனித்த போது 'ப்ளீஸ் மேகலா மேடம்....' என்றான் ரிஷி. 'கொஞ்ச நேரம் இருங்க. நான் உங்களையும் வெச்சிட்டு தான் பேசணும்....' இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று புரிந்து போக அப்படியே நின்றார் மேகலா.

'முதலிலே நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும். இது ரொம்ப சந்தோஷமான விழா. நாளைக்கு புது வருஷம். எல்லாரும் ஆடிப்பாடி கொண்டாட வேண்டிய இந்த நேரத்தை நான் கொஞ்சம் தர்மசங்கடமா மாத்திட்டேன்தான்.. ஆனா எனக்கு இதை விட்டா இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியலையே....' என்றான் நிதானமாக.

'யாரையும் அவமான படுத்தணும் பழி வாங்கணும்னு  நான் நினைக்கலை. எங்க அம்மா என்னை அப்படி ஒரு புத்தியோட வளர்க்கவும் இல்லை. இப்போ கூட எங்க அம்மாவும் அப்பாவும் என் மேலே ரொம்ப வருத்ததிலேதான் இருப்பாங்க. அது எனக்கு நல்லாவே தெரியும்...' எல்லார் பார்வையும் ஒரு முறை சந்திரிக்கா ராமனை தொட்டு திரும்ப தொடர்ந்தான் ரிஷி.

'இது எல்லா கலைஞர்களையும் கௌரவிக்குற ஒரு விழா. அம்மாவுக்கு எங்கேயுமே  எப்பவுமே கிடைக்காத கௌரவம் இங்கே கொஞ்சம் கிடைக்கட்டுமேன்னு நினைச்சேன் அவ்வளவுதான்...'

'இதோ தான் எங்கம்மாவுக்கு செய்ததை தன்னோட வாயாலேயே ஒத்துகிட்டாங்க மேகலா மேடம். இத்தனைக்கும் அவங்க எங்கம்மாவோட உயிர் தோழி. ஒரு முறை அவங்களோட மானத்தை கூட காப்பாத்தி இருக்காங்க அதுக்காக நான் இப்போ கூட அவங்களை கையெடுத்து கும்பிடுவேன்...'  ஆனா அதுக்கு அப்புறம் ....... ???'

நிமிரவில்லை மேகலா.

'எங்க அம்மா சினிமாலே நடிச்சாங்க. அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களிலே நடிச்சாங்க. அதை தவிர வேறே எந்த தப்பும் செஞ்சது இல்லைன்னு இங்கே இருக்கிற பல பேருக்கு தெரியும். ஏன் இங்கே நிக்குற மேகலா மேடமுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அப்படி இருந்தும் அவங்களுக்கு பல வகையிலே கெட்ட பெயர் வர காரணமா இருந்திருக்காங்க இவங்க.'

'என்னை பத்தியும் இங்கே எல்லாருக்கும் நல்லா தெரியும். எங்க அம்மாவை பத்தி தப்பா பேசினவங்களை நான் அடிச்சிருக்கேன்னும் எல்லாருக்கும் தெரியும். எங்க அம்மான்னு இல்லை எந்த நடிகை பத்தி தப்பா பேசினாலும் எனக்கு இதே கோபம் தான் வரும்.

அது எப்படி சார்???? எல்லா துறையிலும் கெட்டவங்களும், நல்லவங்களும் சம அளவிலே இருக்கும் போது நடிக்க வந்தவங்க எல்லாருமே தப்பானவங்கன்னு முடிவு பண்றீங்க'  அவனையும் அறியாமல் அவன் குரல் எகிற அருகில் இருந்த தண்ணீரை குடித்து தன்னை நிதான படுத்திக்கொண்டு தொடர்ந்தான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.