14. காதல் பின்னது உலகு - மனோஹரி
பகல் நேரத்தில் படுக்கையில் படுத்தபடி யோசித்துக் கொண்டிருந்த நிலவினி காலையில் சீக்கிரம் எழுந்ததால் மட்டுமல்ல, நகை பற்றி யவ்வன் நடந்து கொண்ட விதம் அவளது திருமணம் குறித்த பயத்தின் ஆணிவேரையே அசைத்திருந்ததால் உள்ளத்தில் தோன்றி இருந்த ஒரு இறுக்கம் நீங்கிய தளர்வு நிலையில் அவளையும் மீறி தூங்கியிருந்தாள்.
சற்று நேரத்தில் யவ்வனது தொழில்முறை நண்பர் ஒருவர் காலையில் திருமணத்திற்கு வர முடியாதவர் இங்கு வந்து சேர….யவி நிலவினியை எழுப்ப மனமின்றி அவளை தூங்கவிட்டுவிட்டு கீழே இறங்கி வந்துவிட்டான்.
அவள் விழிப்பதற்குள் திரும்ப வந்துவிடலாம் எனதான் அவனுக்கு எண்ணம். ‘பயந்துகிட்டே இங்கயே இருங்கன்னு சொல்லிட்டுல்லா அவ தூங்க போயிருக்கா?’ ஆனால் ஒவ்வொருவராய் உறவினர்கள் வந்து அவனிடம் பேசிக் கொண்டிருக்க…. நேரம் போய்க் கொண்டே இருந்தது.
மதிய சாப்பாடு நேரம் வெகுவாக தாண்டி செல்ல….மகன் படு பிஸியாக இருப்பதை கவனித்துக் கொண்டிருந்த மரகதம் பவிஷ்யாவை கூப்பிட்டு நிலவினியை அழைத்துவர அனுப்பிவிட்டார். ‘சாப்டுட்டு அடுத்து மறுவீடு வேற கிளம்ப வேண்டி இருக்கு….மறுவீடு போய்ட்டு வந்து இங்க சின்னதா ரிஷப்ஷன்….அது முடிய எவ்ளவு நேரம் ஆகுமோ? எல்லோரும் காலைலயே சீக்கிரம் எந்திரிச்சவங்க…..எல்லாம் சீக்கிரம் முடிஞ்சாதானே எல்லாருக்கும் நல்லது…’ என்பது அவருக்கு.
இதற்கு இடையில் நிலவினி அப்போதுதான் ஏதோ ஒரு உணர்வில் விழித்திருந்தாள். முதலில் சில நொடி ‘ஆங்…..நான் எங்க இருக்கேன்’ என்ற ரேஞ்சில் பொண்ணு முழிச்சாலும்….
அடுத்து அவளது கணவனை காவல் வைத்துவிட்டு தூங்கப் போனதிலிருந்து ஜல்ஜல் வரை சகலமும் ஞாபகம் வர, விட்டுட்டுப் போனவன் மீது வந்த கோபத்தைவிடவும் அதிகமாக வந்த ‘மம்மி கால்’ பயத்தில் இவள் துள்ளி எழுந்து … கசங்கி இருந்த சேலையை அந்த நேரத்திலும் சரி செய்து கொண்டு…..கதவைப் பார்த்து ஓடியவள் காதில் விழுகிறது அந்த
“இப்டிலாம் அழுது தப்பிச்சுடலாம்னு நினைக்காத….ரெண்டு டைம் தான் ஐ லவ் யூ சொல்லியிருக்க….மூனாவது தடவை என்ட்ட தரலை நீ….ஆனாலும் அது என் கைக்கு வந்துட்டதால பனிஷ்மென்ட்டை சின்னதா மாத்திட்டேன்…எல்லோர் முன்னாலயும் நீ சொல்ல வேண்டாம்….பட் இங்க இப்ப என் முன்னால மட்டும் சொல்லிட்டு போ…” என்ற அபயனின் குரல்.
என்னதான் பயத்தில் ஓடி வந்திருந்தாலும் நிச்சயமாய் இப்படி ஒரு சூழ்நிலையில் காதலர்களுக்கு இடையில் போக இவளுக்கு சுத்தமாய் விருப்பமில்லை…..’அபயன் யாரையும் விரும்புறாங்க போல….இவ இந்த சூழ்நிலைல அவங்கள பார்த்துட்டா அவங்களுக்கும் தர்மசங்கடம் இவளுக்கும்தான்…’ என்னதான் லவர்ஸ் பேசுறதை கேட்கிறது எக்ஸ்ட்ரீம் இன்டீசன்ஸி என திரும்பி நடக்க எண்ணினாலும், கால் மம்மி பயம் காலை கட்ட, நடை நான் வரமாட்டேன் என்க, இப்பொழுது காதில் விழுகிறது
“அபை ப்ளீஸ்” என்ற பவிஷ்யாவின் கெஞ்சல். மிரண்டு போனாள் நிலவினி.
‘இல்ல இருக்காது ….….இது பவியா இருக்காது…’ இவள் தன்னைத் தேற்றிக் கொண்டாலும் உறுதியாய் அது பவி இல்லை என தெரியாமல் கால் நகரமறுக்கிறது.
அடுத்து தீட்டியிருந்த இவள் காதில் தெளிவாக விழுகிறது அந்த ”ய ல்யூப்ல்யூ டெப்யா” அது பவியின் குரல்தான்….அதோடு இது ரஷ்யன் ஐ லவ் யூ என இவளுக்கு சொல்லித் தந்தவளும் அந்த பவிதான்.
‘20 நாள் அறிமுகத்தில் இந்த பவி என்ன இப்டி????!!!!!!’
‘ஐயோ பவி அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன நடக்கும்???? பவி அப்பா ஒரு மாதிரி பிடிவாதக்காரர். பவி மேல நிறைய பாசம் உண்டுதான்…ஆனால் எந்த முடிவையும் அவர்தான் எடுக்கனும்னு நினைக்கிற டைப்…..அதோட காதல்ன்றது அவரைப் பொறுத்தவரை உலகமாகா கெட்ட வார்த்தை. எல்லாத்துக்கும் மேல பவி மேல அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு….
“என் பொண்ணைப் பத்தி எனக்கு தெரியும்வே….எங்க அனுப்பினாலும் என் பொண்ணு என் பொண்ணாதான் இருப்பா….என் பொண்ணாதான் வருவா……நான் கை காட்ற மாப்ளய தவிர எவனையும் எம் பிள்ள நிமிந்து பார்க்காதுவே…..உனக்கு தெரிஞ்ச பொண்னு படிக்கப் போன இடத்துல எவன் கூடயாவது ஓடிப் போனா, நான் ஏன்வே என் பொண்ண படிக்க வைக்காம இருக்கனும்…என் பொண்ண எங்க என்ன படிக்கவைக்கனும்னு எனக்கு தெரியும்…” என அவர் பவியை ராஷ்யாவுக்கு படிக்க அனுப்ப வேண்டாமே என சொன்ன ஒரு நபருக்கு பதில் சொன்னதை இவளே கேட்டிருக்கிறாள்….
குடும்பத்துக்காரங்க அத்தனை பேர் பவியை வெளிநாடு அனுப்ப வேண்டாம் என சொன்ன போதும் தனி ஆளாய் முடிவு செய்து அவளை அனுப்பி வைத்தவர். அத்தனை நம்பிக்கை அவருக்கு மகள் மேல்….அதே நேரம் அத்தனையாய் சுயமாய் முடிவு எடுப்பவரும் கூட….
அவர்ட்ட போய் பவி ‘நான் லவ் பண்றேன்பா ‘ என நின்றால் என்ன நடக்கும்? முதல்ல அப்டி போய் நிக்குற தைரியம் பவிக்கு உண்டாமா? கண்டிப்பா அவங்க அப்பாட்டல்லாம் சொல்லிக்க கூட மாட்டா…சொன்னாலும் அவங்க அப்பா ஒத்துக்க போறதும் இல்ல….கடைசில அபயனும் பவியும் அழுதுட்டே பிரிவாங்க....
இதுக்கு இடையில உன் பொண்ணுதான் என் பொண்ணை அவ கொழுந்தன் கூட இழுத்துவிட்டுட்டானு பவி அப்பா நிலு வீட்ல போய் எத்தனை தடவையோ சண்டை போட்றுப்பாரு……ரெண்டு வீடும் ஒருத்தர்க்கு ஒருத்தர் எதிரின்னு ஆகிப் போயிருக்கும்… நிலுவுக்கும் பவிக்கும் பேச்சு வார்த்தைக்கு கூட வழி இல்லாம போயிருக்கும்….