அவனை தொட்டு பார்க்க ஏங்கிய ரசிகர்களின் கைகள் அவனை நோக்கி நீள ஆரம்பிக்க, கூச்சலும் சந்தோஷ அரவராங்களும், 'ரிஷி... ரிஷி...' என்ற அவர்களின் கூச்சலும்.... அவர்களது அன்பும் ....அவனை அப்படியே தூக்கி விட்டிருந்தனர்... கொஞ்சம் தடுமாறித்தான் போனான் ரிஷி. முன்பு கூட படப்பிடிப்பு தருணங்களில் ஓரிரு முறை இப்படி நடந்தது உண்டு. கூட்டத்தை விலக்கிக்கொண்டு போலீஸ்காரர்கள் அவனை நோக்கி வர முயல
அதற்குள் சமாளித்துக்கொண்டு அவர்களை விட்டு இறங்கிய நொடியில் சட்டென ஏதோ ஒன்று உறைத்தது. அவனுக்கு பின்னால் மிக அருகில் இருந்தார் பரந்தாமன்..... அவர் கையில் ஏதோ இருப்பது புரிகிறது அவனுக்கு.
இப்போது அவர் அவனை குத்தினால் கூட யார் இதை செய்தார்கள் என யாருக்கும் தெரிய போவதில்லை. அவர் கையில் எடுக்கிறார் அந்த அதை. அந்த கத்தியை கண் இமைக்கும் நேர இடைவெளி சற்று பக்கவாட்டில் சாய்ந்து அவர் கையை பிடித்துவிட்டான் ரிஷி. அதற்குள் ஒரு ரசிகனின் கரம் அவனை தனது பக்கம் இழுத்தது. ரிஷி நிலைதடுமாறி சாய்ந்த போதும் அவர் கையை விடுவிக்கவில்லை.
ஆனாலும் கிடைத்த இடைவெளியில் அவர் பயன்படுத்திக்கொண்டு பரந்தாமன் ரிஷியின் நோக்கி குனிந்து.. ரிஷி சமாளித்துக்கொண்டு விலகிய நொடியில்.......
'ரிஷி சார்.' ஒரு அலறல் அவன் காதில் விழுந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் வந்திருந்தான் திவாகர். அதற்குள் போலீசார் ரிஷியை அடைந்துவிட்டிருந்தனர். பரந்தாமன் போலீசாரின் பிடியில்!!! திவாகர் ரத்த வெள்ளத்தில்!!!!
'பரந்தாமன் திரும்ப திரும்ப தப்பு பண்றீங்களே???" ஆதங்கத்துடன் வெளிவந்தது ரிஷியின் குரல். எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டன காமெராக்கள்.
கூட்டத்தை விட்டு விலகி வெளியே வந்திருந்தான் ரிஷி. திவாகர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தான்.
'நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்பா நீ வீட்டுக்கு போ...' அப்பா அவனையும் அருந்ததியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
கிளம்பும் முன் அப்பாவை ஒரு முறை பார்த்துவிடத்தான் துடித்தது அருந்ததியின் உள்ளம். ஆனால் இத்தனை நடந்த பிறகு அம்மாவின் முகம் பார்க்க கூட விருப்பம் இல்லை அவளுக்கு. பேசாமல் கணவனுடன் நடந்தாள் அவள்.
அவர்கள் இருவரும் குழந்தையுடன் வீடு வந்து சேர மொத்தமாக தோற்றுப்போய் அமர்ந்திருந்த மேகலாவிடம் வந்தான் அஸ்வத்.
'அம்மா டாக்டர் அப்பா பத்தி ஏதோ பேசணுமாம்'
சட்டென தன்னிலைக்கு வந்தார் மேகலா. காலையில் இருந்தே இயக்குனர் கண் விழிக்காதது மேகலாவின் அடி மனதில் உறுத்திக்கொண்டே தான் இருந்தது.
முழுதாக ஒரு நாள் கடந்திருந்தது. திவாகர் அபாய கட்டத்தை தாண்டி விட்டிருந்தான். திவாகரின் மனைவி மருத்துவமனைக்கு வந்திருக்க ஜானகி அம்மாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டிருந்தனர் அம்மாவும் அப்பாவும்.
அதே நேரத்தில் அங்கே மருத்துவமனையில்...
பல நூறு அழுத்தங்கள் ஒரே நேரத்தில் மனதை அழுத்த உண்மைகளை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தார் மேகலா. .உடலெங்கும் பல குழாய்கள் இணைக்கப்பட்டிருக்க ஐ.சி.யூவில் ஸ்மரணை இன்றி படுத்துக்கிடந்தார் இயக்குனர். உடலில் இருந்த ரத்தம் மொத்தம் வடிந்து விட்டதை போன்றதொரு உணர்வில் அமர்ந்திருந்தார் மேகலா.
'என் இந்தரின் புன்னகையை மறுபடியும் பார்த்து விட்டால் போதும்... வேறெதுவும் தேவை இல்லை எனக்கு'.
புகழின் உச்சியில் இருப்பது என்பது பனிக்குன்றின் மீது நிற்பதை போல்தான். பனி உருக உருக தன்னாலே கீழே இறங்குவது தவிர்க்க முடியாத ஒன்று.. இதோ எல்லாம் உருகி வடிந்து கீழே கிடக்கிறது.
'அப்போதெல்லாம் மேகலாவின் கார் வந்து நின்றால் அதை சுற்றிக்கொள்ளும் ரசிகர் கூட்டம். இன்று நாடு வீதியில் நின்றாலும் திரும்பிப்பார்க்க ஆள் இல்லை. எத்தனை ரசிகர்கள், எத்தனை நண்பர்கள் எங்கே போனார்கள் எல்லாரும்.???? பலருக்கு நேரமில்லை, சிலருக்கு மனமில்லை.
இன்று இத்தனை நாள் உடல் மனம் என எல்லாவற்றிலும் நிரம்பி இருந்த அகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறி என எல்லாம் தவிடு பொடியாகி இருந்த இடம் தெரியாமல் காணமல் போக, உலகத்திலேயே தான் தான் மிகப்பெரிய ஏழையோ என்ற ஒரு எண்ணத்துடன், செய்வதறியாது அமர்ந்திருந்தார் மேகலா.
'சார்க்கு லிவர் ரொம்ப டேமேஜ். ஆயிருக்கு ' நேற்று மிக சாதாரணமாக சொன்னார் டாக்டர்.
'எப்படி டாக்டர் திடீர்ன்னு...'
'திடீர்னு எல்லாம் இல்லை. இவருக்கு கொஞ்ச நாளாவே சிம்டம்ஸ் இருந்திருக்கணும். நீங்க யாரும் கவனிக்கலை. இப்போ ஜாண்டிஸ் வேறே அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்லே இருக்கு. நாங்க பாதி லிவரையாவது காப்பாத்திடலாம்னு பார்க்கிறோம் எவ்வளவு சீக்கிரம் பண்றோமோ அவ்வளவு நல்லது. இல்லேன்னா லிவர் ட்ரான்ஸ்பிளான்ட் பண்ண வேண்டி இருக்கும் அது இன்னமும் கஷ்டம்.. 'நாற்பது லட்சம் செலவாகும். ஏற்பாடு பண்ணிடுங்க. ' சொல்லிவட்டார் மருத்துவர்.