ஒரு பெருமூச்சை எறிந்தான்.
"இதோ இன்னும் 83 மணி நேரம் உனக்காக நான் காத்திருக்க வேண்டும். எனக்குள்ள எதாவது காதலிச்சவனுடைய ஆவி புகுந்திருக்கோ .. ஏன் நான் இப்படி பைத்தியமா ஆயிட்டேன்... ஹ்ம்ம் எல்லாம் உன்னால தான்...
உனக்கு கல்யாணம் இப்போ வேண்டாம்னு சொன்னயாமே ... நான் தான் உனக்காக பார்த்திருக்கிற மாப்பிளைன்னு உனக்கு தெரியாம தான் நீ என்னை சந்திக்க போற... நானும் உன் கிட்ட இதை சொல்ல முடியாது.. சொல்லவும் மாட்டேன்... இந்த மதி திருமண பந்தத்தில் உன் கை கோர்க்கும் போது உன் காதலனா தான் கை பிடிப்பேன்... நான் உன்னை காதலிப்பதை போல நீயும் என்னை எனக்காகவே காதலிக்கணும்...உன் பெற்றோர் பார்த்த மாப்பிளை என்று நீ என்னை மணக்க கூடாது...i will sweep you of your feet my darling..." என்று எண்ணியபடி கண்மூடி தன் இருக்கையில் சாய்ந்தான் மதி.
காலையில் எழும்போதே படு உற்சாகத்துடன் தான் எழுந்தாள் மது. நாளை இந்த நேரம் தன்னுடைய வீட்டில் தன் குடும்பத்தாரோடு இருப்பாள் என்ற எண்ணமே இந்த மகிழ்ச்சியான மனநிலையை கொடுத்தது. பெங்களூர் வந்து ஒரு மாதம் ஓடி விட்டது. இது வரை இத்தனை நாளெல்லாம் தன் வீட்டினரை விட்டு இருந்தது இல்லை. எந்த சூழ்நிலையிலும் அவள் குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவர் அவளுடன் இருப்பர். இது தான் முதல் முறை அவள் தனியே வந்து வசிப்பதும் ஒரு பயணம் மேற்கொள்வதும். நேற்று இவளும் திவ்யாவும் சேர்ந்து வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் ஒருமுறை சரிபார்த்து அந்த டிராலி பாக்கில் எடுத்து வைத்தாள். மணி 8.30ஐ தொட்டது. தன் மொபைலில் கால் டாக்ஸிக்கு சொன்னவள் திரும்பி உறங்கி கொண்டிருந்த திவ்யாவை பார்த்தாள். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் "பிசாசு ஆபீஸ்க்கு போகணும்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லை...என்னமோ சம்மர் வேக்கேசன்ல இருக்கற கொழந்தை மாதிரி நல்லா கவுந்தடிச்சு தூங்கறா... ஹ்ம்ம் எதாவது பண்ணனுமே... என்ன பண்ணலாம்?" என்று சில வினாடிகள் யோசித்த மது, மெதுவாக திவ்யாவின் அருகில் சென்று அவள் காதுக்கு பக்கத்தில் போய், "அய்யயோ திவி எழுந்திரு மீட்டிங்குக்கு டைம் ஆயிடுச்சு... எழுந்திரு " என்று பதட்டதுடன் கத்த, படபடவென எழுந்த திவ்யா "அய்யயோ என்னோட நோட் பேட் எங்க பென் எங்க என்று மெத்தையில் கை வைத்து பரபரவென்று தேடியவள் நிலைமை புரியவும் ஒரு நிமிடம் அமைதியாக அப்படியே அமர்ந்தவள், திரும்பி மதுவை பார்த்தாள். அவள் வயிற்றை பிடித்து கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டிருந்தாள்.
எப்போதும் ஆபீசில் மதிய உணவு இடைவேளையில் உறங்கும் வழக்கம் உண்டு திவ்யாவிற்கு. அதை பயன்படுத்தி தான் இப்போது மது திவ்யாவை பயமுறுத்தியது.
திவ்யா முறைப்பதை கண்டவள் ஒரு எட்டு பின்னால் வைக்க, "அப்படியே நில்லு. நின்னா ஒரே அடியோட போய்டும் இல்லை ஓடினா மவளே தொரத்தி பிடிச்சு பொலந்துருவென்... எது வசதி" என்ற படி கட்டிலில் இருந்து இறங்கினாள் திவ்யா.
"இல்லை நான் நின்னாலும் நீ என்னை ஒரு அடியோட விட மாட்ட...எனக்கு தெரியும்... அதனால நான் ஜூட் .."என்று ஓட தொடங்கினாள் மது.
இருவரும் சிறிது நேரம் ஓடி விளையாடி கொண்டிருக்க, மதுவின் மொபைல் அடித்தது.
"அய்யயோ டாக்ஸி புக் பண்ணுனதே மறந்துருச்சு... டாக்ஸி வந்துருச்சு... நான் கெளம்பறேன் திவி... நீ சீக்கிரம் வா ஆபீஸ்க்கு...ஒகேவா... பை டி.." என்றபடி அந்த டிராலியைம் இழுத்து கொண்டு கீழே ஓடினாள் மது.
"பார்த்து போடி... டிராலியொட சேர்ந்து நீயும் உருண்டராதே" என திவ்யா குரல் கொடுத்தாள்.
ஒரு வழியாக மேக்னா வருவதற்கு முன்பே ஆபீஸ் வந்து விட்டாள் மது. கீழே செக்யுரிட்டியிடம் பேக்கை கொடுத்துவிட்டு உள்ளே வந்து தன் இருக்கையில் அமர்ந்து அன்று வந்த மெயில்களை பார்த்து கொண்டிருந்தாள்.
"ஹே மது வாட் எ சர்ப்ரைஸ்... எப்பவும் திவ்யா கூட வருவ...இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் அதுவும் உன் உயிர் தோழி இல்லாம வந்துருக்கே " என்றவாறு அவள் அருகில் இருந்த சேரை இழுத்து அதில் அமர்ந்தவனைக் கண்டு சற்று மிரண்டு தான் போனாள் மது.
கிரண், அந்த கம்பெனியில் 5 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறான். அமைச்சரின் மிக நெருங்கிய உறவினன். அதனால் அவனுடைய செல்வாக்கு அங்கே கூடுதலாக இருந்தது.
மதுவின் அழகு அவனுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அவள் இங்கு வந்து சேர்ந்த போதே அவளுடைய அப்பாவித்தனம் அவனுக்கு புரிந்திரிந்ததால் எளிதாக அவளை தன் வலையில் வீழ்த்தலாம் என்று எண்ணினான். ஆனால் அதற்க்கு திவ்யா ஒரு தடையாக இருந்தாள் எனலாம்.