அவர் சொன்னதை போல் புடவை உடுத்தி நகைகளை அணிந்து முடியை தளர விட்டு அதில் மல்லிகை மொட்டுகள் சூடி அவள் வெளியே வந்த போது பாலசண்முகத்திடம் பேசி கொண்டிருந்த சிவசண்முகத்தின் விழிகள் ஆச்சர்யம் சந்தோஷம் என இரண்டும் கலந்து உணர்சிகளை சிந்தியது. தன் மகள் திருமணத்துக்கு தயார் என அவருக்கு புரிந்தது. இத்தனை சீக்கிரம் தன் மகள் வளர்ந்து விட்டாளென்று அவரால் நம்ப முடியவில்லை. இதே வீட்டில் அப்பா என்று அழைத்து கொண்டு இரட்டை பின்னல் துள்ள ஓடி வரும் அவரின் செல்ல மகள் மதுதான் இப்போதும் அவர் கண் முன் நிற்பது. இதோ இன்று புடவை கட்டி ஒரு இளம் பெண்ணாக திருமணதிற்கு வளர்ந்து நிற்கும் பெண்ணை கண்டு அவர் கண்கள் பனித்தன.
அதற்குள் சரண், "பெரியம்மா மது எங்கே வீடெல்லாம் தேடிட்டேன் காணோமே" என்று தேடுவதை போல பாவனை செய்ய, இடுப்பில் கையை வைத்து அவனை முறைத்தாள் மது.
"நீ யாரும்மா இடையில ... நகரு எங்க மதுவ காணோம் " என்று அவளை இந்த புறமும் அந்த புறமும் திருப்பி அவளுக்கு பின்னால் தேடுவதை போல செய்தவனின் தலையில் எம்பி ஒரு கொட்டு கொட்டினாள்.
"ஐயோ அம்மா ... ஒஹ்ஹ் மது நீயா அடையாளமே தெரியல அப்படியே பொண்ணு மாதிரி இருக்க" என கலாட்டா செய்ய,
"டேய் வேணாம் என்னால ஓட முடியாது அதனால நீ தப்பிச்ச இல்லை மவனே உனக்கு சங்கு தான்" - மது
அதற்குள் மங்களம் “காலையில என்ன சங்கு அது இதுனு கெளம்புங்க டைம் ஆயிடுச்சு கெளம்பலாம்” என்று கூறவே எல்லோரும் கிளம்பினர்.
6 மணிக்கு பட்டு வேஷ்டி சட்டை என படு அமர்க்களமாக ரெடியாகி தன் அறையிலிருந்து கீழே வந்தான் மதி. ஹாலில் யாரும் இல்லை. தன் பெற்றோரின் அறையில் பேச்சு சத்தம் கேட்கவே அங்கே சென்றான். அப்போது தான் கந்தசாமி கிளம்பி கொண்டிருந்தார். அபிராமி அம்மாள் லாக்கரில் இருந்து ஏதோ தேடி கொண்டிருந்தவர் அறைவாயிலில் அரவம் கேட்டு திரும்பினார்.
"என்ன மதி கெளம்பிட்டியா அதுக்குள்ளயும்... இன்னும் நேரம் இருக்கே " என்க, "இல்லமா மணி 7 ஆயிடுச்சு இன்னும் அண்ணா அண்ணி எல்லாம் ரெடி ஆகலையா... என்னப்பா நீங்களும் இன்னும் கெளம்பாம இருக்கீங்க " என்று கேட்ட மதியை பார்த்து வாய் விட்டு சிரித்த கந்தசாமி, "நல்லவேளை உன் அண்ணனுன்களோ அண்ணிகளோ இங்க இல்லை ...இல்லை உன்னை கிண்டல் பண்ணியே ஒரு வழி பண்ணிருப்பாங்க... தம்பி மணி 6 தான் ஆகுது உன் கடிகாரத்தை பாரு இல்லை ஒரு வேலை சீக்கிரம் டைம் ஆகணும்னு நீயே உன் கடிகாரமுள்ளை மாத்தி வெச்சுட்டியா " என்று கேட்க, மதிக்கோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடு வழிய நின்றான்.
சரியாக 7 மணிக்கு இரண்டு கார்களில் அந்த கோவிலின் முன்பு போய் இறங்கினர் அனைவரும். வெளியே இறங்கிய மதியின் மனமோ ஒரு வசமில்லை. கண்கள் அங்கும் இங்கும் தன்னவளை தேடியது. கோயிலுக்குள் எல்லோரும் நுழைய நாலாபுறமும் தன்னவளை தேடி கண்களை சுழல விட்டவாறே உள்ளே நுழைந்தான் மதி. உள்ளே சிவசண்முகமும் மங்களமும் எல்லோரையும் வரவேற்று நலம் விசாரிக்க, அவர்கள் கேட்டதுக்கெல்லாம் ஏதோ பேருக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான் மதி. சிவசண்முகத்தின் குடும்பத்தில் எல்லோருக்கும் மதியை பிடித்து விட்டது, தங்கள் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை மதி தான் என மனதிற்குள் நிச்சயித்து கொண்டனர்.
மதுவுக்கோ காட்ட வேண்டியவளை காட்டாம பொறுமைய சோதிக்கிறாங்களே என்று இருந்தது. சரணும் ரகுவும் மதியின் நிலையை கண்டு கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி "மதிவாணன் வாங்க நாம அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் " என தங்களுடன் அவனை அழைத்து செல்ல, சரி இவங்களோட போனாலாவது மதுவை பார்க்க முடியுதான்னு பாக்கலாம் என்றெண்ணி அவர்களுடன் சென்றான்.
அவர்களும் அவனின் பொறுமையை சோதிக்காது "இதோ அங்க பிரசாதம் கொடுத்துட்டு இருக்கா பாருங்க அது தான் மது. இங்க எப்போ வந்தாலும் அவளோட பாவரைட் வேலை இந்த பிரசாதம் தரது... நீங்க போயி பேசிட்டு வாங்க... ஆனா பார்த்து நம்ம பிளான் எதுவும் அவளுக்கு தெரியாது " என்று எச்சரித்து அவனை அனுப்ப,
"தேங்க்ஸ் மச்சான்ஸ் தேங்க்ஸ் யு வெரி மச் " என்று கூறி விட்டு தன்னவளை நோக்கி சென்றான்.
ஆறேழு சிறுவர்கள் சூழ நின்று கொண்டிருந்தாள் அவள். இவன் அவள் பின்னால் சென்று நின்றான்.
"அக்கா அக்கா எனக்கும் எனக்கும்" என்று சிறுவர்கள் கூச்சலிட,
"பசங்களா இப்படி எல்லாம் சத்தம் போட கூடாது.. எல்லாரும் லைன்ல நில்லுங்க...ஹ்ம்ம் ஒடுங்க…போயி லைன்ல நில்லுங்க,அப்போதான் தருவேன்" என்று ஒரு கையை இடுப்பில் வைத்து ஒரு கையில் கரண்டியை பிடித்து கொண்டு எல்லோரையும் மிரட்டி கொண்டிருந்தாள்.
அந்த சிறுவர்களின் பின்னால் அந்த லைனில் அவனும் சென்று நின்றான்.