"சரி பைரவி. லஞ்சுக்கு இங்க வந்திடு. நீ வரலையா முரளி அங்க? " -மது
"இல்லை மது இன்னைக்கு கார்மெண்ட்ஸ்ல ஒரு மீட்டிங் இருக்கு. நீங்க போயிட்டு வந்து எனக்கு உன்னோட முடிவை சொல்லு. " முரளி
மதுவின் அறையை விட்டு வெளியே வந்த பைரவி "முரளி நீங்க அங்க எல்லாம் சொல்லிட்டீங்களா." என்று கேட்க "ஹ்ம்ம் சொல்லிட்டேன் பவி. நீயும் கொஞ்சம் பார்த்துக்கோ பை பவி " என்று அவளிடம் அவன் விடை பெற்று சென்ற பின் தான் அவன் அவளை பவி என்று கூப்பிடுவது அவளுக்கு உரைக்க அவன் செல்லும் திசையையே பார்த்து நின்றவள் "சே சே வர வர இந்த மனசுக்கு விவஸ்த்தையே இல்லாம போய்டுச்சு. குப்பைத்தொட்டிக்கும் கோபுரத்துக்கு முடிச்சு போடுது. ஏதோ அவருக்கு தெரியாம வாயில வந்திருக்கும் " என்று தான் மனதை ஒரு குட்டு குட்டி அடக்கியவள் ஸ்டாப் ரூமை நோக்கி சென்றாள். இங்கோ இந்த மக்கு செல்லம் நான் பவினு கூப்டறதை கவனிச்சா மாதிரியே தெரியலையே " என்று புலம்பியபடி காரை செலுத்தினான் முரளி
அந்த காருண்யா இல்லம் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவம் தாங்கி அமைதியாக இருந்தது.
அங்கு உள்ளே நுழையும் போதே கட்டிடத்தின் சுவர்கள் வர்ணம் இழந்து பணப்பற்றாக்குறையை காட்டின.இருந்தாலும் மிகவும் சுத்தமாக பராமரிக்க பட்டிருக்கும் அந்த இல்லம் மனதிற்கு ஒரு அமைதியை தந்தது. அந்த வளாகத்தில் காரை நிறுத்தி இறங்கினர் மதுவும் பைரவியும்.
அவர்களுக்காக காத்திருந்ததைப்போல ஒரு பெண் ஓடி வந்த அவர்களை வரவேற்று அழைத்து ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அன்னை தெரசாவை போல வயதான ஒருவர் முகத்தில் கருணையும் கண்களில் மின்னும் ஒரு ஒளியோடு அமர்ந்திருந்தார்.
அவரை கண்ட மதுவின் கைகளும் பைரவியின் கைகளும் தங்களை அறியாமல் வணங்கியது.
"உக்காருங்கம்மா. " என்றவர் அந்த பெண்ணிடம் திரும்பி குடிக்க ஏதாச்சும் கொண்டு வாம்மா என்று பணித்தவர் மதுவிடமும் பைரவியிடமும் திரும்பினார்.
"முரளி சொல்லியிருந்தார். நீங்கதானே மது பைரவி. நீங்க செய்ய போற இந்த உதவி ரொம்ப பெருசு. இந்த ஹோமை நான் 40 வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்சேன். இப்போ வயசாயிடுச்சு. கர்த்தர் என்னை சீக்கிரமே அழைச்சுக்க போறார். அதுக்கு முன்னாடி இங்க இருக்கறவங்களுக்கு ஒரு மாற்று வழியை உருவாக்கணும்னு நெனச்சேன். இங்கே 300 பேரு இருந்தாங்க முதியவர்கள் பெண்கள் குழந்தைகள்னு. அதுல முதியவர்களை எல்லாம் வேறொரு முதியோர் காப்பகம் அவங்களா முன்வந்து கூட்டிகிட்டு போயிட்டாங்க . பெண்களையும் இன்னும் கொஞ்சம் பெரிய குழந்தைகளையும் அன்பு இல்லத்துல கூட்டிகிட்டு போயிட்டாங்க. இப்போ இங்க இருக்கறவங்க எல்லாம் மூன்றிலிருந்து 6 வயசு வரைக்கும் இருக்கற சின்ன பால்மணம் மாறாத குழந்தைகளும் அவர்களை பார்த்துக்கற பெண்களும் தான். "
அவர்கள் பேசிக்கொண்டிருக்க இடையில் வந்த மோரை குடித்தவர்கள் இல்லத்தை பார்வையிட்டு கொண்டே பேசலாம் என்று சொல்ல அவரும் அவர்களுடன் நடந்தவாறே விவரங்களை கூற தொடங்கினார்.
இவங்களுக்கு எல்லாம் நல்ல தரமான கல்வி தேவைக்கு உணவு இருப்பிடம் இது தான் நான் எதிர்பார்க்கறது. சில இடங்களை பார்த்தோம். ஆனா இவ்வளவு சின்ன குழந்தைகளை பார்த்துக்குற வசதி சில இடங்களில் இல்லை. சில இடங்கள்ல குழந்தைகளை மட்டும் பார்த்துக்குறோம் இங்க வேலை செய்ற பெண்களுக்கு வேலை தர முடியாதுனு சொல்லிட்டாங்க. இவங்களும் பலவிதங்களில் பலரால் கைவிடப்பட்ட பெண்கள் தான். இந்த ஹோமையே நம்பி வந்துட்டாங்க. அவங்களுக்கு நான் ஒரு நல்ல வழியை காட்டணும். அப்போதான் உங்க ஸ்கூல்பத்தி கேள்வி பட்டு முரளியை காண்டாக்ட் பண்ணுனேன். அவர் இந்த குழந்தைகளை பார்த்துப்பதோடு இந்த பெண்களுக்கும் உங்க பள்ளியிலேயே வேலை போட்டு தறதா சொன்னார். ரொம்ப சந்தோஷம். நீங்க இந்த சின்ன வயசுல பண்ற இந்த சேவையை நிச்சயம் கர்த்தர் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். அவர் உங்களை பரிபூரண சுகத்தோடு பார்த்துக்கொள்ள நான் ஜெபிக்கிறேன்" என்று கூறி அவர்கள் இருவர் நெற்றியிலும் சிலுவையை வரைந்தார்.
"40 வருஷமா இப்படி ஒரு சேவை செய்யற உங்க முன்னாடி நாங்க செய்றது எல்லாம் ரொம்பவே சின்ன விஷயம்." -மது
"நான் இதை ஆரம்பிக்க காரணம் ஒரு சுயநலம் தான். " என்றவரை ஆச்சர்யத்தோய்டு நோக்கினர் இருவரும்.