(Reading time: 38 - 76 minutes)

தற்குப் பிறகு தேவா பேசியதையே பிருத்வி அசைப் போட்டுக் கொண்டிருந்தான்... தேவா சொன்னதையெல்லாம் இவனும் முன்பே யோசித்திருக்கிறான்... இவர்கள் பிரிவால் இரண்டுக் குடும்பமும் முன் போல சாதாரணமாக பழக முடியாது என்று இவனும் யோசித்தது தான்... அதேபோல் யுக்தாவின் காதல் மேலும் இவனுக்கு சந்தேகம் இல்லை... இன்னும் சொல்லப் போனால் இந்த காதலின் தீவிரத்தில் இவனை அடைய தான் அவள் போதை மருந்தெல்லாம் கலந்தாலோ என்று இவன் சந்தேகம் கொண்டதும்... இவ்வளவு காதல் வைத்தும் ஏன் விலகிச் செல்கிறாள் என்று இவன் கவலைக் கொண்டதும்...

அந்த காதலுக்கு இவன் தகுதியானவனா..?? என்பது தான் இப்போது அவனே அவனை கேட்டுக் கொள்கிறான்... என்ன தான் இவனை உயிருக்கும் மேலாக காதலித்தாலும் இவன் அவளை சந்தேகப்பட்டதை நினைத்து அவளுக்கு இவன் மேல் கோபம் இல்லாமலா இருக்கும்..?? இவன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்டு, பின் காதலை சொல்லும்போது தவறு செய்யவில்லை என்று தெரிந்தபின்பு தான் தனக்கு அவள் மேல் காதல் வந்திருப்பதாக நினைத்துக் கொள்ள மாட்டாளா..?? என்று தான் அவன் யோசித்தான்...

ஆனால் தேவா வந்து பேசிவிட்டு போன பின்பு அவன் வேறு விதமாக யோசித்தான்... அன்று சப்னாவை இவன் காதலிப்பது தெரிந்தும் யுக்தா அவள் காதலை வெளிப்படுத்தினாள்... சொல்லாமலே தன் காதல் செத்துப் போய்விடக் கூடாதென்று தைரியமாக அவள் காதலை அவள் சொன்னாள்... ஆனால் அந்த தைரியம் இவனுக்கு ஏன் வரவில்லை...??  இவன் காதலை எதிர்பார்த்து வந்தவளுக்கு ... இவன் ஏமாற்றத்தை தானே அளித்திருக்கிறான்...

அதுமட்டுமல்ல அவள் மேல் பழியை சுமத்தி அவளை குற்றவாளியாக்கி... இன்று அவள் தப்பே செய்யவில்லை என்று தெரிந்தும்... அவளை குற்றவாளியாகவே அனுப்பப் போகிறான்... இவன் மேல் அவள் வைத்திருக்கும் அளவில்லா அன்பிற்கு இவன் தரும் பரிசு இதுதானா..?? அவள் இவனை மன்னிக்கிறாளோ..?? இல்லை தண்டிக்கிறாளோ..?? இவன் மனதில் உள்ளதை தெரியப்படுத்திவிட்ட திருப்தியாவது இருக்கட்டுமே... காதலை சொல்ல முடியவில்லை என்றாலும்.. இவன் செய்த தவறுக்கு மன்னிப்பாவது கேட்பது நியாயமில்லையா..?? என்று மாலை வரை குழம்பிக் கொண்டிருந்தான்...

அப்போது செந்திலிடம் இருந்து அழைப்பு வந்தது... எல்லோரும் ஏர்போர்ட்ல இருக்கோம்... யுக்தாவை வழி அனுப்பிட்டு தான் வீட்டுக்கு வருவோம்... நீ ஏர்போர்ட்டுக்காவது வருவேன்னு நினைச்சேன்... இவ்வளவு கல் மனசு உனக்கு இருக்குமுன்னு நான் நினைக்கலடா..?? என்று ஆதங்கப்பட்டார்...

அப்போது தான் நேரம் ஆனதை உணர்ந்தவன்... அவளிடம் மன்னிப்பு மட்டுமாவது கேட்க வேண்டும்... அது கூட இயலாமல் போய்விடுமா..?? அவளை நியூயார்க் செல்வதற்கு முன்பு பார்க்க முடியாதா..?? என்ற கவலையோடு வண்டி ஓட்டியவன் வேகமாக ஏர்போர்ட்டுக்கு சென்று பைக்கை பார்க் செய்துவிட்டு வேகவேகமாக பரிதவிப்போடு உள்ளே சென்றவன் கண்ணில் யுக்தா தெரிந்த பிறகு தான் மனம் நிம்மதியானது...

அவனை பார்த்ததும் அருகில் வந்த யுக்தா.. அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே... "எனக்கு தெரியும் பிருத்வி.. நீங்க என்ன பார்க்க வருவீங்கன்னு... எங்கே உங்களை பார்க்க முடியாமலே நியூயார்க் போய்டுவேனோன்னு நினைச்சிட்டேன்... இப்பத்தான் சந்தோஷமா இருக்கு... நீங்க வந்ததுக்கு தேங்க்ஸ்..." என்று சிரிப்போடு அவள் பேசினாலும்... கண்ணிலிருந்து கண்ணீர் வெளியே வருவதற்கு தயாராக இருந்தது... அவன் முன் அழக்கூடாது என்று அவள் கண்ணீரை கட்டுப்படுத்துவதை பிருத்வியால் உணர முடிந்தது...  முன்பு தான் ஒன்றுமே செய்ய இயலாமல் அவளை கண்ணீரோடு அனுப்பிவைத்தான்... இப்போதும் அதே தவறை அவன் செய்வானா..??

திடிரென்று அவளை மார்பில் சாய்த்தவன்... " வேணாம் யுக்தா.. என்னை விட்டுப் போகாத.. நீ இல்லாம என்னால இருக்க முடியாது... நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் யுக்தா.. உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன்... ஆரம்பத்திலிருந்தே உன்னை மட்டும் தான் நான் காதலிக்கிறேன்... எப்போதும் உன்னை காதலிச்சிக்கிட்டே இருப்பேன்... ஐ லவ் யூ..  ஐ லவ் யூ சோ மச்... நீ என்னோடையே இருந்திடு..." என்று மனசில் இருந்ததை அப்படியே சொல்லிவிட்டான்... அதை கேட்ட அவளோ அப்படியே மெய்மறந்திருந்தாள்...

இப்படி நடக்கப் போகிறது என்பதை இவர்கள் இருவருமே அறிந்திராத போது... மற்றவர்களுக்கு இது உண்மையிலேயே அதிர்ச்சி கலந்த வியப்பு தான்... பின் அந்த வியப்பு புன்னகையாக மாறியது... பின் அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரின் அருகே வந்தனர்.

"ஹேய் இது ஏர்போர்ட்னு உங்க ரெண்டுப்பேருக்கும் ஞாபகம் இருக்கா..?? இல்லையா..??" என்று வரூன் கேலியாக எச்சரித்ததும்... இருவரும் உடனே விலகினர்...

"அண்ணா.. இப்படி லாஸ்ட் மினிட்ல வந்தா உன்னோட லவ்வ சொல்லுவ...?? அண்ணி நியூயார்க் போகப் போறதா சொல்லி... டிக்கெட் எடுத்து, எல்லாம் பாக் பண்ணி... ஏர்ப்போர்ட்டுக்கு வந்ததும்... சினிமால வர மாதிரி இப்போ வந்து காதலை சொல்ற... உன்னால எல்லோருக்கும் மன கஷ்டம், டிக்கெட் பணம் நஷ்டம் இதெல்லாம் நீ யோசிக்கவே இல்லையா..??" என்றாள் பிரணதி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.