அதன்பின் யுக்தாவை மட்டும் விட்டுவிட்டு எல்லோரும் கிளம்பி சென்றபின்... அவர்கள் ஐவரும் மட்டும் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு பின் பிருத்வியும் சம்யுக்தாவும் அவர்கள் அறைக்குச் சென்றனர்...
அவர்கள் இருவரும் யூகித்தது போல் அந்த அறை முதலிரவு அறை போல் அலங்கரிக்கப்பட்டிருக்க... முதலில் அறைக்குள் நுழைந்த யுக்தா... பின்னால் கதவை சாத்திக் கொண்டிருந்த பிருத்வியிடம்..
"பிருத்வி இங்கப் பாருங்களேன்.. நாலு பேரும் காணாமப் போனது இதுக்..." என்று திரும்பி முழுவதும் சொல்லி முடிக்குமுன் அவளை இறுக்கி அணைத்திருந்தான் அவன்...
அதை எதிர்பார்க்காமல் அவள் அதிர்ந்த போது... "ப்ளீஸ் யுக்தா கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாம்... என்னால ஏர்ப்போர்ட்ல உன்னை இப்படி கட்டிப்பிடிக்க முடியல அதான்..." என்று அவன் விளக்கியதும்... அவள் அந்த அணைப்பில் அடங்கிப் போனாள்...
அவளுக்கும் இந்த அணைப்பு இப்போது தேவையான ஒன்றாக தான் இருந்தது... இந்த அணைப்பே அவன் மனநிலையை முழுதாக சொல்லிவிட்டது... இதற்கும் மேலே அவளுக்கு என்ன வேண்டும்...
என் ஆசையெல்லாம்...
உன் நெருக்கத்திலே...
என் ஆயுள்வரை...
உன் அணைப்பினிலே...
வேறென்ன வேண்டும் உலகத்திலே...
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே...
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்...
அக்கம் பக்கம் யாருமில்லா...
பூலோகம் வேண்டும்...
அந்திப் பகல் உன்னருகே...
நான் வாழ வேண்டும்...
சிறிது நேரம் அப்படியே இருக்க... பின் அவளை விடுவித்தான் அவன்...
"எனக்கு தெரியும் யுக்தா உனக்கு என்மேலே கோபம் இருக்கும்... அதுக்கு நீ என்ன தண்டனை வேணாலும் எனக்கு கொடு... ஆனா என்னை விட்டு போற தண்டனையை மட்டும் கொடுக்காத.. என்னால அதை ஏத்துக்க முடியாது..."
"என்ன பிருத்வி... உங்க மேல கோபமா..?? தண்டனை கொடுக்கனுமா..?? எனக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்ல... எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா..?? போதும் பிருத்வி.. இது போதும்... இப்பவே சாவு வந்தா கூட சந்தோ..." என்று அவள் பேசி முடிக்கும் முன்பே அவள் வாயை பொத்தினான் அவன்...
"லூசா நீ... இப்ப தான் நாம நல்லப்படியா நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருக்கோம்... அதுக்குள்ள சாவ பத்தி பேசற... அறிவே இல்லையா..?? அன்னைக்கும் இப்படி தான் சாவப் பத்தி பேசின... அன்னைக்கு நாம இருந்த நிலைமை என்னன்னவோ நடந்து போச்சு... திரும்ப ஒரு முறை இப்படி பேசினன்னா பாரேன்..." என்று வழக்கமாக வரும் கோபத்தோடு அவன் பேச... அவளுக்கோ ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது... அவள் வாயை பொத்தியிருந்த கையை எடுத்தாள் அவள்...
"பிருத்வி அன்னைக்கு நைட் நடந்ததெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?? அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ கூட நியூயார்க்கு திரும்ப போகாதன்னு அன்னைக்கு மாதிரி கெஞ்சுவன்னு பார்த்தீயான்னு நீங்க சொன்னப்பவே... உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கான்னு ஒரு சந்தேகம்... சொல்லுங்க பிருத்வி... உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா..??"
"என்ன இருந்தாலும் உன்கூட இருந்த நேரமாச்சே... நல்லா ஞாபகம் இருக்கு... ஆனா நான் தான் உனக்கு ஞாபகம் இருக்கும்னு முதல்ல ஏதேதோ நினைச்சு... அப்புறம் ஞாபகம் இருக்காதுன்னு யோசிச்சு... என்னையே நான் குழப்பிக்கிட்டேன்..."
"பிருத்வி நீங்க ஏர்போர்ட்ல சொன்னது உண்மையா..?? நீங்க என்னை மட்டும் தான் காதலிக்கிறீங்களா..?? சொல்லுங்க பிருத்வி..."
"உண்மை தான்... ஆரம்பத்திலிருந்தே நான் உன்னை தான் காதலிச்சிருக்கேன்... அது எனக்கே தெரியாம இருந்திருக்கேன்..." என்றவன் அவளை கட்டிலில் அமர வைத்தான்... பின் அவனும் அவள் அருகில் உட்கார்ந்து சிறு வயதில் இருந்து அவள் அவனை எப்படியெல்லாம் அவஸ்தைப்பட வைத்தாள் என்பதை சொல்லிக் கொண்டிருந்தான்...
அதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு... அவன் சப்னாவை காதலிக்கிறான் என்ற போது மனதில் தோன்றிய ஒரு கேள்விக்கு இது வரையிலும் விடை தெரியாமலேயே இருந்தது... இப்போது தான் அதற்கான விடை அவளுக்கு கிடைத்தது போல் தோன்றியது...
அவனை பார்க்காமல், அவனோடு பேசாமல், அவன் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலேயே ஏனோ பிருத்வியுடன் இவள் கல்யாணம் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை மனதில் இருந்தது... இங்கு வந்து பிருத்வியின் காதல் பற்றி தெரியும் வரைக்கும் கூட அந்த நம்பிக்கை மனதில் இருந்தது... பிருத்வியின் மனது தெரியாமலேயே எனக்கு அந்த நம்பிக்கை வந்தது எப்படி..?? என்று அவள் தன்னை தானே பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறாள்...