(Reading time: 17 - 34 minutes)

"ன் ஆபீஸ் ஃபைலை வச்சி ஓவியம் வரஞ்சிட்டு இருக்கியா? உனக்கு எவ்வளவு திமிரு" என்று கத்திய வசந்த் நிலாவை அடிக்க பாய்ந்தான்.

"அம்மா அம்மா" என்று அலறியபடி நிலா ஓடி வந்தாள்.

"எதுக்குடா என் பொண்ண அடிக்க வர?"

"உன் பொண்ணு பண்ணி வச்சிருக்க லட்சணம் அப்படி. எவ்வளவு முக்கியமான பேப்பர்ஸ். அதுல போய் ஓவியம் வரஞ்சி வச்சிருக்கா"

"குழந்தைங்கன்னா அப்படித்தான்" என்று தன் பேத்திக்கு வக்காலத்து வாங்கினார் நாராயணன்.

"அதுக்கு இப்படியா? குழந்தையால என் வேலை போய்ட்டா என்ன செய்வீங்க"

"விளம்பர கம்பெனில டைரக்டர் ஆகுறேன்னு மூணு வருஷம் முன்னாடி சொன்ன. இன்னும் ஆன பாடில்லை. நானும் இந்த வேலைய விட்டுட்டு உன் அக்கா கம்பனிக்கு வேலைக்கு போன்னு சொல்லி பாத்தாச்சு. காதுலையே போட்டுக்கல. கேட்டா, ஆசை, வெறி, லட்சியம்னு என்கிட்டே வசனம் பேசுற"

வசந்தால் அவரது பேச்சை மேற்கொண்டு கேட்க பிடிக்காமல் "நான் வரேன் அக்கா" என்று கூறி வீட்டை விட்டு வெளியே செல்ல முற்பட்டான்.

"ஏய்! இருடா, சாப்பிடாம போறியே"

"அவருக்கு போடு. அப்போ தான் நான் வெளிய போகும்போது எல்லாம் தெம்பா குத்தி காட்ட முடியும்" என்று கூறி விட்டு புறப்பட்டான்.

"திட்டு வாங்குறதுக்கும் தெம்பு வேணும்.  சாப்பிட்டு போக சொல்லு" என்று கூறிய நாராயணன், தன்னுடைய அறைக்கு சென்றார்.

அவர் சென்றதும் வசந்தை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள் மேகலா.

"அம்மா நான் ஸ்கூல்க்கு லீவு போடட்டுமா"

"சூடு வச்சிடுவேன் ஒழுங்கா ரெடி ஆகு"

"டைம் ஆய்டுச்சும்மா. இன்னும் நான் குளிக்ககூட இல்லை"

"குளிக்கலானாலும் பரவால்ல. முகம் கழுவிட்டு யூனிபார்ம் போட்டுட்டு வா" என்று அதட்டினாள் மேகலா.

வேறு வழி இல்லாமல் தன் அம்மா கூறியபடியே தயாராகி வந்தாள் நிலா. அவளையும் சாப்பிட வைத்த மேகலா, " வசந்த், இன்னைக்கு இவ ஸ்கூல் பஸ் வராது. நீ, இவளை ஸ்கூல்ல விட்டுடு"

"விளையாடுறியா. எனக்கு நிறைய வேலை இருக்கு"

"இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டா"

"சரி சரி" என்று கூறிய வசந்த் "நிலா" என அழைத்தபடி திரும்பினான். நிலா அங்கு இல்லை.

"அம்மா!"  என்று நிலாவின் அலறல் சப்தம் கேட்டு வசந்தும் மேகலாவும் திடுக்கிட்டார்கள். என்னவென்று பார்க்க ஓடினார்கள்  நிலா கார் ஷெட்டில் இருந்து அலறியபடி ஓடி வந்தாள்.

"கார் ஷெட்ல...கார் ஷெட்ல..." நிலா மூச்சு வாங்கினாள். "பேய்..பேய் "

மேகலாவும் வசந்தும் கார் ஷெடடை நோக்கி ஓடினார்கள். அங்கே அழுக்கான ஆடையோடும் பேய் வேஷத்தோடும் படுத்திருந்த அமேலியாவைக் கண்டு திடுக்கிட்டனர்.

"யாரு இது? இங்க எப்படி வந்தா?" என்றான் வசந்த் அதிர்ச்சியோடு.

"நானும் உன் கூட தான இருக்கேன். எனக்கு எப்படி தெரியும்?"

அமேலியா இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விடுபடவில்லை. இது வரை இப்படி உறங்கியதில்லை  அப்படி ஒரு நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள் அமேலியா.

அவள் முன் வசந்தும் மேகலாவும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அதற்குள் நிலா, தாத்தாவை அழைத்துக்கொண்டு வந்தாள்.

"தாத்தா, நான் தான் நேத்து நைட்டே சொன்னேன்ல. கார் ஷெட்ல பேய் இருக்குனு  நம்பமாட்டேன்னு சொன்னியே  இப்போ பாரு" என்று கையை பிடித்து கார் ஷெட்டிற்குள் அழைத்து வந்தாள்.

அமேலியாவைக் கண்ட நாராயணன் .வசந்தை நோக்கி, "யார் இந்த பொண்ணு?" என்று கேட்டார்.

"தெரியல, நிலா தான் முதல்ல பாத்திருக்கா. நேத்து ராத்திரில இருந்து இங்க தான் இருந்திருப்பா போல"

"அது சரி. அவ ஏன் இங்க இருக்கணும்? எதுக்காக இவ வந்திருக்கா?" என்று கேட்டாள் மேகலா.

"எல்லாரும் என்கிட்டயே கேட்டா எப்படி? .அவளை எழுப்பி கேளுங்க. நேத்து ஹாலோவீன் திருவிழால ஏதாச்சும் பிரச்சனை நடந்திருக்கும். இங்க ஓடி வந்திருப்பா போல. முதல்ல இவளை எழுப்பு அக்கா"  என்றபடி நிலாவின் பள்ளிப்பையிலிருந்து  தண்ணீர் பாட்டிலை எடுத்து மேகலாவிடம் கொடுத்தான்.

அமேலியாவின் முகத்தில் மேகலா தண்ணீரை தெளித்தாள். அமேலியா கண்களைக் கசக்கியவாறு மெல்ல இமைகளை திறந்தாள். தன் முன்னால் நின்றிருந்த மேகலாவை நோக்கிய அமேலியா அதிர்ச்சி அடைந்தாள். ஆனால், மேகலா அணிந்திருந்த புடவை அவளுக்கு எதையோ நினைவுபடுத்தியது. தனது நினைவலைகளுக்குள் சென்று கடந்துபோன பக்கங்களை புரட்டியவளின் முகத்தில் புன்னகை அரும்பியது. மேகலாவின் அருகில் நின்றிருந்த நிலாவைக் கண்டதும் இன்னும் கூடுதல் மலர்ச்சி அவளது முகத்தில்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.