அதை வாங்கிய பஹீரா, "சரி சரி நான் போயிட்டு வரேன்" என்று கூறியபடி இனிப்பை சாப்பிட்டுக்கொண்டே வந்தாள். வழியில் ஹக்கீம் நின்று கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். நடந்ததை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஹக்கீமிற்கு கோபம் தலைக்கேறியது.
பஹீரா பயந்து நடுங்கினாள். ஹக்கீமை கடந்துதான் அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும். தன் அண்ணனைத் தாண்டி எப்படி செல்வது என்று பயந்தாள். இருந்தும், சிறிது தைரியத்தோடு எதுவும் தெரியாதது போல் மெதுவாய் நடந்து வந்தவளின் தலையில் ஓங்கி அடித்தான் ஹக்கீம். அலறியபடி வீட்டை நோக்கி ஓடினாள் பஹீரா.
ஹக்கீமின் கோபம் மாலிகாவின் மேல் திரும்பியது. மாலிகாவை முறைத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான். மாலிகாவோ ஏதும் அறியாதவளாய் தன் கையிலிருந்த இனிப்புப் பண்டங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். .
மேகலா கவலையோடு அமர்ந்திருந்தாள். காலையில் அமேலியாவை சந்தித்ததில் இருந்தே அவளது கவலைகள் ஆரம்பமாயின. அவளை வெளியே செல்லுமாறு கூறிய பொழுது, தனக்கு உதவி செய்யுமாறு கண்ணீரோடு அவள் வேண்டியதை மறக்க முடியாமல் வேதனையுற்றாள்.
கல் மனதோடு அவளை வீட்டை விட்டு வெளியேற்றிய பொழுது, அவளிடமிருந்த ஆல்பத்தை தன்னிடம் கொடுத்தபோது, 'வேண்டாம்'என்று அவளிடமே கொடுத்தது மேகலாவிற்கு மன வருத்தத்தைக் கொடுத்தது.
அவள் வெளியே நின்று கண்ணீரோடு தனது மகள் நிலாவை பார்த்து புன்னகைத்தபடி 'நான் செல்கிறேன்' என்று விடைபெற்று சென்றது மேகலாவின் மன வருத்தத்தை அதிகப்படுத்தியது.
"மேகலா, என்ன ஒரு மாதிரி இருக்க?" என்றார் நாராயணன் தன் மகளைப் பார்த்து பரிவோடு.
"மனசு சரி இல்லைப்பா"
"இன்னும் அந்த பொண்ண பத்தியே நெனச்சிட்டு இருக்கியா? அவ தான் போய்ட்டாளே"
"நாம தப்பு பண்ணிட்டோமோன்னு எனக்கு தோணுதுப்பா"
"எதை பத்தியும் மனசுல போட்டு குழப்பிக்காம வேலைய பாருமா"
அமேலியா மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி பல பேர் கடந்து சென்றும், அவளுக்கு யாரும் உதவவில்லை, உதவவும் முன்வரமாட்டார்கள் என்பது அவளுக்கு புரிந்து போயிற்று. அவள் கண்களில் கண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து ஓடியது.
பசி வேறு அவளை பாடாய் படுத்தியது. கடவுள் தன் உயிரை இந்த நிமிடமே எடுத்துக்கொள்ளக்கூடாதா என்று எண்ணினாள்.
அப்பொழுது, மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் இறந்து போன ராணுவ வீரர்களின் புகைப்படங்களை தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை கடையின் கண்ணாடி வழியே பார்த்தாள். அதில் ஒரு புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அந்த புகைப்படத்தில் இருந்தவன் துப்பாக்கி குண்டுகளின் இடையே தன்னைக் காப்பாற்றியவன் என அவள் புரிந்து கொண்டாள்.
அவளையறிமால் அவளது கால்கள் சாலையில் நடந்தன. சாலைகளில் வண்டிகள் செல்வதைக் கூட மறந்து தன்னையறியாமல் சென்றவளை நோக்கி கார் ஒன்று வேகமாய் வந்துகொண்டிருந்தது. திடீரென சுயநினைவிற்குள் வந்த அமேலியா, தன்னை நோக்கி மிக அருகில் வந்துவிட்ட காரைப் பார்த்து அதிர்ந்தாள். கார் அவ்விடத்தைக் கடந்து வேகமாய் சென்றது.
அமேலியா தரையில் கிடந்தாள். சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.
தொடரும்...
{kunena_discuss:983}