இனம் புரியா கவலை மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கிறதோ என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டே இருந்தான் ஜெய்…
திருமண மண்டத்தில் ஓர் ஓரமாய் அவன் நின்ற போதும், அவன் மனதும், கவனமும் அங்கே இல்லை கொஞ்சமும்….
“மச்சான்… என்னடா இங்க நிக்குற?...”
ஜெய்யின் தோளில் இஷான் கை வைத்து அழைக்க, கொஞ்சம் தன்னிலை அடைந்தான் ஜெய்,….
“ஒன்னுமில்லடா சும்மாதான்…”
“எப்ப பாரு ஒதுங்கியே இருக்காத… வா…”
“நீ போடா… நான் வரேன்…”
“நீ வர்ற லட்சணம் தான் எனக்கு தெரியுமே….” என்ற இஷான் கோபத்தோடு ஜெய்யின் கைப்பிடித்து இழுத்துச் சென்றான் வேகமாக….
“ஜெய்… எங்கப்பா போன?... வா… இங்க உட்கார்…”
பிரசுதி அக்கறையாய் வினவி, பாசத்துடன் கூற, அவனுக்கு எப்படி மறுப்பது என்று தெரியவில்லை…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“ஆமா பிரசுதி எங்க சதியைக் காணோம்?...”
சதியைக் காணாது கேட்டார் காதம்பரி…
“வந்துடுவா காதம்பரி… தைஜூ தான் கூட இருக்குறாளே… கூட்டிட்டு வந்துடுவா…” என காதம்பரிக்கு பதில் சொன்னவர்,
“வா ஜெய்… உட்கார்…”
என மீண்டும் அழைத்தார் ஜெய்யை…
“என்னடா யோசிக்கிற?.. பேசாம உட்கார் சொல்லிட்டேன்….”
இஷானும் கொஞ்சம் மிரட்ட,
மறுப்பேதும் சொல்லாமல் அவரருகில் இருந்த சேரில் அமர இருந்தவனை தடுத்தது காதம்பரியின் குரல்…
“இதோ வந்துட்டாளே சதி…”
காதம்பரி சொன்னதும் சட்டென தன்னவளை திரும்பி பார்க்க அவன் எண்ணிய வேளையே, காலையிலிருந்து அவனை ஆட்டிப்படைக்கும் கவலையும் மனதினுள் மலை என உயர, திரும்பி பார்க்காமல் பிரசுதியின் அருகில் அமர்ந்தான் ஜெய்…
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு சதி… ரொம்ப அழகா இருக்குற இன்னைக்கு…”
சதியின் கன்னம் பிடித்து சொன்னார் காதம்பரி…
“என் மருமகளும் தான் அழகு…. நீ வாம்மா…”
என தைஜூவைக் கொஞ்சினார் பிரசுதி…
“இரண்டு பேரும் அழகு தான் போதுமா?...”
காதம்பரி சிரித்துக்கொண்டே சொல்லவும், பிரசுதியின் முகத்திலும் புன்னகை வந்திருந்தது…
“ஹே… சதி… அத்தை சொன்ன மாதிரி நீ இன்னைக்கு அழகா இருக்குறடா… ஹ்ம்ம்… என் அழகு குட்டிச்சாத்தான்….”
தங்கையை அவன் மகிழ்ந்து கொஞ்ச,
“என்னடி இவ்வளவு நேரம்?..”
சதியிடம் கேள்வி கேட்டார் பிரசுதி…
“அது ஒன்னுமில்ல அத்தை… கிளம்ப கொஞ்சம் லேட் ஆகிட்டு…”
இதே பதிலை சதி சொல்லியிருந்தால், இந்நேரம் அவளுக்கு அர்ச்சனை கொடுத்திருப்பார் பிரசுதி… ஆனால் சொல்வது அவரின் பிரியமான வருங்கால மருமகள் தைஜூ ஆயிற்றே… அதனால் மேற்கொண்டு சதியை திட்டாமல் இருந்தார் அவர்…
“சரி சரி… சதி நீ போய் இஷான் பக்கத்துல உட்கார் போ……” என மகளை விரட்டியவர், தைஜூவை தனது இடப்பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார் காதம்பரியை தள்ளி அமர சொல்லிவிட்டு…
பிரசுதியைத் தாண்டி சென்றவள் ஜெய்யின் முன் வந்து நின்றாள்…
காதம்பரி தைஜூவிடத்தில் எதையே கேட்டுக்கொண்டு திரும்பியிருக்க, சதியை கவனித்த இஷான், ஜெய்யின் அருகே தான் அமர நினைத்த எண்ணத்தை கைவிட்டான் உடனேயே…
“சதி என் நின்னுட்டு இருக்குற?..”
தங்கையிடம் கேட்டவன், “இங்க உட்கார்…” என சைகை மூலம் அழுத்தி கூற, அவள் ஜெய்யைக் கடந்து வந்து அவனின் வலப்பக்கத்தில் அமர்ந்தாள் மெதுவாக…
சதியின் வலப்பக்கத்தில் இஷானும் அமர்ந்து கொள்ள, தன் பக்கத்தில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் கூட இல்லாது, சதி அங்கே வந்ததிலிருந்து எதையுமே தன் கவனத்தில் பதித்துக்கொள்ளாமல் இருந்தான் ஜெய்…
திடீரென எதேச்சையாக இஷானிடத்தில் எதையோ சொல்ல திரும்பியவன், அங்கே சதி இருப்பதைக் கண்டதும் வார்த்தைகள் எதுவும் வரவில்லை அவனுக்கு…
அவனின் முகத்தினையே முகம் எங்கும் பிரதிபலிக்கும் காதலுடன் பார்த்திருந்தாள் சதி…