பதறிய அமேலியா, தன் கைகளை விடுவித்துக்கொள்ள முயன்றாள். ஆனால், வசந்த் அதற்கு இடம்கொடுக்காமல் அவளின் உள்ளங்கையைத் தடவிப் பார்த்தான்.
"அதான் அவளே படத்தில எல்லாத்தையும் தெளிவா விளக்கிட்டாளே. நீ ஏன் அவ கையில ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?.மிஸ்டர் நாராயணன், என்ன இதெல்லாம்? பாத்துட்டு சும்மா நிக்கிறீங்க" என்று நாராயணனைப் பார்த்தவாறே கேட்டான் ஜான்.
"டேய் வசந்த்!" என்று நாராயணன் கொதித்தார்.
"இருங்கப்பா செக் பண்ணிக்கிறேன். ஒரு தீவிரவாதிக்கான உடல் மொழியும் இவ கிட்ட இல்லை. இவளுக்கும் துப்பாக்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது துப்பாக்கி புடிச்ச கையும் இல்லை. ரொம்ப மென்மையா இருக்கு. இவ தீவிரவாதியா இருக்க வாய்ப்பில்லை"
"அதான் அவளே சொல்லிட்டாளாடா. நீ ஏன் உணர்ச்சி வசப்படுற?"
அமேலியா தன் கைகளை வெடுக்கென இழுத்துக்கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது, இதுவரை எந்த ஆண்மகனும் அவளின் கையைத் தொட்டதில்லை. வசந்த் அவளின் அனுமதி இல்லாது கைகளைப் பற்றிக்கொண்டது அவளுக்கு சொல்லமுடியா துயரினைத் தந்துவிட்டது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
"பைத்தியமடா நீ? எதுக்கு இப்போ அவ கையை பிடிச்ச?" என்று வசந்தைக் கண்டித்தபடி அமேலியாவை அணைத்து ஆறுதல்படுத்தினாள் மேகலா.
"இந்த துப்பாக்கியை எடுத்துட்டு போய் எங்கயாச்சும் வீசி எறிஞ்சிட்டு வாங்க" என்று கூறியபடி அமேலியாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் மேகலா.
வசந்தும் ஜானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"டேய் , உன் அக்கா குப்பையை வீசி எறிஞ்சிட்டு வரது போல சொல்லுறாங்க. இது என்ன சாதாரணமான காரியமா?"
"இந்த காரியத்தை ஒரு ஹீரோவால மட்டும் தான் செய்ய முடியும். அந்த கதாநாயகன் பேரு ஜான்"
"கதாநாயகன் கூடவே ஒரு நண்பன் இருப்பான். அவன் தான் அந்த துப்பாக்கியை தூக்கிகிட்டு வருவான்" என்று கூறியபடி காரை நோக்கி நடந்தான் ஜான்.
"டேய் நில்லுடா!" என்று கூறியபடி துப்பாக்கியை இடுப்பில் மறைத்துக்கொண்டு பின்னால் ஓடினான் வசந்த்.
நாராயணன் தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. என்றும் இல்லாத மன அழுத்தத்தில் அவர் இருப்பதை மேகலா அறிவாள். தவறு செய்துவிட்டோமா என்று கூட அவள் எண்ணினாள்.
தன் தந்தையின் அறையை நோக்கி நடந்தவள் சிறிய தயக்கத்திற்குப் பின் கதவைத் திறந்தாள். நாராயணன் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தார். மாலை, மணி ஆறைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.
"அப்பா"
நாராயணனிடமிருந்து பதிலில்லை.
மீண்டும், "அப்பா" என்றாள்.
"ம்ம்"
"உடம்பு சரி இல்லையா?"
"எனக்கென்ன? நல்லா தான் இருக்கேன்"
"வெள்ளிக்கிழமை இந்த நேரத்துல எல்லாம் பூஜை முடிஞ்சி போயிருக்கும். இன்னைக்கு இன்னும் தொடங்காம இருக்கீங்களே"
நாராயணன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார். என்றும் சரியான நேரத்தில் பூஜை செய்யும் அவர், இன்று ஏன் மறந்துவிட்டோம் என்று தன்னையே நொந்துகொண்டார், அவருடைய மனம் வருந்தி வருந்தி களைத்துப் போயிருந்தது. எழுந்து, மேகலாவைக் கடந்து சென்று பூஜை செய்ய ஆயத்தமானார்.
மேகலா தன் தந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"நான் உதவட்டுமா?"
"வேணாம்மா. உதவி செஞ்ச வரைக்கும் போதும்"
மேகலா வருத்தமடைந்தாள்.
"அந்த பொண்ணு என்ன பண்ணுறா?"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மேல போனா அப்பா"
"எனக்கு ஒரு உதவி பண்ணுமா"
"என்னப்பா?"
'அந்த பொண்ண பூஜை அறைக்கு எல்லாம் வரவிடாத. என் ஆச்சார்யம் கெடாம இருந்தா அதுவே போதும்"
மேகலா ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.
கை கால்களை அலம்பிவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்த நாராயணன் அதிர்ச்சியடைந்து நின்றார்.