ஆனால், நிலா விடவில்லை. வரைந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.
வேறு வழி இல்லாமல் வசந்தின் உருவத்தை தீட்டினாள் அமேலியா. அவன் மேல் இருந்த வெறுப்பை ஓவியத்தில் காட்டினாள். அவனது முகத்தை அலங்கோலமாக வரைந்து நிலாவிடம் கொடுத்தாள்.
"என் மாமாவா இது? .ரொம்ப அசிங்கமா இருக்காரே" என்று நிலா மழலை மொழியில் கூறினாள்.
"வா அக்கா, கீழே போகலாம்" என்று அமேலியாவை அழைத்துக்கொண்டு கீழே சென்றாள் நிலா.
"அம்மா! அக்கா ரொம்ப அழகா வரையறாங்க" என்று கூறியபடி மேகலாவை நோக்கி ஓடினாள் நிலா.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மன முடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்..
டைனிங் டேபிளில் நாராயணன் பூஜை செய்த கற்பூர தட்டில் தீபாராதனை எரிந்துகொண்டிருந்தது. தனது மூக்குக் கண்ணாடியை வைத்த இடத்தை மறந்து, அதைத் தேடிக் கொண்டிருந்தார் நாராயணன்.
நடுவீட்டில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கிறதே என்று பதறிய அமேலியா அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை கற்பூரத்தில் ஊற்றி அணைத்தாள்.
மூக்குக் கண்ணாடியை அணிந்தபடி வந்த நாராயணன் அமேலியாவின் செயலைக் கண்டு கடும் கோபம் அடைந்தார். நீரால் நிறைந்திருந்த பூஜை தட்டினை எடுத்த அவர், அமேலியாவின் கண் முன்னே கீழே வீசி எறிந்துவிட்டு, அமேலியாவையும் முறைத்துவிட்டு உள்ளே சென்றார்.
சமயலறையில் இருந்து நடந்ததைக் கவனித்த மேகலா தன் தலையில் அடித்துக்கொண்டாள்.
வசந்தின் கார் வேகமாய் சென்றுகொண்டிருந்தது. பூமியின் மேல் காரிருள் மெல்ல படர்ந்து கொண்டிருந்தமையால் ஆங்காங்கே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
ஜானின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
"என்னடா குளிருதா? உடம்பு இப்படி நடுங்குது?"
"பயத்துல நடுங்குதுடா"
"தப்பு பண்ணுறோம்னா பயப்பிடாம பண்ணனும். இப்படி நடுங்கிட்டு இருந்தா பைத்தியக்காரன் கூட கண்டுபிடிச்சிடுவான்"
"பல பேரை கொன்னுட்டு தப்பிச்சு போறது போல பில்டப் குடுக்குறடா. உன்கிட்ட விசிட்டிங் வாங்கினது குற்றம், நான் பர்ஸ் தொலச்சது குற்றம், அதை அவ எடுத்து உன் வீட்டுக்கு வந்து நான் இக்கட்டுல சிக்கி சின்னாபின்னமாகி இப்போ உன் கூட கார்ல வந்துட்டு இருக்கிறது எல்லாமே குற்றம்டா"
வசந்த் வேகமாய் காரை செலுத்தினான்.
"நீ என்ன பேசாம வர, உனக்கு பயமா இல்லையா?"
"உன்ன விட எனக்கு ரொம்ப பயமா இருக்கு. வெளிய காட்டிக்காம இருக்கேன், இந்த நாள் போல மோசமான நாள் என் வாழ்க்கைல இனிமே சந்திக்கவேகூடாது.சரி, அப்போவே கேக்கணும்னு நினச்சேன்.நெத்தில என்ன காயம்?"
ஜான் திடுக்கிட்டான். தன் நெற்றியை ஒரு முறை தொட்டுப் பார்த்தான். மெல்ல வலித்தது.
"என்ன அமைதியாயிட்ட?"
"இது .இது நேத்து பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன்"
"வழுக்கி விழுந்தா நெத்திலையா அடிபடும்?"
"அது..வந்து..நேத்து ஜாகிங் போக மறந்துட்டேன். அதனால குளிக்கும்போது ஜாகிங் போனேன். வழுக்கி முன்னாடி விழுந்துட்டேன்"
"எல்லார்க்கும் பின்னாடி தான அடிபடும்?"
"ஜெசிகான்ற ராட்சசி தெரியாத்தனமா இருபத்தி ஆறு வருஷத்துக்கு முன்னாடி பொறந்து தொலைச்சிடுச்சு. அதுக்கு நான் வாழ்த்து சொன்னேன். அதுக்கு கிடைச்ச பரிசு தான் இது. போதுமா? இப்போ சந்தோசமா? அடிவயிறு ஜில்லுனு இருக்குமே?"
அவனையே அறியாமல் வசந்த் சிரித்தான்.
"ஜெசிகா உன்ன காதலிப்பான்னு தோணல"
"எனக்கே அது தெரியும்"
"அப்புறம் ஏன் அவளை தொந்தரவு பண்ணுற?"
"அது தான் எனக்கே புரியல. அவளை பார்க்ககூடாது, பேசக்கூடாதுனு நினைப்பேன், ஆனா அது முடியலை"
கார் மிக வேகமாய் சென்றுகொண்டிருந்தது.
"ரொம்ப வேகமாய் போகாத வசந்த். போலீஸ் வந்துடபோகுது"
"நாம இருக்க நிலைமையில வேகமாய் காரியத்தை முடிச்சாகணும்"
கார் வேகமாய் செல்வதை, சாலையில் நின்று கொண்டிருந்த இரு போலீசார் பார்த்தனர். உடனே, அவர்கள் தங்கள் காரில் ஏறி வசந்தின் காரை பின்தொடர்ந்து சென்று நிறுத்துமாறு பணித்தனர்.
"நல்ல வாய்டா உனக்கு. போலீஸ் வந்திடுச்சு"
"ஐயோ! துப்பாக்கி இருக்கிறத கண்டுபிடிச்சிட்டா என்ன ஆகுறது?" என ஜான் பயந்தான்.
வசந்த் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜானின் மடி மேல் வீசினான். திடீரென, தன் மடியில் துப்பாக்கி இருப்பதைக் கண்ட ஜான், வசந்தை முறைத்துவிட்டு அவசரமாக தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி துப்பாக்கியை மறைப்பது போல் மடி மீது வைத்துவிட்டு அளவுக்கதிகமாகவே நடுங்கினான்.