(Reading time: 15 - 29 minutes)

11. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ப்ரியாவின் வீட்டிலிருந்து வந்து கல்யாணத் தேதி குறித்துவிட்டு சென்றிருக்க ஆதர்ஷின் வீடு கல்யாணக் கோலம் பூண்டிருந்தது.    இன்னும் முப்பதே நாட்களில் கல்யாணம் என்ற நிலையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் பிரித்து கொடுத்திருந்தார் சந்திரசேகர். 

ப்ரியாவை கண்டது முதல் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவனுக்கு இப்போது அவளின் காதல் மழையில் நனையவும் வாய்ப்பு கிடைத்திருந்தது.  தினமும் அவளுடனான தொலைபேசி உரையாடலில் திளைத்திருந்தான் ஆதர்ஷ்.  எல்லா காதல் ஜோடிகளை போல… இவனின் உரிமையான சீண்டல்களும் அவளின் சிணுங்கல்களும் செல்ஃபோன் நெட்வொர்க்காரனை வாழவைத்தது.

வீடு மற்றும் திருமண மண்டபத்தின் அலங்காரத்தின் பொறுப்பை ஜெய்யும் மைத்ரீயும் ஏற்றிருந்தனர்.  அலங்காரம் என்ற ஒற்றை வார்த்தையை சொல்வது போல அது ஒன்றும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை.  ப்ரொஃபெஷனல் டெகொரேட்டர்ஸ்களை கண்டுபிடித்து அவர்களின் தொழில் தரத்தையும் அதற்காக வாங்கப்படும் தொகையென அலசி அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பதே பெரும்பாடாகியது.  தேர்ந்தெடுத்திருந்த டெகொரேட்டர்ஸ் தங்கள் வேலையை செய்தாலும் வடிவின் அறிவுரைப்படி எல்லாவற்றையும் மேற்ப்பார்வையிடுவது இவர்களின் பொறுப்பானது.

இப்படி கல்யாண வேலைகளுக்காக இவர்கள் வெளியே செல்லும்போதெல்லாம் சரயூவையும் தங்களோடு சேர்த்து கொண்டனர்.  இதனால் க்ளாஸ் முடிந்ததும் ஜெய்யும் சரயூவும் அவசரமாக கிளம்பி விடுவர்.  சில சமயங்களில் சில க்ளாஸ்களை கட் அடிக்கவும் செய்தனர்.  இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க கிரணால் சரயூவைப் பார்க்க முடியாமல் போனது.

சரயூவை பற்றி விசாரித்த போது கிடைத்த தகவலை கௌதம் நண்பனிடம் சொன்னான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“யாரோ அவ ஃபெரெண்டோட அண்ணனுக்கு கல்யாணமா… அதுக்காக ஷாப்பிங்க்… அது இதுனு… இவ நிறைய க்ளாஸ் பங்க் பண்ணிட்டு சுத்துறாளாம்… அதான் மச்சா! உன் கண்ணுலயே படல… முக்கியமா இன்னும் ஒரு மாசத்துக்கு இப்படிதானாம்….”

இதை கேட்டதும் சிந்தனை வயப்பட்டான் கிரண். 

“என்ன மச்சா? இவ்வளவு சீரியஸா யோசிக்கிற? இதெல்லா அந்த ரூபின்கிட்ட போட்டு வாங்கினது”

‘நான் இங்க சதா சர்வகாலம் அவளை நினைச்சிட்டிருந்தா… இவ என்னடானா…ஃபெரெண்டோட அண்ண கல்யாணத்துக்காக… அதுவும் ஒரு மாசமா… அய்யோ!’

உலகத்தில் அதிகமான பேராசை கொண்டவர்கள் யாரென்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்லுவீர்கள்? என்னிடம் கேட்டால் காதலர்கள் என்று சொல்வேன்.  காதல் கள்ளதனமாக மனதில் நுழையவும் பேராசை நேர்மையாகவே மனதில் நுழைந்து கொள்கிறது.  காதல் நோயாக மாறும்போது பேராசைப் பேயாக உருவெடுக்கிறது.  காதலிப்பவரை பார்க்க போகிறோம் என்றால் நேரம் உடனடியாக அந்த நொடிக்குள் தன்னை அழைத்து செல்ல வேண்டுமென்ற பேராசை, காதலிப்பவருடன் இருக்கும்போது நேரம் நகரக்கூடாது என்ற பேராசை, ஒருதலை காதலாக இருந்தாலும் தன்னையும் தன் உணர்வுகளையும் மற்றவர் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டுமென்ற பேராசை… இது போல பல காரணங்களுண்டு காதல்களை பேராசைக்காரர்கள் என சொல்ல…. இங்கேயும் கிரண் தன் காதலை சரயூவிடன் இன்னும் சொல்லியிருக்காத நிலையிலும் அவளைப் பார்க்க வேண்டும், பழக வேண்டும், அவள் தன்னோடு நேரம் செலவிட வேண்டுமென பேராசை கொண்டான்.  

“என்னடா கிரண்? நான் கேட்டுட்டே இருக்கேன்…. நீ எதுவும் சொல்லமாட்டிங்கற”

“அது ஒன்னுமில்லை கௌதம்… சரயூவோட எப்படி க்லோஸாகறதுனு….” தன் திட்டத்தை நண்பனிடம் சொன்னவன் மறுநாளே அதை செயல் படுத்த முடிவெடுத்தான்.

ப்ரியாவின் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளை வீட்டுச் சார்பில் புத்தாடைகள் எடுக்க வேண்டியிருக்க அன்று காலை சந்திரசேகர் தயாராகி கொண்டிருந்தார்.  சமையல் ஆர்டர் கொடுத்திருந்த கேட்டரிங்க் சர்வீஸ் திடீரென ஒப்புகொண்ட தேதியில் குழப்பமிருப்பதாகவும் அவர்களால் இந்த ஆர்டரை ஏற்க முடியாது என்று ஃபோனில் வந்த செய்தியில் சந்திரசேகர் யோசனைக்குள்ளானார்.

“என்னாச்சுப்பா? யாரு ஃபோன்ல?”

மகளிடம் விஷயத்தை சொன்னவர், “துணி வாங்க போகனும்… இந்த நேரம் பாத்து சமையல்காரங்க இப்படி சொல்லிட்டாங்க… அதை வேற பாத்து விசாரிக்கனும்… எதைதா செய்யறதோ?” என்றார்.     

“நோ வெர்ரிஸ்பா! நீங்க கேட்டரிங்க் பற்றி பாருங்க.  நானும் ஜெய்யும் அண்ணி வீட்டுக்கு போறோம்”

“இல்லடா! அது சரியா வராது… அவங்க ஏதாவது தப்பா எடுத்துக்குவாங்க”

“நீங்க கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து இதை நான் எப்படி சரி செய்றனு பாருங்கப்பா!”

ஃபோனை எடுத்து ப்ரியாவின் அம்மாவிற்கு அழைத்தாள் மைத்ரீ.

“ஹலோ அத்தை! நான் மைத்ரீ பேசுறேன்”

“எப்படியிருக்க மைத்ரீ? வீட்டுல எல்லாரு எப்படியிருக்காங்க?”

“நான் நல்லாயிருக்க…. வீட்ல எல்லாரும் நல்லாயிருக்கோம் அத்தை.  இன்னைக்கு யாரெல்லாம் ஷாப்பிங் வரீங்கனு கேட்கலாம்னு ஃபோன் பண்ணினேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.