அதன் பிறகு வாரம் இரண்டு முறையாவது பெங்களுர் ஓடி வருவான் இவன். காலுக்கான பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் யோகா என இரண்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவள் முன்னேற ஆரம்பித்திருந்த நேரத்தில்தான் விஷ்வா அடிக்கடி பெங்களுர் வரும் விஷயம் அவள் அம்மாவை எட்டி இருந்தது.
'தயவுசெய்து என் பெண்ணை விட்டுடுங்க..' இப்படித்தான் ஆரம்பித்தார் அம்மா. அவங்க பெரியப்பா குடும்பம் இருக்கிற நிலையிலே நான் இப்போ கல்யாணம் பத்தி பேச முடியாது...'
'நான் அவ கழுத்திலே தாலி கட்டறேனோ இல்லையோ முதல்லே அவ மறுபடியும் சலங்கை கட்டணும். அதுக்குத்தான் நான் எல்லா முயற்சியும் பண்ணிட்டு இருக்கேன். தயவு செய்து அதுக்கு குறுக்கே வராதீங்க..' என்றான் அவன்.
அவளது அம்மா அவளை மறுபடியும் சென்னைக்கே அழைத்து செல்ல அங்கேயும் அவளுக்கான பயற்சிகளை தொடர்ந்துக்கொண்டே இருந்தான். அவனது அப்பா அம்மாவுக்கு கூட இதில் விருப்பம் இல்லைதான். ஆனால் எதற்கும் பின் வாங்கவில்லை விஷ்வா. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்திருந்தது. அந்த நாளும் வந்தது!!!
வரவேற்பில் அருகில் நின்றிருந்த இந்துஜாவின் கரம் சில்லென்று அவன் கரம் பற்றிக்கொள்ள சட்டென பழைய நினைவுகளிலிருந்து விடுப்பட்டான் விஷ்வா.
காதல் இப்படி எல்லாம் செய்யுமா என்ன??? பரத்தை பார்த்து பல முறை யோசித்திருக்கிறான். கடந்த சில மாதங்களாக அவனுக்கு ஏற்பட்ட தவிப்பும் துடிப்பும் எல்லாவற்றையும் புரியவைத்திருக்கிறது.
சற்றே நெருங்கி அவள் தோள்கள் உரசி ரகசியமாய் அவன் கரம் பற்றிக்கொள்கிறாள் இந்துஜா. எப்போதும் அவள் உதடுகள் சொல்ல நினைப்பதை விரல்கள் தானே சொல்லும். இப்போது இதமாக அவனிடத்தில் சொன்னது அது
'லவ் யூ விஷ்வா!!!'
திருமண நாள் விடிந்திருந்தது. இப்போது அவனுக்கு வந்த முதல் வாழ்த்து பரத்திடமிருந்து
'ஆல் தி பெஸ்ட் எருமை மாடு!!! நீ வாழ்க்கையிலே ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும்..' தம்பியை அணைத்துக்கொண்டான் அண்ணன்.
'தேங்க்ஸ் டா. இந்த கல்யாணம் நடக்கறதுக்கு நீதான் முக்கிய காரணம்!!!'
'என்னது தேங்க்ஸா??? நான் உன் அண்ணன்டா. நீ எனக்கு செஞ்சதுக்கு எல்லாம் நான் தேங்க்ஸ் சொல்லணும்னா கிலோ கிலோவா சொல்லணும். கோடி கோடியா சொல்லணும். நீ நிஜமா தேங்க்ஸ் சொல்லணும்னா அருணுக்கு சொல்லு. அதுதான் சரி..'
மணமேடையில் அமர்ந்திருந்தான் விஷ்வா. மனதில் இருக்கும் மகிழ்ச்சியை எல்லாம் முகம் பிரதிபலிக்க விழிகள் வெட்க நாட்டியம் ஆடிக்கொண்டிருக்க அவனருகில் வந்தமர்ந்தாள் இந்துஜா.
அவள் நடந்து வரும் அழகை அவன் ரசித்ததை விட அவள் சரியாக நடந்து வருகிறாளா என ஒரு மருத்துவனாக அவள் கால்களை அவன் ஆராய்ந்தது வேறே கதை!!!
'இதோ இன்னும் சில நிமிடங்களில் தாலி கட்டப்போகிறான். அன்று அந்த நாட்டிய நிகழ்ச்சியின் போது சலங்கையை தொட்டு வணங்கி அவள் காலில் அதை கட்டிவிட்டு நிமிர்ந்தபோது அவள்; விழிகளும் விரல்களும் கேட்டனவே
'என்னை எப்பவும் விட்டுட மாட்டியே விஷ்வா..' அந்த நினைவில் அருகில் அமர்ந்திருப்பவளின் கரத்தை தனிச்சையாக அழுத்திக்கொடுக்கிறது விஷ்வாவின் கரம்.
அன்று அரை மணி நேரம், அழகு மயிலாய் அந்த மேடையில் அவள் சுழன்ற அந்த அரை மணி நேரம் இவனுக்குள்ளே இதே கேள்விதான் 'என்னை எப்பவும் விட்டுட மாட்டியே விஷ்வா'
நிகழ்ச்சி முடிந்து எல்லாருடைய பாராட்டு மழையிலும் அவள் நனைந்து முடிக்க இரவு உணவுக்காக வந்தவர்கள் எல்லாரும் அந்த ஹோடேலை அடைய ஒரு பக்கம் அபர்ணா பரத் விஷ்வா, இன்னொரு பக்கம் இந்துஜா அவள் அம்மா இன்னொரு பக்கம் அருண் குடும்பம் என அமர்ந்திருக்க அங்கே ஒரு தர்மசங்கடமான மௌனமும் கூடவே அமர்ந்திருந்தது.
எத்தனை நேரம்தான் மெனு கார்டையே மாற்றி மாற்றி பார்ப்பதாம்??? யோசித்தபடியே விஷ்வா நிமிர அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் தள்ளியது.
பரத்தும் அருணும் கண்களாலேயே ஏதோ பேசிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் எப்போது நண்பர்கள் ஆனார்கள் என்று வியப்புடனே விஷ்வா பார்த்திருக்க
திடீரென தொண்டையை செருமிக்கொண்டு பரத் கேட்டான் 'ம்.. சொல்லுங்க அருண் எப்போ விஷ்வா இந்து கல்யாணத்தை வெச்சுக்கலாம்???'
'நீங்க உங்க வீட்டிலே பேசிட்டு சொல்லுங்க. நாங்க எப்ப வேணும்னாலும் ரெடி..' இது அருண்.
சத்தியமாய், சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை விஷ்வாவும் இந்துவும்!!! சந்தோஷ கடலில் விழுந்தனர் இருவரும்.
'எப்படிடா???' விஷ்வா பரத்தின் காதில் கிசுகிசுக்க
நான் கொஞ்ச நாளா அருண்கிட்டே இதை பத்தி பேசிட்டுதான் இருக்கேன்'. அவர்தான் அவங்க வீட்டிலே பேசினார். 'சரியோ தப்போ ஒரு கோலத்தை கலைச்சது நான்தான். முடிஞ்ச வரைக்கும் நான்தான் அதை சரியும் பண்ணனும். பண்றேன்!!! எல்லாத்தையும் சரி பண்ண முயற்சி பண்றேன்' என்றான் சின்ன புன்னகையுடன்.