விஷ்வா காதில் கேட்டது கெட்டிமேள சத்தம். இதோ அவன் கைக்கு வந்து விட்டது மாங்கல்யம். ஆனந்த வாழ்த்துக்களுக்கும், பூ மழையும் பொழிய அவள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான் விஷ்வா.
எல்லார் பார்வையும் அங்கே மணமக்கள் மீதே இருக்க சட்டென பரத்தின் கன்னத்தில் விழுந்தது அபர்ணாவின் அடுத்த முத்தம்.
ஹேய்... ராட்சசி .. ' அவன் சுதாரிப்பதற்குள் அவனிடமிருந்து தப்பித்து வேறுபக்கம் போய்விட்டிருந்தாள் பெண். இங்கே விஷ்வா வாங்கி வைத்திருந்த மெட்டியும் இந்துஜாவின் பாதம் சேர்ந்தது அழகாக!!!
'இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கீங்க . ஆனா அதுக்கான விதை நான் போட்டது' என்று சிரித்தபடியே டாக்டர் புவனா வந்து வாழத்திவிட்டுப்போக எங்கெங்கும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.
விஷ்வா திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்தது!!!!
அன்று காலையில் வந்திருந்தது அந்த பத்திரிக்கை. அடுத்த வாரம் இசையமைப்பாளர் ஸ்ரீஜாவுக்கு கோயம்புத்தூரில் திருமணம். அந்த ஊரை பற்றி நினைத்ததுமே பரத்தினுள்ளே ஏதேதோ நினைவலைகள்!!!!
எத்தனை வேலைகள் இருந்தாலும் இரவில் அபர்ணாவை தனது கைகளுக்குள் சேர்த்துகொள்வதை மட்டும் நிறுத்தவில்லை பரத். அவளுமே அதை ரசிக்கிறாள் என்று புரிகிறது அவனுக்கு. ஒரு நாள் நான் அப்படி செய்யவில்லை என்றால் என்ன செய்வாளாம்??? யோசித்துக்கொண்டே இருந்தான் பரத்.
காலையில் கிளம்பும் போதே சொல்லிவிட்டுத்தான் கிளம்பினான். நான் இன்னைக்கு வர லேட் ஆகும் .நீ சாப்பிட்டு தூங்கிடு கண்ணம்மா!!!
புரண்டு புரண்டு படுக்கிறாள். தூக்கம் வரும் தூரத்திலேயே இல்லை.. அவன் கைக்குள் என்ன மாயம் இருக்கிறதான் புரியவே இல்லை அவளுக்கு.
நேரம் இரவு ஒன்றை தொடும் போது வந்து சேர்ந்தான் அவன். வந்து படுக்கையில் விழுந்தவன் அவள் தவிப்பை ரசித்தபடியே படு மும்முரமாய் கைப்பேசியை துழாவிக்கொண்டிருக்க அவன் கைக்குள் சுருண்டுக்கொள்ளவே தேடுகிறது அபர்ணாவுக்கு.
சில நிமிடங்கள் கழித்து 'சரிமா... எனக்கு ரொம்ப தூக்கம் வருது. குட் நைட்' கண்களை மூடி படுத்துவிட்டிருந்தான்.
'குட் நைட்' அவளும் கண்களை மூடிக்கொண்டாள். கடிகார முள்ளின் சத்தம் மட்டும் அறையில் ஒலித்துக்கொண்டிருக்க
'எப்போதும் என்னை அழைப்பது இவன்தானே இன்று என்னவாயிற்று இவனுக்கு??? மறந்துவிட்டனோ??? அழைத்து விடுவான். இப்போது அழைத்து விடுவான் தவிக்கிறது அவள் உள்ளம்.
'திருடன்... திருடன் இவன். வேண்டுமென்றே செய்கிறான் இவன்..' புரிகிறது இவளுக்கு. 'போய் விடவா. நான் சென்று அவன் கைகளுக்குள் சேர்ந்து விடவா???
எப்படியாம்??? அது எப்படி போவதாம்??? ஒரு முறை ஒரே ஒரு முறை அழைத்துவிடு. நான் வந்து விடுகிறேன்.
ஒரு நமிடம் இரண்டு நிமிடங்கள் மூன்று நிமிடங்கள் கடக்க அவள் மனம் புரிந்திருக்க வேண்டும் அவனுக்கு.
'கண்ணம்மா.. அவன் குரல் மெல்ல அவளை வருட அவன் கை அவளை நோக்கி நீளுவதற்கு முன்பே அவன் கைகளுக்குள் அடைக்கலம் ஆகி இருந்தாள் அபர்ணா.
'லவ் யூ. .' நெகிழ்ச்சியுடன் சொல்லியபடியே அவன் நெஞ்சில் அவள் முகம் புதைக்க, சிலிர்த்து போனான்!!!
அந்த லவ் யூவில் நிறையவே புரிகிறது பரத்துக்கு. அவளது மனதில் இன்னொரு பூ பூக்க ஆரம்பித்திருப்பது புரிகிறது அவனுக்கு.
'நீ என் ஃபர்ஸ்ட் லவ்வா இருந்திருக்க கூடாதான்னு இருக்கு...' அன்று அவள் சொன்னது அவன் நினைவலைகளில் வந்து போக சின்னதாய் ஒரு எண்ணம்!!!
'ஏன் கண்ணம்மா அடுத்த வாரம் கோயம்புத்தூர்லே நம்ம ஸ்ரீஜாக்கு கல்யாணம் போகலாமா??? என்றான் மெதுவாக
கோயம்புத்தூர்!!!
ஸ்ரீஜாவின் திருமணம்!!! திரை உலகினர் கலந்துக்கொண்ட கோலாகல திருமணம்தான் அது. இவர்கள் இருவரும் பாடி இப்போது பிரபலமாக இருக்கும் அந்த பாடல்கள் பற்றிய பேச்சும் பாராட்டுக்களும் கூட வந்துக்கொண்டிருந்தது. ஆனால் இதில் எதுவுமே மனம் ஒட்டவில்லை அவனுக்கு.
'போக வேண்டும். அந்த இடத்துக்கு போக வேண்டும். என்னவள் என்னதான் செய்கிறாள் என பார்க்க வேண்டும்!!!
மாலை மூன்று மணி!!!! மேகக்கூட்டங்கள் சேர்ந்திருக்க, சிலு சிலு தூறல் விழுந்துக்கொண்டிருக்க
'நாம எங்கே போறோம் பரத்...' காரில் பயணித்தபடியே கேட்டாள் அபர்ணா.
'சர்ப்ரைஸ். போனதுக்கு அப்புறம் நீயே சொல்லு அது என்ன இடம்னு..' என்றான் பரத்!!! வந்து சேர்ந்தார்கள் அந்த இடத்துக்கு!!!