தன் சொந்த உழைப்பில் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் திறன்கூட இல்லா வயதில் காதலிப்பது சரியா? தவறா?
நாம் தேர்ந்தெடுப்பவர் அவர் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றி முழுமையாக அறியாமல் வெறும் கண்மூடித்தனமாக நம்பிக்கையை மட்டுமே கொண்டு அவரோடு இணைதல் சரியா? தவறா?
இளம் வயதினரின் முதிர்ச்சியில்லா காதலால் பலர் துன்புறுகின்றனர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.அவரவர் எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடுதல் சரியாய் இல்லாமல், உடனக்குடன் எடுக்கும் முடிவு அவர்களின் உற்றோரை பலவாறு பாதிக்கிறது.
தொலைப்பேசியின் அழைப்பு ரன்விதாவின் சிந்தனையை களைக்க அவசரத்துடன் அதை எடுத்தாள்.அழைப்பு மாகிரிடமிருந்து என்பதால்,பதட்டத்துடனே காதில் வைத்தாள்.
ஹலோ! ரன்வி ஹலோ...
ஆங்! சொல்லுங்க மாகிர், பமி பற்றி எதாவது தகவல் கிடைத்ததா? எதுவும் பிரச்சனை இல்லையே.
இங்க அவளோட சில தோழிகள்கிட்ட விசாரித்ததில் அவள் தினமும் ஒரு பையனோட மாலையில் வெளியே போயிருக்கா,அவன் தினமும் விடுதிக்கு எதிரே உள்ள கடையில் அவளுக்காக காத்திருப்பான் என்பதுவரை உறுதியா சொல்றாங்க.கடந்த மூன்று மாசமாதான் அவர்களுக்குக்குள் பழக்கம் தோன்றியிருக்கு.இவ இங்க வீட்டுக்கு போறேனு சொல்லி முந்தா நாள் பகலில் கிளம்பி இருக்கா. இதுமட்டும்தான்மா இப்ப தெரிஞ்சிருக்கு.அந்த பையனைப் பற்றி பெரிசா ஒன்றும் தெரியல.கடைக்காரரிடம் விசாரித்ததில் அவன் பெரியிடத்துப் பையன் போல் இருப்பானு சொன்னாரு.மேலும் எதும் தகவல் தெரியுதா என்று பார்த்துட்டு வரேன்.நீ தைரியமா இரு.நான் உன்கூடதான் இருக்கேன் புரியுதா.போனை வைக்கிறேன் மா.
அமைதியாய் எந்தவொரு குறுக்கீடுமில்லாமல் கேட்டவளின் நெஞ்சம் பிரளயத்தில் சிக்கியதுப்போல் இருக்க,முகமோ ஒரு கடின அமைதியை முகமூடியாய் அணிந்துக் கொண்டது.
எங்கு தான் தவறினோம், ஒருவேளை அம்மா இருந்திருந்தால் இம்மாதிரி எல்லாம் நடந்திருக்காதோ? நான்தான் தங்கையை சரியாய் கவனிக்கவில்லையோ? என்று எதோ எண்ணங்களின் தாக்கத்தினால் குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தாள் ரன்வி.
மறுநாள் இரவும் வந்தது,ஆனால் மாகிரிடமிருந்து தகவல்தான் வரவில்லை.
தங்கையைப் பற்றிய கவலையோடு தன்னவன் பற்றிய கவலையும் சேர்ந்துக்கொள்ள ரன்வியின் நிலைமை மோசமானது.
ஏனோ வாழ்வில் ஒரு நிலையில் இருந்து முன்னேறி வரும் பொழுதெல்லாம் இடையில் எதேனும் நிகழ்வு நடந்தேறி கவலை அடைய வைக்கிறது.காதலித்துப் போராடி திருமண நிலைக்கு சென்றுவிட்ட இப்பொழுது, தங்கையின் செய்கையால் பிரச்சனை என்று எண்ணம் தோன்றினாலும்,தன் வாழ்க்கையை விட தன் தங்கையின் நலனே முதன்மையாய் தோன்றியது ரன்விக்கு.தங்கை காதலித்ததை விட அவளின் இச்செயல்தான் அவளை மிகவும் பாதித்தது.
எதையும் முறையாக செய்யும் ரன்விக்கு தங்கையீன் முறையற்ற செயல் மனதை மிகவும் வதைத்தது.
காலம் இருக்கும் நிலையில் மனிதர்களை பிரித்தறிவது பெரியவர்களுக்கே பெரும்பாடாய் இருக்க, இளையவளை நினைத்து வருந்தினாள் ரன்வி.
தங்கையின் செய்கையினால் ரன்வியின் வாழ்வில் நடக்கப் போகும் நிகழ்வுகள் யாவை? காரணமாய் இருப்பவர்கள் யார்?
வாளின் கூர்மையாய்
மனதிலெழும்
கேள்விகள் பல
விடை மட்டும்
விடுகதையாய்...
விடை தேடும் பல கேள்விகள் தொடரும்...
நண்பர்களே! காதலைப் பற்றி என்னுடைய கருத்தின் ஒரு பகுதியைத்தான் இப்பதிவில் பதித்திள்ளேன்.உங்களுக்கு ஏதேனும் முரண்பாடுகள் தோன்றினால் தயங்காமல் பகிருங்கள். உங்களின் கருத்துக்கள் மற்றவருக்கு வழிக்காட்டியாய் கூட இருக்கலாம்.நன்றி
விடை தேடும் பல கேள்விகள் தொடரும்...
{kunena_discuss:1124}