"மனசுல பெரிய மெக்கானிக்னு நினைப்பு" என மனதினில் நினைத்தபடி வண்டியை விட்டு கீழிறங்கினான் ஜான்.
ஜெஸிகா வண்டியை ஸ்டார்ட் செய்தாள். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. "என்ன வண்டி வச்சிருக்கானோ" என சபித்தவள் "இஞ்சின்ல என்ன ஆகியிருக்குனு பாரு" என்று ஜானின் மேல் எரிந்து விழுந்தாள்.
"எல்லாம் என் தலை எழுத்து" என தன்னைத்தானே நொந்துகொண்டு இஞ்சினை ஆராய்ந்தவனால்.என்ன ரிப்பேர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
"ஜெஸ்ஸி நான் காரை தள்ளுறேன் நீ ஸ்டார்ட் பண்ணுறியா?"
"சரி"
மழையில் நனைந்தபடி காரை சிறிது தூரம் தள்ளினான் ஜான். ஜெஸிகா ஸ்டார்ட் செய்தாள். பலனளிக்கவில்லை.
"ஜெஸ்ஸி ஒழுங்கா ஸ்டார்ட் பண்ணு"
"நான் சரியா தான் செய்றேன். நீ எனக்கு ஆர்டர் பண்ணாத"
"கோபத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை" என்று சொன்னபடி மீண்டும் சிறிது தூரம் தள்ளினான்.
வண்டி ஸ்டார்ட் ஆனது. ஜெஸிகா நிம்மதிப் பெருமூச்சை வெளியேற்றினாள். ஜான் காரில் அமர்ந்து காரை செலுத்தினான்.
"இந்த தடவை எந்த தடையும் இல்லாம கார் போகணும்" என்று ஜான் சொல்லவும் கார் மீண்டும் நிற்கவும் சரியாக இருந்தது.
ஜெஸிகா ஜானை முறைத்தாள். காரை ஸ்டார்ட் செய்தான். ஸ்டார்ட் ஆகவில்லை. மீண்டும் கீழிறங்கி காரை தள்ளினான். ஜெஸிகா ஸ்டார்ட் செய்து ஸ்டார்ட் செய்து களைத்து போனாள். எப்படியோ ஒருவழியாக வண்டி ஸ்டார்ட் ஆக ஜெஸிகாவின் முகத்தில் சந்தோச புன்னகை உருவானது.
பேருந்து நிறுத்தத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். முன்பை விட மழை இப்பொழுது அதிகமாய் தூறிக்கொண்டிருந்தது. மூன்று பேர் மட்டும் குடையைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தனர்.
"தேங்க யூ ஜான்" என காரை விட்டு கீழிறங்கினாள் ஜெஸிகா. "உனக்கு தொந்தரவு கொடுத்திருந்தா என்னை மன்னிச்சுடு"
"புதுசா இருக்கு"
"என்ன?"
"நீ இப்படியெல்லாம் பேசி நான் பார்த்தது இல்லை"
"உனக்கு ஒண்ணு தெரியுமா ஜான்?"
"சொல்லு"
"உன்னை எனக்கு பிடிக்காது"
"சரி"
"நான் உன்னை தேடி உன் வீட்டுக்கு வரல. ஷூட்டிங்க்கு வீடு ஒண்ணு தேவைப்படுது அதான் பார்க்க வந்தேன். இனி நான் அங்க வரமாட்டேன்"
ஜான் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான்.
ஜெஸிகா விறுவிறுவென மழையில் நனைந்தபடி சென்றாள்.
நீண்ட நாட்களுக்குப் பின் நாராயணன் வெளியுலகக் காற்றை சுவாசித்தார். இந்த உலகில் எது மிகவும் கொடுமையான இடம் என்று அவரிடம் கேட்டால், நிச்சயம் அது மருத்துவமனை என்கின்ற பதில் தான் வரும்.
உயிரைக் காப்பாற்றுகிறேன் என்ற போர்வையில் உடலில் ஏகப்பட்ட சோதனைகளைச் செய்து கொடுமைப்படுத்திவிட்டதாய் அவர் உணர்ந்தார்.
குணமடைந்து வீட்டிற்கு எப்போது செல்லுவோம் என்று ஒவ்வொரு நாளையும் எதிர்பார்த்தவர், சில சமயம் வீட்டிற்கு செல்லுவோமா என்றும் சந்தேகப்பட்டார். மூன்று நாட்கள் முன்னதாகவே டிஸ்சார்ஜ் ஆக வேண்டியவர், உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டதால் சில சிகிச்சை முறைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு தாமதமாகத் தான் டிஸ்சார்ஜ் ஆனார்.
அவரை டிஸ்சார்ஜ் செய்தபோது மருத்துவர்கள் கூறியதை வசந்த் நினைவுபடுத்திப் பார்த்தான்.
வசந்தும் மேகலாவும் மருத்துவர் முன் அமர்ந்திருந்தார்கள்.
"நான் எதுக்கு கூப்பிட்டு இருப்பேன்னு உங்களக்கு தெரியும்னு நினைக்கிறன்"
இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
"உங்க அப்பா உடலளவிலும் மனதளவிலும் பலவீனமாக இருக்கார். அவருக்கு இப்போ தேவைப்படுவது அன்பும் ஆறுதலும் தான். அவருக்கு பிடிக்காத எதையும் அவர் கண் முன்னால் செய்யாதீர்கள். அவருக்கு தேவையான உணவு முறைகளை ஏற்கனவே உங்க கிட்ட சொல்லிருக்கேன். அவர் வயதானவர், மருந்து சாப்பிட மறக்கிறதுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கு. மருந்து மாத்திரைகளை நீங்கள் தான் சரியான நேரத்தில் கொடுக்கவேண்டும். அவர் தப்பே செஞ்சாலும் பொறுத்து போங்க. அவர் மனம் புண்படும்படியாக எதையும் பேசாதீர்கள்"
வசந்தம் மேகலாவும் சரி என்று தலையாட்டிவிட்டு டாக்டரிடம் விடைபெற்றனர்.